Skip to main content

உங்ககிட்ட ஒண்ணு கொடுக்கச் சொன்னாக, அதுக்குத்தான் வந்தேன்'னு சொன்னதும்...

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவரின் கொலைக்குக் காரணமான கார்த்திகேயனை மடக்கிப் பிடித்த தனிப்படையினர் அவனது க்ரைம் ஹிஸ்டரியையும் அலசி ஆராய்ந்துள்ளனர். இன்ஜினியரிங் படித்திருக்கும் கார்த்திகேயன், போட்டோகிராபியிலும் ஆர்வம் உள்ளவனாம். இந்த போட்டோ ஆர்வம்தான் தெருவில் கோலம் போடும் பெண்களை ஆபாசமாக படம் எடுக்க வைத்துள்ளது. இப்படித்தான் ஒரு பெண்ணை போட்டோ எடுத்த போது பிரச்சனையாகியிருக்கிறது. அந்தப் பிரச்சினையை திசை திருப்ப, அந்தப் பெண் வீட்டின் கார் தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதுவும் பெரிய பிரச்சனையானபோதுதான் தீண்டா மைச் சட்டத்தின்படி அந்தப் பெண்ணின் குடும்பத்தார் மீது கார்த்திகேயன் புகார் கொடுக்க, கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாக கோர்ட்டிற்கு அலைந்துகொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

 

nellai



மேயராவதற்கு முன்பிருந்தே, உமா மகேஸ்வரிக்கும் சீனியம்மாளுக்கும் நல்ல நட்பு உண்டாம். சீனியம்மாளின் கணவர் சன்னாசியும் நெடுஞ்சாலைத்துறையில் கீழ்மட்ட பணியாளராக வேலை பார்த்ததால், அதே துறையின் ஏ.டி.யான உமா மகேஸ்வரியின் கணவர் முருகசங்கரனுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார். எம்.எல்.ஏ. சீட்டுக்காக தனது தாய் சீனியம்மாள் கொடுத்த பணத்தைக் கேட்டு, உமா மகேஸ்வரியிடமும் முருக சங்கரனிடமும் தொடர்ந்து பேசி வந்திருக்கிறான் கார்த்திகேயன். ஒரு கட்டத்தில் கார்த்திகேயனுக்கும் முருகசங்கரனுக்கும் இடையே விவகாரம் பெரிதாகி மோதல் வரை போயிருக்கிறது. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்புமே போலீசில் புகார் செய்யவில்லையாம். இதற்கிடையே முருகசங்கரனைப் பற்றிய ரகசிய மேட்டர் ஒன்று கார்த்திகேயனிடம் சிக்கியதால், "நம்ம பணம் நம்ம கைக்கு வந்திரும்' என பொறுமை காத்திருக்கிறான் கார்த்திகேயன்.

 

nellai incident



அதேபோல் தனியாக, ஒதுக்குப்புறமாக வசித்தாலும் உஷாராக இருப்பாராம் உமா மகேஸ்வரி. வீட்டிற்கு யார் வந்து அழைப்பு மணியை அழுத்தினாலும், கதவில் பொருத்தியிருக்கும் வியூ லென்ஸ் வழியே பார்த்து, தெரிந்த முகமாக இருந்தால்தான் கதவைத் திறப்பாராம். இதேபோல் தனது கணவரின் நடவடிக்கைகளையும் உமா மகேஸ்வரி கண்காணித்தபடியே இருப்பாராம். நாட்கள்தான் கடந்து போகிறதே தவிர, கொடுத்த பணம் கைக்கு வந்தபாடில்லையே என்ற கோபத்துடனும் கைவசம் இருந்த முருக சங்கரனின் ரகசிய மேட்டருடனும், கொலை தினமான ஜூலை 23—ஆம் தேதி உமா மகேஸ்வரியின் வீட்டிற்குப் போயிருக்கிறான் கார்த்திகேயன். அதன் பின் என்ன நடந்தது என்பதை போலீசில் சிக்கிய பின் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறான் கார்த்திகேயன். அந்த வாக்குமூலம் இதோ.

  nellai



அன்னைக்கு காலையில உமா மகேஸ்வரி வீட்டுக்கு தனியாகத்தான் போனேன். கதவைத் தட்டியதும் முதலில் திறக்கமாட்டேன்னு முருக சங்கரன் சொன்னார். "எங்கம்மா உங்ககிட்ட ஒண்ணு கொடுக்கச் சொன்னாக, அதுக்குத்தான் வந்தேன்'னு சொன்னதும் கதவைத் திறந்தார். பணப் பிரச்சனையை பேசிக்கிட்டிருந்தப்பவே பிரச்சனை பெரிசாயிருச்சு. இதனால் கோபமான உமா மகேஸ்வரி, வெளியே போன்னு கத்தினார். இதனால் ஆத்திரமான நான் மறைச்சு வச்சிருந்த கத்தியால ரெண்டு பேரையும் குத்தினேன். அந்த நேரம் பார்த்து கார்த்திகா வீட்டுச் சாவியைக் கொடுக்க வந்த மாரியம்மா, ரெண்டு பேர் ரத்தம் சொட்டக் கிடந்ததைப் பார்த்துட்டு அலறுனா. அவ சத்தத்தை அடக்குறதுக்காக, அவளோட பின்னங்கழுத்துல கத்தியால குத்தினேன். அப்புறம் சாவகாசமா தடயங்களை அழிச்சிட்டு, சீவலப்பேரி தாமிரபரணி ஆத்து பாலத்துக்கடியில ரத்தக்கறை படிந்த உடைகளைக் கொளுத்திட்டு, கத்தியையும் அங்கேயே வீசிட்டுப் போய்ட்டேன்'' -இதுதான் கார்த்திகேயனின் வாக்குமூலம்.


தனிப்படை போலீசாருக்கோ, கார்த்திகேயன் மட்டும் தனியாக போய் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. கூலிப்படையின் உதவியுடன்தான் இது நடந்திருக்க வேண்டும். ஏன்னா உமா மகேஸ்வரியின் வீட்டு பீரோவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கார்த்திகேய னின் வீட்டிலிருந்து கைப்பற்றியிருக்கிறது போலீஸ். ஆனால் கப்போர்ட்டில் தோல் பையில் இருந்த வெயிட்டான நகைகள் கூலிப்படை வசமிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைக் கொண்டுசெல்கிறது தனிப்படை. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரனிடம் நாம் பேசியபோது, "நான் ஒருத்தன் மட்டும்தான் பண்ணினேன் என்கிறான். ஆனால் மற்றவர்களுக்கும் இதில் தொடர் பிருக்கிறதா என்ற அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது'' என்றார். என் மகன் மீது அபாண்டமாக பழி போட்டிருக்கிறார்கள். அவன் நிரபராதி என்று சட்டப்படி நிரூபிப்போம்'' என்கிறார் கார்த்திகேயனின் தாய் சீனியம்மாள்.

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.