Skip to main content

நீட் எனும் ஈட்டியால் குத்திக் கிழிக்கப்படும் சமூகநீதி!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்களே… அதை யாரும் பாராட்ட மாட்டார்கள். நீட்டை அரசியலாக்குவதே வேலையாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
 

neet

 

 

யார் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? தேர்ச்சி பெற்றவர்களுக்கெல்லாம் மருத்துவ இடங்கள் இங்கே இருக்கின்றனவா? இருக்கிற இடங்கள் போக மீச்சமுள்ள தேர்ச்சி பெற்ற 7 லட்சம் பேருக்கு என்ன வாய்ப்பு வைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் பதிலே இல்லை.
 

அனிதாவை பலிகொடுத்த பிறகு நடைபெறும் மூன்றாவது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தமாக 14 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதாவது மொத்தத்தில் 56.50 சதவீதம் பேர்.
 

தேர்ச்சி பெற்றவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த நளின் கண்டேல்வால் என்ற மாணவர் 720க்கு 701 மார்க்குகளும், டெல்லி, மற்றும் உபியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்களும் எடுத்திருக்கிறார்கள்.
 

ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 7 லட்சத்து 80 ஆயிரம் பெண்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து, 761 பேரும், 6 லட்சத்து 30 ஆயிரம் ஆண்களில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 278 பேரும் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
 

அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து அரசுக்கு இருக்கிற 36 ஆயிரத்து 615 இடங்களுக்கும் தேர்ச்சி பெற்றிருக்கிற 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 மாணவர்களுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது?
 

இருக்கிற இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு மிச்சமுள்ள மாணவர்களுக்கு ஏது இடம்? இவர்களுடைய தேர்ச்சி அடுத்த ஆண்டுக்கோ, அடுத்துவரும் ஆண்டுகளுக்கோ மருத்துவ இடங்களைப் பெறுவதில் முன்னுரிமை பெற்றுத்தருமா? என்ற கேள்விகளை பெற்றோர் எழுப்புகிறார்கள்.
 

neet suicide

 

 

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்காக ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிகள் நடத்தும் கோச்சிங் சென்டர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிப்பார்கள். அவர்களில் சில லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டும் இடம்பெற்று படிக்கப் போவார்கள். கனவுகளுடன் லட்சக்கணக்கில் செலவழித்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விரல்சூப்பிக் கொண்டு அடுத்த ஆண்டும் நீட் தேர்வுக்கு காத்திருக்க வேண்டும். ஒரு பேச்சுக்கே வைத்துக்கொண்டாலும் 1 லட்சம்பேர் 720க்கு 700 மார்க் எடுத்துவிட்டால் எந்த அடிப்படையில் இடங்களை நிரப்புவார்கள்? மிச்சமிருக்கிற மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
 

இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றிருக்கிற மாணவர்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 20 ஆயிரத்து 9 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 63 ஆயிரத்து 749 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிற நிலையில், உயர்ஜாதியினர் 7 லட்சத்து, 4 ஆயிரத்து 335 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் எவ்வளவுபேர் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்ச்சி பெற்றவர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கு மட்டும் தெரியவில்லை என்றே போய்விடுகிறது.
 

இந்தத் தேர்ச்சி கணக்கு அகில இந்திய அளவிலானது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேர்ச்சி விகிதம் உயர்சாதியினரின் தேர்ச்சி விகிதத்துக்கு மிகக் குறைவாக இருப்பதையும், மத்திய அரசு அமல்படுத்தும் 49.5 சதவீத இடஒதுக்கீடுக்கும், தமிழகம் கடைப்பிடிக்கும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கும் தேர்ச்சி பெற்றவர்களை எப்படி நிரப்புவார்கள் என்பதும் பெற்றோரின் இன்னொரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
 

தேர்ச்சி பெற்றவர்களிலேயே லட்சக்கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் ஏமாறப் போகும் நிலையில், தேர்வு எழுதி பெயிலாகி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த அரசு தரும் பதில் என்ன?
 

எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, மிக சிம்ப்பிளாக, நீட்டை வைத்து அரசியல் செய்வதாக டாக்டர் தமிழிசை போன்றவர்கள் இன்னமும் சொல்வது, சமூக நீதியைக் குத்திக் கிழிக்கும் செயல் அல்லவா?

 

 

Next Story

தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா; கையும் களவுமாக சிக்கிய நபர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election flying squad caught the person who paid money to vote for the bjp

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இதனையொட்டி வாக்குப் பதிவுக்கான பணிகள் மாநிம் முழுவதும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தாமரை சின்னத்திற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை தேர்தல் படக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி  ஐஜேகே சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில்  வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை  நிலையான குழுவினர் அங்கு சென்றபோது அங்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா அழகரையை சேர்ந்த அஜித் என்பவரிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர்  பறக்கும் படையினர் அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.