Skip to main content

நெடுவாசல் மக்களை போராட தூண்டிய நாள்... பிப்ரவரி 16

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

neduvasal


 

2017 பிப்ரவரி 15 மாலை... மத்திய பா.ஜ.க அரசின் அறிவிப்பு நெடுவாசல் மக்களை தாமதமாக சென்றடைந்தது. அதற்குள் வெளிநாடுகளில் உள்ள நெடுவாசல் இளைஞர்களுக்கு அந்த அறிவிப்பு கிடைத்தது. அவர்கள் அனைவரும் பதைபதைத்தனர். எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் விவசாயத்தை அழிக்க மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர உள்ளதா? உடனே தங்களின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொண்டார்கள். இந்த திட்டம் நெடுவாசலில் வந்தால் சுற்றியுள்ள 100 கிராமங்கள் விவசாயத்தை இழக்கும். அதனால் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். பக்கத்து கிராமங்களுக்கும் பேசுங்கள். விவசாயிகளை திரட்டி அரசுக்கு கோரிக்கை வையுங்கள் எங்களால் உடனே வரமுடியாது என்றாலும் தாய் மண்ணுக்கு ஆபத்து என்றால் எந்த வேலையானாலும் உதறிவிட்டு ஊருக்கு வருகிறோம் என்று பரபரப்பாக சொன்னார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துவிட்டது.  


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை அறிவிப்பு வெளியிட  16 ந் தேதி காலை நெடுவாசல் கடைவீதியில் கிராம மக்கள் திரண்டு தொடங்கிய போராட்டத்தில் இரு பெண்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் கையெழுத்து போட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்கள். சுமார் 100 பேருடன் தொடங்கிய அந்த போராட்டம் தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் வெடித்தது. நெடுவாசல் போராட்டத்தில் சுமார் 100 கிராம மக்கள் பங்கேற்றதால் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் நாடியம்மன் கோயில் திடலில் திரண்டு போராட்டத்தை திருவிழா போல கலை, பாட்டு, கவியரங்கம், பேச்சு என்று கொண்டு சென்றனர். போராட்டக் களத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் விவசாய கருவிகளுடனும், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் வந்து கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். போராட்டக் களத்திற்கு வந்த மக்களை நெடுவாசல் மக்கள் இருகரம் கூப்பி வரவேற்று உணவு வழங்கினார்கள்.


 

neduvasal




முதல் கட்டமாக 22 நாட்கள் நடந்த போராட்டத் திருவிழாவில் மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நெடுவாசல் திட்டம் வராது என்று சொன்னதால் 22 வது நாள் மாலை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் போராட்டக் குழுவிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு ஜெம் நிறுவனத்திடம் கையெழுத்து போட்டதால் மக்கள் கொதித்தனர். அதனால் நெடுவாசல் சுற்றியுள்ள 100 கிராம மக்கள் திரண்டு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என்றனர். 


இந்த நிலையில் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் இரண்டாம் கட்டமாக போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திலும் அரசியல்வாதிகள், திரைதுறையினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று பலரும் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்! என்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் கவன ஈர்ப்பு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பிறகும் கவனிக்கப்படவில்லை. ஆனாலும் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. 


 

neduvasal




இப்படியே 174 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நவம்பர் 2 ந் தேதி காந்தி பிறந்த நாளில் போராட்டத்திற்கான உயர்மட்டக்குழு திடீரென நெடுவாசலில் கூடி போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டாம் கட்ட போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் நெடுவாசல் திட்டம் செயல்படுத்த முயற்சித்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்தனர்.
     

அதாவது காந்தி பிறந்த நாளில் காந்திய வழி போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்படும். மக்கள் போராடவில்லையே என்று மத்திய அரசு ஜெம் நிறுவனத்தை ஊருக்குள் அனுப்ப நினைத்தால் அடுத்து நடப்பது அமைதி வழி போராட்டமாக இருக்காது. அமைதி வழிப் போராட்டம் காந்தி பிறந்த நாளோடு முடிந்துவிட்டது. மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்க வேண்டுமா? நிறுத்த வேண்டுமா என்பதை மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர் நெடுவாசல் மக்கள்.


இந்த நிலையில் ஜெம் நிறுவனம்..  நெடுவாசல் கிராமத்திற்குள்ளும் நுழையமுடியவில்லை. தமிழக அரசின் அனுமதியும் கிடைக்கவில்லை அதனால் வேறு இடம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஜெம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நெடுவாசல் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.  ஆனால் கடந்த மாதம் ஜெம் நிறுவனத்தின் அதிகாரி நெடுவாசல் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் எங்களுக்கு உதவி செய்யும் என்று பேட்டி கொடுத்திருந்தார். இதனால் மீண்டும் நெடுவாசல் மக்கள் கொதித்துள்ளனர்.


எங்கள் விவசாயித்தை அழித்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று 100 கிராம மக்கள் இணைந்து போராடினோம். இப்போது கஜா வந்து எங்க போராட்டத்திடல் நாடியம்மன் கோயில் ஆலமரத் திடல் வரை பாதிக்கப்பட்டது. எங்கள் தென்னை, மா, பலா, தேக்கு மரங்கள் சாய்ந்தது. எங்கள் பிள்ளைகள் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்றோம் என்று சொன்ன நேரத்தில் கஜா எங்களை தாக்கியதால் வெளிநாடுகளில் உழைக்கும் எங்கள் பிள்ளைகளை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கி விட்டோம். எங்கள் மண் எங்களை வாழவைக்கும். இந்த துயரத்தை மறக்கும் முன்னாலயே மறுபடியும் ஜெம் நிறுவனம் நீதிமன்றம் உத்தரவு பெற்று வருவதாக சொல்லி இருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லவில்லை என்பது, எங்களை வேதனையிலேயே வைத்திருக்கிறது. இன்று பிப்ரவரி 16 போராட்டம் தொடங்கிய நாள்.. ஆனால் எப்ப மறுபடி வந்தாலும் 100 கிராம மக்களும் ஒன்றாக சேருவோம், போராடுவோம் ஒரு அடி கூட எடுத்து வைக்கவிடமாட்டோம் என்கின்றனர் இளைஞர்கள்.

 

 

 

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். 

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.