Skip to main content

நெடுவாசல் மக்களை போராட தூண்டிய நாள்... பிப்ரவரி 16

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

neduvasal


 

2017 பிப்ரவரி 15 மாலை... மத்திய பா.ஜ.க அரசின் அறிவிப்பு நெடுவாசல் மக்களை தாமதமாக சென்றடைந்தது. அதற்குள் வெளிநாடுகளில் உள்ள நெடுவாசல் இளைஞர்களுக்கு அந்த அறிவிப்பு கிடைத்தது. அவர்கள் அனைவரும் பதைபதைத்தனர். எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் விவசாயத்தை அழிக்க மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர உள்ளதா? உடனே தங்களின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொண்டார்கள். இந்த திட்டம் நெடுவாசலில் வந்தால் சுற்றியுள்ள 100 கிராமங்கள் விவசாயத்தை இழக்கும். அதனால் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். பக்கத்து கிராமங்களுக்கும் பேசுங்கள். விவசாயிகளை திரட்டி அரசுக்கு கோரிக்கை வையுங்கள் எங்களால் உடனே வரமுடியாது என்றாலும் தாய் மண்ணுக்கு ஆபத்து என்றால் எந்த வேலையானாலும் உதறிவிட்டு ஊருக்கு வருகிறோம் என்று பரபரப்பாக சொன்னார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துவிட்டது.  


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை அறிவிப்பு வெளியிட  16 ந் தேதி காலை நெடுவாசல் கடைவீதியில் கிராம மக்கள் திரண்டு தொடங்கிய போராட்டத்தில் இரு பெண்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் கையெழுத்து போட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்கள். சுமார் 100 பேருடன் தொடங்கிய அந்த போராட்டம் தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் வெடித்தது. நெடுவாசல் போராட்டத்தில் சுமார் 100 கிராம மக்கள் பங்கேற்றதால் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் நாடியம்மன் கோயில் திடலில் திரண்டு போராட்டத்தை திருவிழா போல கலை, பாட்டு, கவியரங்கம், பேச்சு என்று கொண்டு சென்றனர். போராட்டக் களத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் விவசாய கருவிகளுடனும், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் வந்து கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். போராட்டக் களத்திற்கு வந்த மக்களை நெடுவாசல் மக்கள் இருகரம் கூப்பி வரவேற்று உணவு வழங்கினார்கள்.


 

neduvasal




முதல் கட்டமாக 22 நாட்கள் நடந்த போராட்டத் திருவிழாவில் மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நெடுவாசல் திட்டம் வராது என்று சொன்னதால் 22 வது நாள் மாலை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் போராட்டக் குழுவிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு ஜெம் நிறுவனத்திடம் கையெழுத்து போட்டதால் மக்கள் கொதித்தனர். அதனால் நெடுவாசல் சுற்றியுள்ள 100 கிராம மக்கள் திரண்டு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என்றனர். 


இந்த நிலையில் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் இரண்டாம் கட்டமாக போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திலும் அரசியல்வாதிகள், திரைதுறையினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று பலரும் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்! என்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் கவன ஈர்ப்பு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பிறகும் கவனிக்கப்படவில்லை. ஆனாலும் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. 


 

neduvasal




இப்படியே 174 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நவம்பர் 2 ந் தேதி காந்தி பிறந்த நாளில் போராட்டத்திற்கான உயர்மட்டக்குழு திடீரென நெடுவாசலில் கூடி போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டாம் கட்ட போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் நெடுவாசல் திட்டம் செயல்படுத்த முயற்சித்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்தனர்.
     

அதாவது காந்தி பிறந்த நாளில் காந்திய வழி போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்படும். மக்கள் போராடவில்லையே என்று மத்திய அரசு ஜெம் நிறுவனத்தை ஊருக்குள் அனுப்ப நினைத்தால் அடுத்து நடப்பது அமைதி வழி போராட்டமாக இருக்காது. அமைதி வழிப் போராட்டம் காந்தி பிறந்த நாளோடு முடிந்துவிட்டது. மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்க வேண்டுமா? நிறுத்த வேண்டுமா என்பதை மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர் நெடுவாசல் மக்கள்.


இந்த நிலையில் ஜெம் நிறுவனம்..  நெடுவாசல் கிராமத்திற்குள்ளும் நுழையமுடியவில்லை. தமிழக அரசின் அனுமதியும் கிடைக்கவில்லை அதனால் வேறு இடம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஜெம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நெடுவாசல் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.  ஆனால் கடந்த மாதம் ஜெம் நிறுவனத்தின் அதிகாரி நெடுவாசல் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் எங்களுக்கு உதவி செய்யும் என்று பேட்டி கொடுத்திருந்தார். இதனால் மீண்டும் நெடுவாசல் மக்கள் கொதித்துள்ளனர்.


எங்கள் விவசாயித்தை அழித்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று 100 கிராம மக்கள் இணைந்து போராடினோம். இப்போது கஜா வந்து எங்க போராட்டத்திடல் நாடியம்மன் கோயில் ஆலமரத் திடல் வரை பாதிக்கப்பட்டது. எங்கள் தென்னை, மா, பலா, தேக்கு மரங்கள் சாய்ந்தது. எங்கள் பிள்ளைகள் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்றோம் என்று சொன்ன நேரத்தில் கஜா எங்களை தாக்கியதால் வெளிநாடுகளில் உழைக்கும் எங்கள் பிள்ளைகளை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கி விட்டோம். எங்கள் மண் எங்களை வாழவைக்கும். இந்த துயரத்தை மறக்கும் முன்னாலயே மறுபடியும் ஜெம் நிறுவனம் நீதிமன்றம் உத்தரவு பெற்று வருவதாக சொல்லி இருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லவில்லை என்பது, எங்களை வேதனையிலேயே வைத்திருக்கிறது. இன்று பிப்ரவரி 16 போராட்டம் தொடங்கிய நாள்.. ஆனால் எப்ப மறுபடி வந்தாலும் 100 கிராம மக்களும் ஒன்றாக சேருவோம், போராடுவோம் ஒரு அடி கூட எடுத்து வைக்கவிடமாட்டோம் என்கின்றனர் இளைஞர்கள்.

 

 

 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது