Skip to main content

ஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா?

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

பிரதமராவதற்கு முன்பு காங்கிரஸை தூற்றினீர்கள் சரி, பிரதமரான பிறகும் எப்போ பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும் காங்கிரஸையும், நேருவையும், இந்திரா காந்தியையும், சோனியாவையும், ராகுலையும் குறை சொல்வதையே வேலையாக வைத்திருக்கிறீர்கள். காங்கிரஸ் பரம்பரை ஆட்சி நடத்த பார்க்கிறது, காங்கிரஸ் ஊழல் செய்தது, காங்கிரஸ் நாட்டின் உயர் அமைப்புகளை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள்.

 

narendra modi



ஆனால், உங்களுடைய ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடியப் போகிற நிலையில் ஆண்டுக்கு இரண்டு கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்றும், கருப்புப்பணம் அத்தனையையும் கொண்டுவருவேன் என்றும் 2014 தேர்தலின்போது நீங்கள் அளித்த வாக்குறுதிகளின் கதி என்ன என்று கேட்டால், அதற்கும் காங்கிரஸையே குறைகூறுகிறீர்களே இது நியாயமா? காங்கிரஸையே குறைகூறும் நீங்கள் உங்கள் சாதனைகள் எதையுமே சொல்லி ஓட்டுக் கேட்க மாட்டீர்களா?

 

இன்னும் சில நாட்களில் ஜனநாயக திருவிழா தொடங்கவிருக்கிறது. மோடியின் செயல்பாடுகளுக்கான தீர்ப்பை மக்கள் வழங்கப்போகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுக்க முழுக்க காங்கிரஸையும் அதன் தலைவர்களை தூற்றியுமே காலத்தை கழித்துவிட்ட மோடி, அவர் உருவாக்க புதிய இந்தியா, டிஜிடல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற ஏராளமான இந்தியாக்களின் நிலையை பற்றி பேச மறுக்கிறார். ஆனால், இந்தியாவை அனைத்து மக்களும் வாழ்வதற்கான ஒரு தேசமாக அருமையான இடமாக மோடி மாற்றியிருக்கிறாரா என்பதைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது.

 

மோடி பிரதமராக பொறுப்பேற்ற 100 ஆவது நாளில் அவருடைய வாக்குறுதிகளை நினைவூட்டியவர்களிடம் மோடி என்ன சொன்னார் தெரியுமா? நான் என்ன செய்தேன் என்று ஐந்து ஆண்டுகள் கழித்து கேளுங்கள், 100 நாட்களிலோ, அடிக்கடியோ கேட்காதீர்கள் என்றார். இப்போது ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்றுவரை மோடி என்னவெல்லாம் செய்திருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் மக்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றெல்லாம் சொல்ல மறுக்கிறார்.
 

narendra modi


ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை. எழுதி வைக்காமல் அல்லது முன்கூட்டியே திட்டமிடாத பத்திரிகையாளர் சந்திப்பும் இல்லை. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்வி பதில்களுடன் ஒரிரு பத்திரிகையாளர் சந்திப்புகள் மட்டுமே நடந்தன. அவையும்கூட கேலிக்கூத்தாகவே முடிந்தன. இதெல்லாம் என்னா கணக்கு மிஸ்டர் மோடி? உங்களுடைய பதவிக்குரிய முக்கியத்துவத்தையாவது ஜனநாயக அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டாமா மிஸ்டர் மோடி?

 

பதவியேற்ற நான்காவது ஆண்டே அவருடைய பேச்சு மாறியது. “நான் ஏன் எதையும் செய்யவில்லை என்று கேட்கிறீர்களே, நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் ஏதாவது செய்ததா? அவர்கள் அதைச் சொல்ல முடியுமா? அவர்கள் அதற்கு பதில் சொன்னால் நான் ஏன் எதையும் செய்யவில்லை என்பதற்கு காரணம் சொல்கிறேன்” என்றார். இதெல்லாம் அறிவுப்பூர்வமான ஒரு பிரதமரின் பதிலாக இருக்க முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும்.

 

2015-2016 ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மோடி உரக்கக் கூறினார். அதைத்தொடர்ந்து, “ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிடல் இந்தியா” என்று பல இந்தியாக்களை உருவாக்கினார். அவை வெற்று முழக்கங்களாகவே போயின. இந்நிலையில்தான், மோடி தனது பேச்சை மாற்றினார்… “ஒரு பக்கோடா ஸ்டால் போடுவதுகூட தொழில்தான்” என்றார். “நீங்களே பாருங்கள் என் கண்முன்னே ஏராளமானோர் டிரைவர்களாகி இருக்கிறார்கள்” என்றார். இப்போது “நான் ஒரு காவல்காரன்” என்கிறார். இதன்மூலம், கோடிக்கணக்கான வாட்ச்மேன்களை உருவாக்கி இருப்பதாக கூறுவாரோ என்னவோ… தெரியவில்லை.
 

narendra modi


2015-16 ஆம் ஆண்டு, “2019ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்றார். பிறகு, 2022 க்குள் ஆக்குவோம் என்று மாற்றினார். 2018 ஆம் ஆண்டு பிரதமரே ஒரு விவசாயிதான் என்றார். இவர்தான் சொன்னார்… “நான் காங்கிரஸைப் போல விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய மாட்டேன். நான் விவசாயிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கு உறுதி அளிப்பேன்” என்றார். ஆனால், இப்போதோ, “விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பேன்” என்று வெட்கமே இல்லாமல் கூறுகிறார்.

 

அட, வேலைவாய்ப்பு, வருமானத்தை இரட்டிப்பாக்குவது எல்லாத்தையும் விடுங்க மோடி ஸார். 2014 தேர்தலில் உங்களுடைய முக்கியமான பிரச்சாரமே, இந்தியாவை சூப்பர் பவர் நாடாக மாற்றிக்காட்டுவேன் என்பதுதானே… ஆனால், இப்போதைய நிலையில் அதுக்கு காரணமே சொல்ல முடியாம போச்சு. வேலைவாய்ப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்கள், ரஃபேல் விமான பேரம் தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தொடர்பான விவரங்கள், பாஜகவுக்கு தேர்தல் நிதி வசூல் தொடர்பான விவரங்கள், பணமதிப்பிழப்பு இந்திய தொழில்கள் மற்றும் வேலை இழப்புகளில் ஏற்படுத்திய விளைவு, கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை உங்கள் ஐந்தாண்டு ஆட்சி நாசம் செய்திருக்கும் விவரங்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றாக தெரிந்துவிட்டது.

 

அடுத்த சில வாரங்கள் இந்தியா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நடக்கத்தான் போகிறது. அந்தப் பிரச்சாரத்திலாவது இந்த விஷயங்களுக்கு பதில் சொல்வீர்களா மிஸ்டர் மோடி? அதாவது கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன என்பதை விளக்கமாக பேசத் தயாரா மோடி? காங்கிரஸ் என்ன செய்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய பதிவு ஒன்றுக்கு சாதாரண மக்களும் வாக்காளர்களும் போட்டிருக்கிற பதில்களை படித்து பார்த்தாலே தெரியும்.

 

தயவுசெய்து, இயந்திரத்தனமாக எதுக்கெடுத்தாலும் காங்கிரஸ் பெயரையே உச்சரித்து, உங்களை நீங்களே செயலற்றவராகவும், வரலாற்று அறிவற்றவராகவும் காட்டிக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் மோடி!

 

 

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Congress struggles against the central government

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (30.03.2024) நாடு தழுவிய போராட்டம் நடத்த, அனைத்து மாநில தலைமையகம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமையகங்களில் அனைத்து காங்கிரஸ் பிரிவுகளுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Congress struggles against the central government

இது குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய ஜனநாயகத்தை முறியடிக்கும் முறையான செயல்பாட்டினை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கும் சட்டவிரோத முயற்சி நடந்து வருகிறது. நேற்று (28.03.2024) ரூ. 1823.08 கோடி ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையிடம் இருந்து புதிய நோட்டீஸ் வந்தது. ஏற்கனவே வருமான வரித்துறை காங்கிரசின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 135 கோடி ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த மோசமான தாக்குதலையும், முக்கியமாக மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் கட்சி மீது வரிப்பயங்கரவாதத்தை சுமத்துவதையும் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை (30.03.2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் பொது ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.