Skip to main content

”தமிழ்நாட்டில் இவ்வளவு பணிகள் நடந்திருக்கிறதா என வியந்தார் மோடி!” - வானதி சீனிவாசன்

Published on 17/09/2020 | Edited on 18/09/2020

 

Vanathi Srinivasan

 

பிரதமர் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்த நாளை தமிழக பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மோடி பற்றிய சில கருத்துகளை நக்கீரன் இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

 

மோடியை நேரில் சந்தித்தது எப்போது? மோடியுடனான சந்திப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள்...

 

நேரில் பல்வேறு நிகழ்ச்சிகளின்போது சந்தித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் உரையாடுவதற்கான வாய்ப்பு 2013 டிசம்பரில் எனக்குக் கிடைத்தது. கோவா செயற்குழுவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று அறிவிக்கப்பட்ட நேரம். அப்போது பட்டேல் சிலை அமைப்பதற்கான தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். பட்டேல் சிலை அமைப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகளிடம் இரும்பு மற்றும் கிராமத்தில் இருந்து மண், நீர் எடுக்கக்கூடிய பணிகள் நடந்துகொண்டிருந்தது. மாநிலம் முழுவதும் இதனை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குஜராத்துக்கு பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, இளைஞர்கள் பத்தாயிரம் பேர் பங்கேற்ற மிகப்பெரிய ஒற்றுமை ஓட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.

 

அதன் பின்னர் குஜராத்தில் மணி நகரில் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அவர் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தீஸ்வரன் கோவிலில் பூஜை செய்து கயிறு எடுத்துக்கொண்டு சென்றோம். சந்திக்க வேண்டும் என்று சொன்னபோது, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருப்பார் சந்திக்கலாம் என்று சொன்னவுடன் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தோம். 

 

அப்போது, பட்டேல் சிலை தொடர்பான பணிகள் குறித்த விவரங்களைச் சொன்னபோது, அதனைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். பட்டேல் சிலைக்காக தமிழ்நாட்டில் இவ்வளவு பணிகள் நடந்திருக்கிறதா எனச் சொல்லி பாராட்டினார். அந்த நேரத்தில் பத்திரிகையில் பட்டேல் பற்றிய கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன், அதனையும் காண்பித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். மிகவும் பொறுமையாக, அன்பாக பேசிக்கொண்டிருந்தார். 

 

Vanathi Srinivasan

 

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் தமிழ்நாட்டில் எப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது, தமிழில் விளம்பரங்கள் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று நான் சொன்னபோது, ஆமாம். தமிழ்நாடும், மேற்கு வங்கமும் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மாநிலங்கள். இதை மிகவும் கவனமாக எடுத்து அந்த மக்களுடைய மொழியில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்றார். மிகவும் முக்கிய நிகழ்வாக அந்தச் சந்திப்பு இருந்தது. என் வாழ்க்கையில் முக்கிய சந்திப்பாக அதனை நான் பார்க்கிறேன். 

 

அப்போது அவர் மாநில முதலமைச்சர். அவரை சந்திக்க அவரது வீட்டில் நுழைகிறோம். எங்களைப் பார்த்து எழுந்து நின்று 'ஸ்வாகதம்' என்று சொல்லி வரவேற்கிறார். அதேபோல நாங்கள் கிளம்பும்போதும் வெளியே வந்து வழியனுப்பி வைத்தார். ஒரு மாநில நிர்வாகி, அதிகாரத்தில் இல்லாத ஒரு நிலைமையில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது அவர் காட்டிய மரியாதை, பணிவு இவையெல்லாம் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. 

 

சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். அப்போது எல்லோருடன் அமர்ந்து உரையாற்றினார். அதன்பிறகு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது நாம் 'நமஸ்கார்', 'நமஸ்தே' என்று சொல்லும்போதுகூட அவர் 'வணக்கம்' என்று தமிழில் சொல்லுவார். 

 

Narendra Modi

 

மோடியிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் என்ன?

 

எத்தனை விமர்சனங்கள் நம் மீது வந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நம் பணியில் எவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரிடம் நான் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்.  

 

மோடி தலைமையில் இரண்டாது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக் காலத்தில் மோடியின் சிறந்த சாதனையாக எதைச் சொல்வீர்கள்?

 

பல்வேறு சாதனைகள் இருக்கிறது. ஒன்று, இரண்டு எனக் குறிப்பிட முடியாது. மிகக் குறைந்த காலத்தில் மக்களை வங்கிக் கணக்குகள் வாயிலாக இணைத்ததால், இன்று நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. இதற்கு மேலாக முக்கியமாக நான் பார்ப்பது, கழிப்பறைகள் கட்டுவது. கிராமத்தில் இருப்பவர்களுக்கு கழிப்பிடம் எவ்வளவு அவசியம் என்பது எனக்குத் தெரியும். இதில் அவர் முன்னெடுத்த விஷயத்தைச் சிறப்பான பணியாக நான் பார்க்கிறேன். 

 

Ad

 

நீங்கள் பின்பற்றும் தலைவருக்கு உங்கள் சொந்த மாநிலத்தில் எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும் தொடர்ந்து அதே பாதையில் பயணம் செய்ய உங்களுக்கு உத்வேகமாக இருப்பது எது?

 

கட்சியினுடைய கொள்கைகளில் இருக்கக்கூடிய தீவிரமான பிடிப்புதான். எங்கள் தலைவருக்கு இந்த மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், அந்த எதிர்ப்புகளை முறியடிக்கக்கூடிய ஆற்றலும், எங்களுடைய செயல்பாடுகளும் அதை மாற்றும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் பணியாற்றுகிறோம். இதே தலைவர் தலைமையிலான கூட்டணிக்கு கடந்த 2014ல் 19 சதவிகித வாக்குகளை தமிழகம் அளித்திருக்கிறது. அதனால் அவர் தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட தலைவர் கிடையாது.

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.