Skip to main content

"இது பச்சை அயோக்கியத்தனம்; பாஜகவை கேள்வி கேட்டால் உடனே காங்கிரசை துணைக்கு இழுப்பது ஒரு மனநோய்..." - நாஞ்சில் சம்பத்

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

ரகத

 

சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சிப் பணி பதவியிலிருந்து விலகிய மூன்றே நாட்களில் அவர் தேர்தல் அதிகாரியாக எப்படி நியமிக்கப்பட்டார் என்ற கேள்வியை அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வைத்தனர். இதுதொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, "மத்திய அரசு இதற்கு முன்பு இதே மாதிரியான நியமனங்களில் பலவித விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இது ஒன்றும் தற்போது நடைபெறுவதைப் போன்று பார்க்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற பல்வேறு நியமனங்களில் இத்தகைய விதிமீறல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று உள்ளது. 

 

தற்போதுதான் அது உச்சநீதிமன்றம் வரை புகாராகச் சென்று விசாரிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கேட்கும் எவ்வித கேள்விகளுக்கும் அவர்களால் சரியான முறையில் பதிலளிக்க முடியவில்லை. இப்போதுதான் உச்சநீதிமன்றம் விழித்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் சிரச்சேதம் செய்யப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றமும் தற்போது உணர்ந்துள்ளது. அங்கே தொட்டு இங்கே தொட்டு தற்போது தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அவர்களால் ஆன அயோக்கியத்தனத்தைச் செய்கிறது. அருண் கோயல் நியமனத்தின் மூலம் தற்போது இது வெட்ட வெளிச்சமாக மாறியுள்ளது. 

 

உச்சநீதிமன்றமே அவர்களைக் கண்டிக்கின்ற அளவுக்கு மோடியின் ராம ராஜ்ஜியம் இருந்துகொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் மோடி இந்நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய தார்மீக தகுதியை இழந்துவிட்டார். காலியாக ஒரு பதவி இருக்கிறது என்றால் ஒருத்தரை ஏற்கனவே இருக்கின்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரைப் புதிய பதவியில் அமர வைப்பியா என்றுதானே நாட்டில் உள்ள அனைவரும் கேட்கிறோம். இன்றைக்கு உச்சநீதிமன்றமும் அதே கேள்வியைத்தானே கேட்கிறது. இதை நாம் கூறினால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதே மாதிரியான பதவிகளை இதே போன்று நிரப்பி இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரசைப் பத்தி கேள்வி கேட்பது நாட்டில் ஒரு நோயாகவே மாறிப் போய்விட்டது. 

 

இவர்கள் சரியில்லை என்றுதானே பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் காங்கிரசைச் செய்யவில்லையா என்று கேள்வி கேட்டு இவர்களின் செயலை ஒரு பகுதியினர் நியாயப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது பச்சை அயோக்கியத்தனம். தங்கள் மீதுள்ள தவற்றை மறைக்க அடுத்தவர்களைக் குறை சொல்லுவதைப் போன்றது. இதைத்தான் இந்த எட்டாண்டு ஆட்சிக்காலத்தில் பாஜக தொடர்ந்து செய்து வருகிறார்கள். தற்போது மக்கள் முன் சரியான முறையில் அம்பலப்பட்டுப் போய் உள்ளார்கள், நீதிமன்றத்திடமும் சரியான முறையில் மாட்டியுள்ளார்கள்.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.