Skip to main content

விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவினாலும் பாஜகவால் அது மட்டும் முடியாது... நாஞ்சில் சம்பத் அதிரடி..

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
Nanjil Sampath

 

 

விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவினாலும் பாஜக தமிழக சட்டமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியாது என அரசியல் விமர்சகரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:-

 

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கை காட்டும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்கிறார்களே தமிழக பாஜக தலைவர்கள்...

 

அரசியல் மாற்றம் நடக்கப்போகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்கப்போகிறார்கள், கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து பாஜக ஆட்சியை திணிக்கப்போகிறார்கள் என்று அர்த்தம். ஆனால் இவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவினாலும் இவர்களது கட்சியைச் சார்ந்த ஒருவர் கூட சட்டமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியாது. அது மட்டும்  முடியாது. ஓலமிடும் கடல் ஊமையானாலும் ஆகும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. 

 

தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக உறுப்பினர்கள் செல்வார்கள் என்று மிக உறுதியாக சொல்கிறார்களே...

 

பாஜக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத்தான் பரிசாக தருவார்கள். 

 

தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது என தமிழக பாஜக செயற்குழுவில் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசியிருப்பது பற்றி... 

 

திமுக செய்த சாதனைகளை அறிவாலயத்தில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி பாடினான். அதை நடைமுறைப்படுத்தி காட்டியது திமுக ஆட்சி. திமுக ஆட்சியில்தான் இன்றைக்கு முதல் தலைமுறை பட்டதாரி ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாகியிருக்கிறார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் உழவர் சந்தையை திறக்கப்பட்டது. கிராமங்களுக்கு நடந்து சென்ற மக்களுக்கு மினி பேருந்து ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் கோட்டையில் சுதந்திரத் தினத்தன்று கொடியேற்ற உரிமை வாங்கித்தது திமுகதான். பாஜக தமிழகத்தில் காலூன்ற கனவு கண்டால் பெரியாரின் பூமியில், அண்ணாவின் நந்தவனத்தில் அது ஒருகாலம் நடக்காது.

 

வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்...

 

திமுக ஆட்சி அமைக்கவில்லை என்றால் இந்தியாவில் மாநில உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு வேறு அரசாங்கம் இருக்காது. இந்தியாவில் உள்ள 13 தலைவர்களுக்கு இடஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். வேறு யார் எழுதினார்கள். நேற்று முன்னுக்குப் பின் முதலமைச்சர் பேசுகிறார். கரோனாவை காரணம் காட்டி இந்த வருடம் நீட் தேர்வு வேண்டாம் என்கிறார். நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லுவாற்கு தைரியம் இல்லை. எல்லா இடத்திலேயேயும் கமிஷன். எங்கு பார்த்தாலும் ஊழல். எங்கே பார்த்தாலும் முறைகேடு. லஞ்ச லாவண்யம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த கொடியவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ்நாட்டு மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். திமுகதான் வர வேண்டும். திமுகதான் வரும் என்றார் உறுதியாக. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது