Skip to main content

"திருவாசகம் நூலுக்கு சோழ மன்னர்கள் செய்த மரியாதை" - தமிழ் வரலாறு கூறும் நாஞ்சில் சம்பத்!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், திருவாசகம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

சமயத்தை மறந்து தமிழை சிந்திக்க முடியாது; தமிழை மறந்து சமயத்தை சிந்திக்க முடியாது. தமிழால் சமயம் வளர்ந்ததா, சமயத்தால் தமிழ் வளர்ந்ததா என்று சேலத்தில் நடைபெற்ற மார்கழி பெருவிழாவில் நான் விவாதமே நடத்தியுள்ளேன். சமயச்சாரியர்கள் என்று கருதப்படுபவர்கள் தமிழுக்கு நிறைய செய்துள்ளனர். ஏனென்றால் தமிழுக்கு அகம் என்றும் புறம் என்றும் இரண்டாக பகுத்த மரபு இருக்கிறது. இறைவன் மீது கொண்ட காதலால் நாம் எழுதுகிற எழுத்தும் பாடுகிற பாடலும் அந்த மரபிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துவிடக்கூடாது என்று சிந்தித்து சமயச்சாரியார்கள் எழுதினார்கள். தன்னைக் காதலியாகவும் இறைவனை காதலனாகவும் எண்ணிக்கொண்டு எழுதிக்குவித்த இலக்கியங்கள் ஏராளம். 

 

கண்ணனை காதலித்து திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் ஆண்டாள் எழுதினார். பெரியாழ்வார் பெற்ற மகள் கோதை கண்ணனைத் தவிர இன்னொருவனை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பாடுகிறாள். இதுதான் தமிழின் மரபு. அக இலக்கியங்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ் இலக்கியங்களை எண்ணிப்பார்க்கவே முடியாது. ஜி.யு.போப், மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தை எலும்பை உருக்குகிற பாடல் எனக் குறிப்பிட்டார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் தித்திக்கும்; தேன் சொட்டும். படிக்க படிக்க உள்ளத்தை உருக்கும். தெற்குச்சீமையில் உள்ள திருக்குற்றாலத்திற்கு வருகை தந்த மாணிக்கவாசகர், ஈசனைக் கண்குளிர காண்கிறார். அவரைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என இறைவன் கேட்கிறார். 

 

அதற்கு மாணிக்கவாசகர், "உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே" என்பார். உறவினர் யாரும் வேண்டாம்; ஊர் வேண்டாம்; எந்தப் பெயரும் வேண்டாம்; கற்றவர்களும் வேண்டாம்; கன்று போட்ட பசுவிற்கு இருக்கும் ஈரமான இதயம் எனக்கு வேண்டும் எனப் பொருள் பதிந்துள்ள இப்பாடலை படிக்கும்போது எவருக்கும் நெஞ்சம் உருகிவிடும். மாணிக்கவாசகரின் இந்தப் பாடல் நூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்தும் பேசப்படுகிறது; சிந்திக்கப்படுகிறது. 

 

மானுடப்பற்று கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சமூகத்தில், அறத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்ற இந்தக் காலகட்டத்தில், மனிதாபிமானம் புதைந்து கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், மாணிக்கவாசகரின் ஒரு பாடலைப் படித்தாலே அந்தப் பாடல் நம் மனதில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய சிறப்புகள் உள்ளதால்தான் திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சொன்னார்கள். திருவாசகத்தை படித்து அருட்பிரகாச வள்ளலார் உருகினார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று தொடங்கும் பாடலில் இருந்து திருவாசகத்தை முடிவுவரை உள்ள பாடல்கள், கல்லாக இருக்கும் நெஞ்சத்தை கனிய வைத்துவிடும். 

 

மதுரைக்கு பக்கத்தில் திருவாதவூர் என்ற திருத்தலத்தில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டியபதியில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர். திருப்பெருந்துறை சிவன் மீது தீராத காதல் கொண்டவர். மன்னன் குதிரை வாங்குவதற்காக கொடுத்த பணத்தை வைத்து திருப்பெருந்துறையில் கோவில் கட்டி குடமுழுக்கு நடத்தியவர். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருத்தில்லை என்ற சிதம்பரத்தில்தான் அரங்கேற்றப்பட்டது. சோழநாட்டு மன்னர்கள் யானையின் மீது திருவாசகத்தை வைத்து ஊர்வலமாகக் கொண்டுவந்து மரியாதை செய்தார்கள். பூட்டப்பட்டு சிதிலமாகிக் கிடந்த சமய இலக்கியங்களுக்கு புத்துயிர் தந்ததில் சோழ மன்னர்கள் செய்த திருத்தொண்டு அளவிடற்கரியது.  திருவாசகம்தான் தமிழின் தகுதியையும் உயரத்தையும் உலகத்திற்கு பறைசாற்றியது. தமிழ்ப்படித்து தமிழனாகவே வாழ்கிற நமக்கு தெரியாத திருவாசகத்தின் அருமை கடல்கடந்து வாழக்கூடிய ஆங்கிலேயனுக்கு புரிந்தது. அதனால்தான் திருவாசகத்தைப் படித்துவிட்டு அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார் ஜி.யு.போப். திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு ஜி.யு.போப் எழுதிய முன்னுரையைப் படித்தால் திருவாசகம் எவ்வளவு உன்னதமானது என்பது நமக்குத் தெரியும். 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.