Skip to main content

சில்லரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 18/10/2019 | Edited on 19/10/2019

நாங்குநேரி தொகுதிக்குள் வரும் பெரிய ஊர் களக்காடு. இந்த ஊரில் இருக்கும் பெட்டிக் கடை ஒன்றில், காலை பேப்பர்களை வாங்க வந்தார் ஒரு இளைஞர். வெறும் 18 ரூபாய்க்கு பேப்பர்களை வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். "சில்லைரை இல்லயேப்பா''. "பரவால்ல அப்புறம் வாங்கிக்கிடுதேன், இல்லேன்னா பார்த்துக்கலாம்'' என அசால்டாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மதியம் 12 மணி டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது. குடி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தெரிந்த முகங்கள் என்பதால், வழக்கம்போல் 105 ரூபாய் சரக்கை நீட்டுகிறார் டாஸ்மாக் ஊழியர். "ஏலே கோட்டிக்காரா இந்த சரக்கை அடிச்சா உடம்பு என்னத்துக்காறது, 180 சரக்கு எடுலே''’என சர்வ சாதாரணமாக கேட்டு வாங்கிப் போகிறார்கள்.

 

admk



அந்தளவுக்கு தொகுதியில் பணப்புழக்கம் பெருத்தோடுகிறது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நட ராஜன் என தொகுதியை முற்றுகையிட்டிருந்தாலும் தொகுதிக்கு தலைமைப் பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணிதான். அனைத்து வகையான கவனிப்புகளையும் இவர்தான் கவனித்துக்கொள்கிறார். மாவட்டத்தின் பிரபலங்களான மனோஜ்பாண்டியனும் புறநகர் மா.செ.வான பிரபகாரனும் டம்மியாக்கப்பட்டதால், அவர்களின் ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் காண முடியவில்லை.

என்னதான் கையில் கரன்சிக் கட்டுக்களை வைத்துக்கொண்டு சுற்றினாலும் பல கிராமங்களில் மக்களைச் சமாளிப்பதே அமைச்சர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. மூலக்கரைப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அருகில் உள்ள தேவேந்திரகுல மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்றார். அப்போது கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் படங்களைப் போட்ட பிட் நோட்டீசை வினியோகம் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதைப் பார்த்து டென்ஷனான அம்மக்கள், "எங்க தலைவருங்கதான் உங்களுக்கு ஆதரவில்லைன்னு சொல்லிட்டாங்கள்ல, அப்புறம் எதுக்கு அவுக படத்தைப் போட்டீங்க'' என உஷ்ணமானதைப் பார்த்து பாதி வழியிலேயே திரும்பிவிட்டார் வெல்லமண்டி. அதேபோல் பட்டர்புரம் கிராமத்திற்கு அமைச்சர் காமராஜ் சென்ற சமயத்தில் ஒரு பஸ் வந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் காமராஜை சூழ்ந்து கொண்ட மக்கள், "இதுவரைக்கும் இந்த ஊருக்கு வராத பஸ், நீங்க வந்தன்னைக்கு மட்டும் வந்திருக்கு. அதே மாதிரி இங்க இருக்கும் ரேஷன் கடையால எங்களுக்கு எந்த பிரயஜோனமுமில்லை''’என ஆவேசமாகியிருக்கிறார்கள். அருகில் நின்றுகொண்டிருந்த மாஜி எம்.எல்.ஏ. மாணிக்க ராஜாவை கடுகடு முகத்துடன் காமராஜ் பார்க்க, திருதிருவென முழித்திருக்கிறார் மாணிக்கராஜா. இனிமேலும் இங்க இருந்தா சரிப்பட்டு வராது என நினைத்த காமராஜ், விருட்டென வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டார்.

கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் இலைக்கு ஆதரவில்லை என ஓப்பனாகவே சொல்லிவிட்டதால், 30,770 வாக்குகளைக் கொண்டிருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களின் பருத்திக் கோட்டை நாட்டார்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சிதம்பரம், பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் இலைத் தரப்பை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களை வழிமறித்து, கருப்புக் கொடி காட்டியதற்காக மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க. ந.செ.அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர்., உன்னங்குளம் கிராமத்தினர் சிலர் மீது நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர். போட்டு, கொதிநிலையை மேலும் கூட்டியுள்ளது ஆளும்கட்சி.


ஆனால் எல்லா பிரச்சினைகளையும் பணத்தால் சரிபண்ணிவிடும் முடிவுடன் அமைச்சர் தங்கமணி அள்ளி வீசிவருகிறார். பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்ட் கரன்சி சப்ளையாகியுள்ள நிலையில் ஓட்டுக்கு 2 ஆயிரம், அட்வான்ஸ் ஆயிரம் என மக்களைக் குஷிப்படுத்தும் வேலைகள் கன ஜோராக நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஈடாக இல்லையென்றாலும் ஓட்டுக்கு ஆயிரம், என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கிறார் காங்கிரசின் ரூபி மனோகரன். சில கிராமங்களுக்கு எம்.பி.வசந்தகுமாருடன் போனபோது, மக்களிடமிருந்து முணுமுணுப்பு கிளம்பியதால், ரூபி மனோகரனுடன் செல்வதை வசந்தகுமாரே தவிர்த்துவிடுகிறார். வி.சி.க.வின் 17,949 வாக்குகளையும் காங்கிரசுக்கு திருப்பிவிடும் முனைப்பில் தொகுதியை வலம்வருகிறார் வி.சி.க. தலைவர் திருமா.


ஐ.பெரியசாமி தலைமையிலான தி.மு.க. தேர்தல் படையின் சுறுசுறுப்புதான் காங்கிரஸ் ரூபி மனோகரனுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா மொத்தத்தையும் தி.மு.க.வினரிடம் ரூபி மனோகரன் ஒப்படைத்துவிட்டதால் லோக்கல் காங்கிரஸ் புள்ளிகள் அப்செட்டில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஐ.பெரியசாமி, அந்தப் புள்ளிகளை அழைத்து, அவர்கள் மூலமும் பட்டுவாடா செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார். இன்னும் இரு நாட்களில் இரண்டு தரப்பும் கரன்சி சப்ளையில் இறங்கும் என்பதால், தீபாவளி கோலாகலமாக இருக்கும் என்கிறார்கள் நாங்குநேரி தொகுதிவாசிகள்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.