நாங்குநேரியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் நாடார் சமூகத்தினர் தான். இதனால் அதிமுக, காங்கிரஸ் என 2 பிரதான கட்சிகளும் நாடார் சமூகத்தினரை களம் இறக்கி உள்ளது. அதிமுக வேட்பாளர் நாராயணன் இந்து நாடார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிறிஸ்தவ நாடார். இது தவிர ராக்கெட் ராஜாவின் 'பனங்காட்டு படை' சார்பில் ஹரி நாடாரும் களம் இறங்கி உள்ளார்.
இப்போது, ஹரி நாடாருக்கு எதிராக அவரது சமூகத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. "சிங் நாடார் அதன்பிறகு ராஜ் நாடார் உடன் கொஞ்ச நாள், அப்புறம் சுபாஷ் பண்ணையார் கூட கொஞ்ச நாள், இப்போது ராக்கெட் ராஜாவுடன் சுற்றித்திரியும் ஹரி நாடாருக்கும், நாடார் சமூகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?" என கேள்வி எழுப்பி உள்ளார் கோழி அருள்.
கோழி அருள் வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டுள்ள உரையாடலில், "ஜாதிக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் ராக்கெட் ராஜா, 1990 கால கட்டத்தில் கராத்தே செல்வினின் ஆரம்பித்த கட்சியை வழி நடத்தி இருக்க வேண்டும். அல்லது செல்வின் கூட இருந்த நாராயணன் இப்போது அதிமுக வேட்பாளராக நிற்கிறார். அவருக்கு தான் ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர, ஒவ்வொருத்தரிடமும் சென்று பிரிவினையை ஏற்படுத்திய ஹரி நாடாருக்கு ஆதரவு அளிக்கலாமா? செல்வின் படத்தை வைத்து ஓட்டுக் கேட்கலாமா?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்த எர்ணாவூர் நாராயணன் (இப்போது சமத்துவ மக்கள் கழகம்) 2011-ல் அதிமுக கூட்டணியில் நின்று நாங்குநேரி தொகுதியில் வென்றார். இம்முறை சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதால் நாடார் சமூக வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யலாம் என்பது ஆளுங்கட்சியின் திட்டம். ஆனால், அதற்கு செக் வைக்கும் வகையில் ஹரி நாடார் களம் இறங்கி உள்ளதால் ஓட்டுக்கள் சிதறும். இது காங்கிரசுக்கு 'கை' கொடுத்துவிடும். இதனாலேயே பனங்காட்டு படை கட்சிக்கு எதிராக கோழி அருளை ஆளுந்தரப்பே கொம்பு சீவி விடுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
யார் இந்த 'கோழி' அருள்?
பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சேர்ந்த தேவராஜ், பூபதி தம்பதியரின் மகன் தான், ‘கோழி’ அருள். இவருடைய அண்ணன் பெருமாள்புரம் பகுதியில் கோழிக்கடை வைத்திருந்தார். அந்தப்பகுதியில், ஏற்கெனவே அருள் என்பவர் சிறிய தாதாவாக உலா வர, இவரை வித்தியாசப்படுத்திக் காட்ட,‘கோழி’ அருள் என்று அவரது சகாக்கள் கூப்பிட ஆரம்பித்தனர்.
நாசரேத் கபிலன், கராத்தே செல்வின் போன்றோரின் பாசறையில் முக்கியப் பங்கு வகித்த ‘கோழி’ அருள் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் அணியில் இடம் பிடித்தார். 2006-ல் பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் கொலை வழக்கிலும், 2012-ல் பசுபதி பாண்டியன் கொலை வழக்கிலும் 'கோழி' அருள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். கோழி அருள் மீது 7 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன.
தமிழகத்தில் நாடாளுமன்ற முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சார கூட்டத்தில் பேச இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால், முதல்வர் வருகைக்குள் காங்கிரஸ் நெல்லை வேட்பாளர்களை இறுதி செய்யும் என தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, நெல்லை தொகுதி வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் 'ராபர்ட் ப்ரூஸ்' போட்டியிடுவார் என அறிவித்துள்ளது. ராபர்ட் ப்ரூஸ் தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார்.
இதனிடையே, விளவங்கோடு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்து விட்டதால், அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டள்ளது. விளவங்கோடு தொகுதி சட்டபேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக இந்த முறை தான் இடைத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக விஜயதரணி இருந்ததால், இந்த தொகுதியில் பெண் வேட்பாளரையை அனைத்து கட்சிகளும் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் அதிமுக சார்பில் சமூக சேவகி ராணி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் தொடங்கி விட்டார். இதையடுத்த, பாரதிய ஜனதா வேட்பாளராக புதுமுகம் நந்தினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்தமுறை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பெண் வேட்பாளரை நிறுத்தியாதல் பாஜகவும் போட்டிக்கு நந்தினியை நிறுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் பெண் வேட்பாளராக 'தாரகை கத்பர்ட்' என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் 'தாரகை கத்பர்ட்' முதல் முறையாக இடைத்தேர்தலில் களம் காண்கிறார். இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகப் பயணித்து வருகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் தான். விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஜி.ரமேஷ் குமார், தாரகை கத்பர்ட் ஆகிய நான்கு பேரும் இறுதிப்பட்டியலில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாரகை கத்பர்ட் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது. முதல் காரணம் நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடப்பதால் மீனவர்கள் வாக்குகளை கவர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மீனவர் அமைப்புகள் எல்லாம் இணைந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீனவர் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தருகிறோம் என வெளிப்படையாக சொல்லியுள்ளனர். இதுவும், மீனவரான தாரகை கத்பர்ட்டை வேட்பாளராக தேர்வு செய்ய ஒரு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தாரகை கத்பர்ட் தேர்வு செய்யப்பட முக்கியமான காரணம் மற்றொன்று உள்ளது. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் நடந்த மகிளா காங்கிரஸ் அகில இந்திய மாநாட்டில் பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "விளவங்கோடு தொகுதியில் நீங்கள் நினைப்பது நடக்கும்.." என சூசகமாக கூறியிருந்தார். மற்ற கட்சிகளின் சார்பாக பெண் வேட்பாளர்களே களமிறக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பிலும் பெண் வேட்பாளராக தாரகை கத்பர்ட் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, திடீரென காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி பாஜகவில் இணைந்ததை கடுமையாக 'தாரகை கத்பர்ட்' விமர்சனம் செய்து வந்தார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு செயல்பட்டு வந்த தாரகை கத்பர்டிற்கு இந்த முறை டெல்லி காங்கிரஸ் தலைமை அங்கீகரித்து வாய்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரி பிரச்சார கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களையும், விளவங்கோடு இடத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரையும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
இன்னும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயதரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் என பிரதான நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மெயின் சாலையில் தாலுகா அலுவலகம் அருகே கிருஷ்ணா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் வானமாமலை. இவர், அரசியல் கட்சியின் சேனல் ஒன்றின் நாங்குநேரிப் பகுதி நிருபராகவும் பணிபுரிந்து வருபவர்.
இன்று காலை (நவ-21) 9 மணியளவில் வழக்கம் போல் கடையைத் திறந்திருக்கிறார். அதுசமயம் திடீரென பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் தன் கைப்பையில் மறைத்து வைத்திருந்த உருண்டை போன்ற ஒரு பொருளை வீசியிருக்கிறார். கடையினுள்ளே விழுந்த அந்தப் பொருள் வெடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்ததாக ஒன்றை வீச அது கடைமுகப்பின் முன்னே உள்ளே போர்டில் தெரித்து டமார் என வெடித்திருக்கிறது. சப்தம் கேட்ட நிருபர் வானமாமலை பதற்றத்தில் வெளியே வர, வீசிய வாலிபர் தன்கையிலிருந்த கைப்பையை வீசிவிட்டுத் தப்பியிருக்கிறார். அதை நிருபர் வானமாமலை பார்த்த போதுதான் உள்ளேயிருப்பது வெடிக்காத குண்டு, கடையில் வீசியது வெடிகுண்டு என்பதும் தெரிய வந்திருக்கிறது.
நிருபர் கடையில் வீசப்பட்ட வெடிகுண்டு சப்தம் அக்கம் பக்கம் பதற்றத்தை ஏற்படுத்த, வானமாமலையின் தகவலால் ஸ்பாட்டுக்கு வந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம் அலியின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தவர்கள். வெடிக்காத குண்டை கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துவிட்டு ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு தடுப்பு பிரிவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட்டின் போது நாங்குநேரியின் பள்ளி மாணவனை வீடு புகுந்து சகமாணவர்கள் வெட்டிய விவகாரம் அதிர்வையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதுசமயம் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் நடப்புகளை செய்தியாக வெளியிட்டிருக்கிறார் நிருபர் வானமாமலை. அது தொடர்பான மோட்டிவ் தான் அவரைக் குறிவைத்து வீசப்பட்ட வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
பதற்றத்திலிருந்த நிருபர் வானமாமலையைத் தொடர்புகொண்டு பேசும் போது, வழக்கமாக நான் காலை 9 மணிக்கு சற்று முன்பாக கடையைத் திறந்த சில நிமிடங்களில் பைக்கில் வந்தவன் ஒரு குண்டை கடைக்குள் வீசிய போது அது வெடிக்கவில்லை. என்னைக் குறிவைத்துத்தான் வீசியிருக்கிறான். நான் விலகிவிட்டதால் கடைக்குள் உள்ள பொருள் மீது பட்டு தெரித்திருக்கிறது. அடுத்தசில நொடிகளில் நான் எதிர்பாராத நேரத்தில் தொடர்ந்து அடுத்த குண்டை வீசினான், அது கடையின் போர்டில் பட்டு பலத்த சப்தத்துடன் வெடித்து சேதத்தை ஏற்படுத்தியது. பீதியில் நான் சுதாரித்து வெளியே ஓடிவந்த போது என்னைப் பார்த்தவன் பையைப் போட்டு விட்டு தப்பிவிட்டான். அவனை எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். பள்ளி ஒன்றில் படிப்பவன் என்றவர், பள்ளி மாணவன் அவனது சகோதரி வெட்டப்பட்ட போது நான் நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டதால், அப்போதே அந்தக் கும்பல் என்னை மிரட்டியது. அதுகுறித்து நான் போலீசில் புகாரும் செய்துள்ளேன். புகைந்து கொண்டிருக்கும் அந்தப் பகைமை தான் வெடிகுண்டு வீச்சுக்குக் காரணம். என்கிறார் வானமாமலை.
இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ஆதம் அலியைத் தொடர்புகொண்டு பேசிய போது வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் ஒருவனை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். பிறகே காரணம் தெரியவரும் என்கிறார்.