Skip to main content

புதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

      தான் போன ‘கைலாச’த்துக்கு எல்லாரையும் கூப்பிடுகிறார் சாமியார் நித்யானந்தா. செல்லப்பிராணிகளுடன் வரலாம் என்று சலுகையும் அறிவிக்கிறார். தன்னை ஒரு பரதேசி, பொறம்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் நித்தியானந்தா, தனக்கான நாட்டை உருவாக்கிவிட்டதாக கூறுவதும் அங்கே எல்லாரும் வந்து தங்கிக் கொள்ளலாம் என்பதும் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாக இருக்கிறது.

 

kailaasa

     

இந்தியாவில் எதிர்கொள்ளும் பாலியல் வழக்குகளிலிருந்து தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹைதி நாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் நித்தியானந்தா, தென்அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை வாங்கி, அரசியல் சார்பற்ற இந்து நாடாக உருவாக்கிவிட்டதாக அறிவித்தார். அந்த நாட்டுக்கு தன் படத்தையும் நந்தி படத்தையும் போட்டு ஒரு கொடியையும் உருவாக்கி, தேசிய பறவை, தேசிய மலர், தேசிய விலங்கு ஆகியவற்றையும் அறிவித்து, “எல்லாரும் கைலாசா நாட்டுக்கு வாங்க” என்று இணையதளத்தில் கூவினார்.
 

kailaasa



ஈக்வடார் தூதரகம் பதறிப்போய், “எங்கள் நாட்டில் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் எதுவும் தரவில்லை. எந்தத் தீவையும் அவருக்கு விற்கவில்லை. தனி நாடு என இணையத்தில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் எல்லாம் தவறானவை” என உண்மையை போட்டு உடைத்தது.
 

      திருநெல்வேலி இருட்டுக் கடை ஒரிஜினல் அல்வா வாங்குவதற்கே சரியான திட்டமிடலும் முயற்சிகளும் தேவைப்படும்  உலகில், ஒரு நாட்டை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட்டதாக எல்லாருக்கும் அல்வா கொடுக்கிறார் நித்தியானந்த சாமியார். 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுத போராட்டம் நடத்திய ஈழ மண்ணில் தனித் தமிழீழம் அமையவில்லை. ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதி மக்களின் தனி நாடு கோரிக்கை நிறைவேறவில்லை.

 

kailaasa


அமெரிக்கா தயவு வைத்தால், ஐ.நா.அவையின் ஒத்துழைப்புடன் புது நாடு உருவாக்கப்படும் என்பதற்கு இந்தோனேஷியாவிலிருந்து 2002ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட கிழக்கு தைமூரும், சூடானிலிருந்து 2011ல் பிரிக்கப்பட்ட தெற்கு சூடானும் அண்மைக்கால எடுத்துக்காட்டுகளாகும். இந்த இரண்டு நாடுகளும் தங்களின் விடுதலைக்காக நடத்திய உள்நாட்டுப் போராட்டங்கள் நெடிய வரலாற்றைக் கொண்டவை. அதனை உலக அரசியல் கண்ணோட்டத்தில் தனக்கான  சாதக-பாதகங்களின் அடிப்படையில் அமெரிக்கா அணுகியதன் விளைவாகவும், ஐ.நா.அவையின் உறுப்பு நாடுகள் பல ஆதரவளித்ததன் காரணமாகவும் இவை தனி நாடுகளாயின.

 

ஒரு நாட்டிற்குள் வாழும் மக்களின் விருப்பம், அதன் புவியியல் அமைப்பு, வரலாற்றுப் பின்னணி, சமூகச் சிக்கல், இனம்-மொழி-பண்பாட்டுக்கூறுகள் உள்ளிட்டவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டே தனி  நாடு உருவாக்கப்பட்டு, ஐ.நா.வால் ஏற்பளிக்கப்படுகிறது.


 

 

 நித்தியானந்தா கப்சா விடும் ‘கைலாசா’ அப்படிப்பட்டதல்ல.  ஒரு நாட்டுக்கு சொந்தமான அந்தத் தீவில், பூர்வீக மக்களிடமிருந்து  தனிநாடு கோரிக்கைக்குரிய விடுதலைப் போராட்டம் ஏதுமில்லை. எவ்வித இனச்சிக்கலும் எழவில்லை.  உலக நாடுகளின் பார்வைக்குரிய எந்தப் பிரச்சினையும் அங்கு இல்லை.
 

சாமியார் நித்தியானந்தா ஒளிந்திருப்பது  தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான். பூமிப்பந்தில் உள்ள பெருங்கடல்களிலேயே பெரியது பசிபிக் பெருங்கடல். அதில் உள்ள ஏராளமான சிறிய தீவு நாடுகளில் ஒன்று பப்புவா நியூ கினியா. இது ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்தில் உள்ளது. கடல் வழி கண்டுபிடித்த ஐரோப்பியர்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் குடியேறியதுபோல பப்புவா நியூ கினியாவிலும் டச்சுக்காரர்கள், பிரெஞ்சுகாரர்கள், பிரிட்டிஷார் என மாறி மாறி குடியேறினர். ஜெர்மனியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள் எனப் பலரும் தங்கள் ஆளுகையில் வைத்திருந்தனர். பின்னர், அது ஆஸ்திரேலியாவிடமிருந்து 1975ல் விடுதலை  பெற்றது.

 

celebration


பப்புவா  நியூ கினியா எனும் சிறிய நாட்டுக்குள் போகெய்ன்வில்லே  என்ற குட்டித் தீவு உள்ளது. பழங்குடி மக்கள் நிறைந்த அந்தத் தீவில் உள்ள கனிம வளங்கள்தான் பப்புவா  நியூ கினியாவின் பொருளாதார வளம். தனியார் மூலம் சுரங்கங்களை வெட்டி அந்தக் கனிம வளம் மூலம்  கிடைத்த பணத்தைக் கொண்டு அரசு நிர்வாகம் நடைபெற்றது. தங்கள் பகுதியில்  உள்ள தாமிரம் உள்ளிட்ட கனிம வளங்களை எடுத்துக்கொண்டு நியூ கினியா  வளர்வதும், தங்கள் பகுதியில் இயற்கை வளம் அழிவதுடன், தங்களுக்கு எந்த  முன்னேற்றமும் கிடைக்க வில்லை என்பதும் போகெய்ன்வில்லே மக்களை, தனி நாட்டிற்கானப் போராட்டத்தில் இறங்க வைத்தது.

 

vote


1980களிலிருந்து தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தால் 20ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். ஆனாலும் பப்புவா நியூகினியா அரசுப்படைகளுக்கும் போகெய்ன்வில்லே போராட்டப் படையினருக்குமான சண்டை ஓயாமல் நீடித்தது. பின்னர், நியூசிலாந்து  தலையீட்டில் போர் நிறுத்தமும் ஒப்பந்தமும் உருவாகும் சூழல் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் நியூகினியா நாட்டுக்குள் போகெய்ன்வில்லா தன்னாட்சி கொண்ட பகுதியாக உருவானது. அந்தத் தீவு மக்களின் தனி நாடு கோரிக்கை தொடர்ந்தது.    

 

பப்புவா நியூ கினியா நாட்டு  அரசும், போகெய்ன்வில்லே தன்னாட்சி அமைப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, தனி நாட்டிற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக்  கொண்ட தீவில் 2019 டிசம்பர்  7ந் தேதியுடன் முடிவடைந்த இரண்டுவார கால வாக்கெடுப்பில் 85% பேர் கலந்துகொண்டனர்.


 

 

கூடுதல் தன்னாட்சி உரிமையா, சுதந்திரமான தனி நாடா என்பதற்கானத் தேர்தலில் வாக்களித்தவர்களில் 98% பேர் சுதந்திர தனி நாடு என்பதையே ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம், உலகின் 194வது நாடாக போகெய்ன்வில்லே உருவாகும் வாய்ப்பு அமைந்துள்ளது. ஆனால், அதற்கான பாதை இன்னும் நீள்கிறது.

 

bougainville



எல்லை வரையறை, துறைமுகங்கள் நிர்வாகம், தனியார் சுரங்கங்களுடனான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் சுமூகமான  தீர்வுகள் காணப்படவேண்டும். ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட  நாடுகளின் சமரச முயற்சிகளும், அமெரிக்காவின் ஆதரவும், ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் பசிபிங் பெருங்கடல் பகுதியில் ‘போகெய்ன்வில்லே’ என்ற புதிய நாட்டை உருவாக்கித் தரும் வாய்ப்பு உள்ளது.

அப்படியென்றால், கைலாசா?

அது, கைலாசம்தான்.


 

Next Story

கைலாசாவின் பிரதமர் ரஞ்சிதா; நித்தியிடம் இருந்து கைமாறும் பவர்!

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Ranjitha Prime Minister of Kailash

 

சமீபத்தில் வேலை தேடுவதற்கான தளமும் செயலியுமான ‘லிங்க்டு இன்’ பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் இருக்க, அதன் கீழே கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இயக்குநர் இமயம் என தமிழர்களால் பாராட்டப்படும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் அறிமுகமான ரஞ்சிதா, 20 படங்களுக்குப் பின் தன் கேரியரில் ஒரு தொய்வைச் சந்தித்தார். இந்த தொய்வு காலகட்டத்தில்தான் நித்தியானந்தாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழின் மற்றொரு இயக்குநரான மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது ரஞ்சிதாவுக்கு. சினிமாவா, ஆன்மிகமா என்ற நிலை வந்தபோது, நித்தியானந்தா அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் படவாய்ப்புகளை முற்றிலுமாக உதறித் தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யையாக மாறினார்.

 

காலம் நித்தியானந்தாவை உயரத்திலிருந்து பாதாளத்துக்குத் தள்ளி, நாடுவிட்டு நாடு ஓட வேண்டிய சூழல் உண்டான போது, கூடவே அவரது பிரதான சிஷ்யையாக ரஞ்சிதாவும் ஓட வேண்டியதானது. அப்போதெல்லாம் தான் இழந்த வாய்ப்புகளையும் உயரங்களையும் பற்றி குற்றம் சாட்டும் தொனியில் மீண்டும் மீண்டும் நித்தியானந்தாவிடம் பேசுவதை ரஞ்சிதா வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பரிசாகத்தான் கைலாசாவின் பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு அளித்திருக்கிறார் நித்தி.

 

Ranjitha Prime Minister of Kailash

 

லிங்க்டு இன் புரொஃபைலைத் தவிர வேறெந்த செய்தியும் ரஞ்சிதா குறித்து ஊடகங்களில் காணப்படாத நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யரும் தனது பழைய தர்மத்திலிருந்து ஒதுங்கி வாழும் ஒருவரைத் தொடர்புகொண்டு ரஞ்சிதா அலைஸ் நித்தியானந்தாமயி சுவாமி குறித்த விவரங்களைக் கேட்டோம்.

 

"நித்தியானந்தாவின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பு ரஞ்சிதாவிடம்தான் இருக்கிறது. டெக்னிக்கலாக கண்ட்ரோல் அவரிடம் வந்துவிட்டது. அங்கே உள்ளே இருப்பவர்களிடமிருந்து இப்போது வரும் தகவல் இதுதான். இதில் பழைய ஆட்களுக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும் நித்திக்கு அடுத்த இடத்தை அடைந்திருப்பது ரஞ்சிதாவுக்கு ஆதாயம்தான்'' என்கிறார்.

 

 

Next Story

ஐ.நா.வில் ஆட்டம் போட்ட நித்தி சிஷ்யைகள்; கசிந்த கைலாசா ரகசியம்!

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Nithiyantha kailasa UN ConferenNithiyantha kailasa UN Conference ce
கோப்புப் படம் 

 

ஐ.நா. அமைப்பு பெண்கள் மேம்பாடு தொடர்பாக நடத்திய மாநாடு ஒன்றில், ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளக் கூடிய கூட்டங்களில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் கலந்துகொண்டு, நித்தியானந்தா மீது மனித உரிமை மீறல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி நாடகமாடியுள்ளனர்.

 

தன் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் 2019-ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய நித்யானந்தா, ஆன்மிக வியாபாரத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் ஈக்வடார் கடற்கரைப் பகுதியில் சில தீவுக்கூட்டங்களை வாங்கி அதற்கு கைலாஸா எனப் பெயரிட்டு அங்கேயே தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

 

இந்தியாவை விட்டே தப்பியோடியிருந்தாலும் அவருக்கு மீண்டும் இந்தியா திரும்பவும் இங்கு மீண்டும் ஒரு ஆன்மிக(?) சாம்ராஜ்யத்தை நிறுவவும் ஆசையிருப்பதால் சமூக ஊடகங்கள் மூலம் கைலாஸா குறித்த செய்திகளைத் திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார். அவரது வலைத்தளம் உலகின் முதல் இந்து நாடு கைலாஸா எனவும் இங்கே இருபது லட்சம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கிறது. கைலாஸாவுக்கென தனி வங்கி, கொடி, பாஸ்போர்ட் ஆகியவை உள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும் உலகம் கைலாஸாவை இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

 

இந்த நிலையில்தான் பிப்ரவரி 22, 2023 அன்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஜெனிவாவிலுள்ள ஐ.நா. சபையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது நிறைவுற்ற சில தினங்களில் கைலாஸாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கைலாஸாவின் பிரதிநிதிகள் குறித்த படங்களும் செய்திகளும் வெளியாகத் தொடங்கின.

 

Nithiyantha kailasa UN Conference

 

“உலக அரங்கில் ஜொலிக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாஸா! ஐ.நா. மாநாட்டில் பெண்கள் தலைமைத்துவம் பற்றிய பேச்சில் பிரதிநிதித்துவம்! என்றொரு செய்தி நித்தியானந்தா தரப்பினரால் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பின் வெகுவாகப் பரப்பப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைவதற்கான குழுவின் 84-வது அமர்வில், ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் மா விஜயப்பிரியா நித்தியானந்தா, லாஸ் ஏஞ்சல்ஸ் கைலாஸாவின் தலைவர் மா முக்திதா ஆனந்தா, செயிண்ட் லூயிஸின் கைலாஸா தலைவர் மா சோனா காமத், யுனைடெட் கிங்டத்தின் கைலாஸாவுக்கான தலைவர் நித்ய ஆத்மதாயகி, ப்ரான்ஸின் கைலாஸாவுக்கான தலைவர் மா பிரியப்ரேமா நித்யானந்தா ஆகியோர் உள்ளிட்ட குழு பங்கேற்றது.

 

பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள், வன்முறைகள் பற்றிப் பேச பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் இந்துப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக கைலாஸாவின் பெண் உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர் என நீள்கிறது அந்தச் செய்தி. இந்தச் செய்தி, கைலாஸாவை ஒரு நாடாக ஐ.நா. அங்கீகரிக்கிறதா… கைலாஸா பிரதிநிதிகளுக்கு ஐ.நா.வில் அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால் பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் நித்தியானந்தாவின் டுபாக்கூர் வேலையை அம்பலப்படுத்தின. இந்தச் செய்தி குறித்து விளக்கமளித்திருந்த ஐ.நா. அதிகாரி, “கைலாஸா பிரதிநிதிகள், சமர்ப்பித்த விஷயங்கள் ஐ.நா. பேசிய பிரச்சினைகளிருந்து விலகியவை, அவற்றோடு தொடர்பற்றவை” என்றார். மேலும், “இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாஸா இடம்பெறவில்லை. அரசுசாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் என யாரும் பங்குபெறக்கூடிய பிப்ரவரி 22, 24-ல் ஐ.நா. நடத்திய இரண்டு பொதுக்கூட்டங்களிலேயே கைலாஸா பிரதிநிதிகள் பங்குபெற்றனர்” என்கிறார் இந்தப் பொதுக்கூட்டங்களை மேற்பார்வை செய்த விவியன் குவாக்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பலாம் என சொல்லப்பட்டபோது, ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட விஜயப்பிரியா நித்யானந்தா, கேள்வி கேட்பதுபோல் எழுந்து, “கைலாஸாவின் குடிமக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி அனைத்தும் இலவசம். தன்னிறைவான வளர்ச்சியுடன் திகழும் நாடு” என்று கூறியதுடன், “இந்து மதத்தின் பூர்விக மரபு, வாழ்க்கை முறைகளைப் புதுப்பிப்பதற்காக நித்தியானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். கைலாஸா மக்களும் அதேபோல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதை நிறுத்த தேசிய, சர்வதேச அளவில் என்ன செய்யலாம்?” என கேள்விகள் கேட்டுள்ளார்.


ஆக, யார் வேண்டுமானாலும் பங்குபெறக்கூடிய ஐ.நா.வின் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு அவற்றின், புகைப்படம், வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் கடைபரப்பி, கைலாஸா ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோலவும், கைலாஸாவுக்கு நாடுகள்தோறும் தூதர்கள் இருப்பதுபோலவும், நித்தியானந்தாவை இந்தியாவே துன்புறுத்துவது போலவும் சீன் போட்டுள்ளனர் நித்தியின் சிஷ்யைகள்.


இந்தியாவில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு பதிலளிக்கவியலாத நித்தியானந்தா, எட்டாத தொலைவிலிருக்கும் தைரியத்தில் தன் மீது மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா. கூட்டங்களில் தனது சீடர்களை வைத்து நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

 

- க.சுப்பிரமணியன்