Skip to main content

அமெரிக்க மோடியும் இந்திய ட்ரம்ப்பும்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

“உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிக்க முடியாவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் வெளிநாட்டினர்தான் காரணம் என்று சொல்லிவிடு. வெளிநாட்டினர் மீது உள்நாட்டு ஜனங்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகளில் இருந்து அவர்கள் கவனம் திரும்பிவிடும்”




சர்வாதிகாரி ஹிட்லரின் தந்திரம் இது. அவருடைய தந்திரத்தை ட்ரம்ப் கையிலெடுத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும், போதைப்பழக்கத்திற்கும் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா உள்ளிட்டவற்றிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறும் அகதிகள்தான் காரணம் என்றார் ட்ரம்ப்.
 

 

namastey trump and howdy modi

 

 

இவர் அதிபரானவுடன், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகளை தடுத்து, அவர்களை ஒரு கேம்ப்பில் அடைத்து, சிறு குழந்தைகளை பிரித்து தனியாக அடைத்து கொடுமைப்படுத்தியது உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை உருவாக்கியது.

 

MMM

                                                        மெக்ஸிகோ அகதிகளை அடைத்து வைத்த முகாம்

அமெரிக்கா என்ற நாடே ஐரோப்பிய அகதிகளால் ஆனதுதான். பூர்வ குடிகளை கொடூரமாக கொன்று குவித்து குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுதான். இன்றுவரை அமெரிக்காவில் எந்த நாட்டினரும் எளிதில் குடியுரிமை பெறமுடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதி ஆனவுடன், சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவு்குக வர தடை விதித்தார். மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்கர்களுக்கும் தடை விதித்தார்.
 

MODI



அதைக்காட்டிலும் மிகப்பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 1900 கிலோமீட்டர் தொலைவுக்கு உயரமான சுவர் எழுப்பப் போவதாக அறிவித்தார். ஆனால், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 45 ஆயிரம் கோடி டாலர்கள் செலவில் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சுவர் எழுப்பப் போவதாகவும் முதல்கட்டமாக 5 ஆயிரம் கோடி டாலர்கள் தேவை என்றும் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிராகரித்துவிட்டன. அமெரிக்கா எப்போதும்போல பன்முகத்தன்மையோடு இருப்பதையே விரும்புவதாக பெரும்பான்மை அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ட்ரம்ப் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.


ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவை திசைதிருப்பி வருகிறார். அரசு ஊழியர்களும் ஒப்பந்த நிறுவனங்களும் சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் நிலை முதல்முறையாக ஏற்பட்டிருக்கிறது.

 

namastey trump and howdy modi

 

ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்திய பிரதமர் மோடியை தனது துருப்புச்சீட்டாக பயன்படுத்தினார். இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனையிலும், பொருளாதார சீர்குலைவிலும் சிக்கித் திணறும் மோடி, அமெரிக்காவில் ட்ரம்ப் கொடுத்த வரவேற்பைக் காட்டி திசைதிருப்ப முயன்றார். அமெரிக்காவில் எந்த இந்திய பிரதமருக்கும் கிடைக்காத வரவேற்பு மோடிக்கு கிடைத்ததாக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட்டது.


ஆனால், இந்தியாவில் மோடியின் திசைதிருப்பும் நடவடிக்கைகளை மக்கள் புரிந்தே இருக்கிறார்கள். ஏழு மாதங்களுக்கு மேல் காஷ்மீரில் இயல்புவாழ்க்கை சீர்குலைந்திருக்கிறது. அங்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் இயல்புவாழ்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை. பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இன்னும் நீடிக்கிறது. இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி மறுக்கப்பட்டிருக்கிறது.


காஷ்மீர் பிரச்சனை பேசுபொருள் ஆன நிலையில், அதைத்திருப்ப, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது மோடி அரசு. வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தப் போவதாக மோடியும் அமித்ஷாவும் பிடிவாதமாக கூறிவருகிறார்கள். அவர்களுடைய பார்வையில் இந்தியாவின் இஸ்லாமியர்களே முதல்கட்டமாக வெளிநாட்டினராக குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இஸ்லாமியர்களை ஒதுக்குவதும், பிறகு மற்ற மதத்தினரை குறிவைப்பதும், இறுதியாக சாதிய பிரிவினைகளை அமல்படுத்தி, இந்தியாவில் வர்ணாச்சிரம அடிப்படையிலான அரசியல் சட்டத்தை அமல்படுத்துவதுமே மோடி அரசின் லட்சியமாக இருக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது.



இந்தியா முழுவதும் மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், பல்வேறு மாநிலங்களில் நாடற்றவர்களை அடைப்பதற்கான முகாம்கள் கட்டப்பட்டு வருவதற்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் போராட்டங்களை ஒடுக்க மோடி அரசு கொடூரமான உத்திகளைக் கையாளுகிறது. இந்நிலையில்தான் மனித உரிமைகளின் காவலனாக தன்னை காட்டிவரும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பை இந்தியாவுக்கு அழைத்து அதையே ஒரு வேடிக்கையாக இந்திய மக்களுக்கு காட்டி வருகிறார் மோடி.


அமெரிக்காவில் தனக்கு ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்த அனுமதி கொடுத்த ட்ரம்ப்புக்கு, இந்தியாவில் அதுபோல ஒரு வரவேற்பை கொடுத்து நன்றி விசுவாசத்தை வெளிக்காட்டி இருக்கிறார் மோடி.
 

AS

                                                    அசாம் என்ஆர்சி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள்


இந்த வரவேற்பில் ஏதோ இந்திய மக்கள் தன்னெழுச்சியாக கலந்துகொணடதைப்போல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளையே சாலை ஓரங்களில் நிறுத்தி கஷ்டப்படுத்தியிருக்கிறது மோடி அரசு. வரவேற்பு அளித்தவர்களுக்கு முகத்தைக்கூட காட்டாமல் காருக்குள் இருந்தபடியே பார்த்து சென்றார் ட்ரம்ப். அதாவது, ட்ரம்ப் சென்ற காருக்குத்தான் மாணவ மாணவிகள் கையசைத்தார்கள். அவர் சென்ற காரை மகிழ்ச்சிப்படுத்தவே கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் எனலாம்.


 

MODI



இதற்குமுன் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் இப்படி காருக்குள் ஒளிந்து பயணித்ததில்லை. தன்னை வரவேற்க ஒரு கோடி இந்தியர்கள் காத்திருப்பதாக ட்விட்டரில் பெருமையாக பதிவிட்ட ட்ரம்ப், வரவேற்ற இந்தியர்களுக்கு தனது முகத்தைக்கூட காட்ட முடியாதவராகிவிட்டார்.

 

 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.