Skip to main content

கற்புக்கு ஒரு கோயில்! 101 வயது காந்தியவாதியின் பெருங்கனவு!!

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

namakkal kaliyannan political journey

 

தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோட்டம் எழுப்பி, கற்புக்கென ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற பெருங்கனவுடன் 101வது பிறந்த நாளை வெற்றிகரமாக கொண்டாடியிருக்கிறார் மூத்த காந்தியவாதியும், சுதந்திர போராட்டத் தியாகியுமான டி.எம்.காளியண்ணன். 

 

பொதுவாழ்வில் ஒருவர் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார் என்றால் ஒன்று அவர் காங்கிரஸ்காரராக இருப்பார்; அல்லது பொதுவுடைமைக் கட்சித் தோழராக இருப்பார். இதுதான் இந்தியாவில் 70கள் வரையிலான அரசியலார் பற்றிய பொதுவான அபிமானம். எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் மாறாத எளிமையும், சமூகத்தின் மீதான பற்றுதலும் கொஞ்சமும் குறையாதவராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்தான் டி.எம்.காளியண்ணன் (101). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியில் வசிக்கிறார். மனைவி, பார்வதி (90).

 

ஜன. 10ம் தேதி, அவருடைய 101வது பிறந்த நாளை குடும்பத்தினர், சுற்றமும் நட்பும் சூழ கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இரண்டு மகன்கள்; மூன்று மகள்கள்; 16 பேரன் பேத்திகள்; 8 கொள்ளுப்பேரன் பேத்திகள் என ஆலமரமாய் விழுதுவிட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துச் சொன்னவர்களில் முக்கியமானவர்களுள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குறிப்பிடத்தக்கவர்கள். உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் என பலரும் நேரில் வாழ்த்தி, அவரிடம் ஆசிகளையும் பெற்றுச் சென்றனர்.

 

namakkal kaliyannan political journey

 

முக்கிய பிரமுகர்கள் பலரும் தள்ளாத வயதில் இருக்கும் ஒருவரை நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்துவதும், ஆசி பெறுவதுமான அளவுக்கு அவர் அத்தனை பெரிய நபரா என்றால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர், ஆள் அல்ல; ஆளுமை. 

 

முதுபெரும் சுதந்திரப்போராட்டத் தியாகி, பழுத்த காங்கிரஸ்வாதி, தேசப்பிதா காந்தி, கர்ம வீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெரியவர் பக்தவச்சலம் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே சேலம், தர்மபுரி, நாமக்கல், ஓசூர், ஆந்திரா வரை 2000 பள்ளிகளைத் திறந்தவர். வீடுகளில் எங்கெல்லாம் திண்ணைகள் தெரிந்தனவோ அங்கெல்லாம் திண்ணைப் பள்ளிகளைத் திறந்து வைத்திருக்கிறார் பெரியவர் காளியண்ணன். 

 

''பள்ளிக்கூடம் நடத்தணும். கொஞ்சம் உங்க வீட்டு திண்ணை கிடைக்கும்களா...? என்று அவர் கேட்டால், ஊர்க்காரர்கள் பலரும் அதுக்கென்னாங்ணா... நீங்க கேட்டா இல்லைனு சொல்ல முடியுமாங்ணா...,'' என்று தாராளமாக தங்கள் வீட்டுத் திண்ணைகளில் பள்ளிக்கூடம் நடத்திக்கொள்ள அனுமதித்திருக்கிறார்கள். 

 

சாமானிய மக்களிடம் இருந்த இத்தகைய பொதுச்சிந்தனைதான், இப்போது திண்ணைகள் இல்லாத வீடுகளாக சுருங்கிப் போயிருக்கின்றன. சமூகம் மாசடைந்து விட்டதன் குறியீடு இதுவோ.  

 

பட்டினியும், வறுமையும் ஒருவனை புரட்சிக்காரனாக்கி விடும். ஆனால், காளியண்ணனின் குடும்பப் பின்னணி அப்படியானது அல்ல. திருச்செங்கோடு கஸ்தூரிப்பட்டி, போக்கம்பாளையம் ஜமீன்தார் குடும்பம் இவருடையது. பிறக்கும்போதே தங்கக்கரண்டியுடன் பிறந்த ஒருவர் போராளியானதற்கு முழுமுதல் காரணம், செம்மொழித்தமிழ் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றுதான். 

 

namakkal kaliyannan political journey

 

''எங்கள் தாத்தா அந்தக்காலத்திலேயே எம்.ஏ., பொருளாதாரம், பி.காம்., படித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 300 மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஜில்லா மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். வாரந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து வந்து பேச வைத்தார். அப்போது, இந்திய சுதந்திர போராட்டம் வேகமாக எழுச்சி அடைந்த நேரம். ஆங்கிலேயரின் கடும் கண்காணிப்புகளையும் மீறி கல்லூரி விடுதியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதனால் கடுப்பாகிப் போன கல்லூரி நிர்வாகம், தாத்தா காளியண்ணன் உள்பட 8 பேரை கல்லூரியை விட்டு நீக்கியது. 

 

கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதுகுறித்து காந்தியிடம் சொல்வதற்காக அவர் சபர்மதி ஆசிரமத்துக்குப் போனார். காந்தியிடம் நடந்த விவரங்களைச் சொல்லி முறையிட்டார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட அவர், பதில் எதுவும் சொல்லவில்லை. பத்து நாள்கள் தன்னுடன் தங்குமாறு மட்டும் சொல்லியிருக்கிறார். தினமும் பஜனை, தியானம், யோகானு எல்லாத்துலயும் கலந்துக்கிட்டார். ஆசிரமத்தை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்து வந்தார். 

 

கடைசி நாளன்று தாத்தாவிடம், 'போய் படிக்கிற வேலைய மட்டும் பாருங்க. கல்வியை வீணடித்துக் கொள்ள வேண்டாம். படிப்பை முடித்துவிட்டு அரசியல் போராட்டத்தில் முழுமூச்சாக களம் காணுங்கள்,' என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அதன்பிறகு சென்னை மாகாணத்திற்கு திரும்பிய தாத்தா, பின்னர் பச்சையப்பன்  கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார்.

 

காந்தியுடன் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அங்கே ஒரு பாம்புக்கு தினமும் பால் வார்த்து பராமரித்து வந்தனர். ஒருவேளை, தனக்கு எதுவும் ஆகிவிட்டாலும்கூட அந்தப் பாம்பை அடித்துக் கொன்று விடாமல் அதன் ஆயுள் முழுக்க பராமரிக்க வேண்டும் என்று சபர்மதி ஊழியர்களிடம் காந்தி சொன்னதாக தாத்தா அறிந்திருந்தார். எந்த ஒரு ஜீவனுக்கும் சிறு தீங்கும் நினைக்காத காந்தியின் வாழ்வியல் முறை தாத்தாவுக்கு முழுவதும் பிடித்துப் போனது. அப்போது முதல் காந்திய சிந்தனைகளில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்,'' என்கிறார் கால்நடை மருத்துவரும், அவருடைய பேரனுமான செந்தில். 

 

namakkal kaliyannan political journey

 

பல்வேறு அறிவுஜீவிகள் அங்கம் வகித்த இந்திய அரசியல் நிர்ணய சபையில் இருந்த உறுப்பினர்களுள் வயதில் மிக இளையவர் காளியண்ணன்தான். அப்போது அவருக்கு வயது 28. அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு முதன்முதலில் தற்காலிக பாராளுமன்றம் அமைக்கப்பட்டபோதும் அவர், உறுப்பினராக இருந்திருக்கிறார். பின்னர், 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஆ ஆக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். அதன்பிறகு, திருச்செங்கோடு தொகுதியில் இருந்து 1957, 1962 தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர், 1967ல் எம்எல்சி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில் ஒருமுறை ஒருங்கிணைந்த சேலம் ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்திருக்கிறார்.

 

காமராஜருடன் தனக்கு இருந்த நட்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். அதனால்தான் அவரை அணுகி, அன்றைய காலக்கட்டத்திலேயே ஒருங்கிணைந்த சேலம் ஜில்லாவிற்கு 2000 பள்ளிக்கூடங்களை திறந்திருக்கிறார். வெறும் பள்ளிப்படிப்புடன் பிள்ளைகள் நின்று விடக்கூடாது; உலக அறிவையும் வளர்த்துக் கொள்ள 300 நகரும் நூலகங்களையும் கொண்டு வந்திருக்கிறார். இப்போதும் பொது நூலகத்துறையில் அமலில் உள்ள மொபைல் லைப்ரரி கான்செப்ட், காளியண்ணன் உடையதுதான். மேட்டூர் - பவானி வரையிலான மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத் திட்டத்தையும் கொண்டு வந்தார். அதனால்தான் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

 

உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கு பெற்ற காளியண்ணனை, காமராஜர் செல்லமாக 'நேர்மையாளர்' என்றே அழைப்பாராம். 

 

தமிழின் மீது கொண்ட பற்றால், சொந்த ஊரில் கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக கற்புக்கரசி கண்ணகிக்கு விழா எடுத்து வருகிறார். நடை தளர்ந்தபோதும் கொள்கையில் தளராத அவர், அடுத்த தலைமுறையினர் வாயிலாக விழாவை தொடர்ந்து வருகிறார். மேலும், உள்ளூரில் அவ்வை பெயரில் பள்ளிக்கூடம் நடத்தும் அவர், பள்ளியில் முற்றிலும் பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமித்திருக்கிறார். கல்வி, வணிகமாகிவிட்ட இன்றைய சூழலிலும் கூட அவ்வை பள்ளியில் முற்றிலும் கட்டணமில்லா கல்வியே வழங்கப்படுவது நம்ப முடியாத ஆச்சரியங்களில் ஒன்று.

 

தனது 101வது பிறந்த நாளன்று ஆசி பெற வந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், ஆன்லைன் வாயிலாக படிக்க மொபைல் போன் இல்லாமல் கஷ்டப்படுவதை தாமாகவே அறிந்து கொண்ட காளியண்ணன், உடனடியாக அந்த மாணவருக்கு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். சில ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராக, பெரிய ஜமீன்தாராக இருந்தவர் ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ஜமீன் பட்டத்தையோ, பின்னால் சாதி அடையாளத்தையோ பயன்படுத்திக் கொண்டதில்லை. சொல்லப்போனால் அதை அவர் பெரும் சுமையாக கருதி வந்திருக்கிறார். 

 

வினோபாவின் பூமிதான இயக்கத்தின் மீதான பற்றால் தன் குடும்பத்திற்குச் சொந்தமான அத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் வசித்து வரும் சிஹெச்பி காலனியும்கூட, 300 ஏழை குடும்பத்தினருக்கு அவரே நிலம் வழங்கி கட்டிக்கொடுத்ததுதான் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

 

கேட்டவர்க்கெல்லாம் இல்லை என்று கூறாத காளியண்ணன் தாத்தாவுக்கும் சில ஆசைகள் அடிமனதில் அப்படியே தங்கியிருக்கின்றன என்கிறார் மருத்துவர் செந்தில்.

 

''அரசியல், சமுதாயப்பணிகளில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வந்த தாத்தாவுக்கு, அவருடைய இரண்டாவது மகன் கிரிராஜ்குமார் இறந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரைத்தான் அரசியல் வாரிசாக நம்பியிருந்தார். அதனால்தான் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன்பிறகு அரசியல் வெளியில் அவர் நடவடிக்கையை குறைத்துக் கொண்டார். 

 

கற்புக்கரசி என்றாலே கண்ணகிதான் நினைவுக்கு வருவார். கண்ணகி, தமிழ்ப்பெண்களின் பண்பாட்டை பிரதிபலிப்பவர். அதனால் திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதும், கற்புக்கென ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பதும் அவருடைய வாழ்நாள் லட்சியம். ஆசை. இன்னொரு லட்சியமும் உண்டு. மேட்டூர் உபரி நீரை மேட்டூர் - திருமணிமுத்தாறு - சரபங்கா நதி வழியாக கொண்டு வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் நீரை சேமிக்கும் திட்டம்தான் அது. 

 

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இவ்விரு லட்சியத்திற்காகவும் நீண்ட காலமாக போராடி வருகிறார். நாங்களும் அரசிடம் பலமுறை மனு கொடுத்துட்டோம். இன்னும் நிறைவேறல,'' என்கிறார் மருத்துவர் செந்தில்.

 

ஜமீனாக இருந்தும் அதன் அடையாளமின்றி; இல்லை என்று வந்தோர்க்கு இல்லை என்று கூறாமல் இயன்றதை வழங்குவதோடு, சொல் என்னவோ செயலும் அதுவேயாக என மூத்த காந்தியவாதி ஒருவர் கொள்கையில் தடம் மாறாமல் இன்றும் நம்முடன் வாழ்கிறார் என்பதேகூட இந்த நூற்றாண்டின் ஆச்சரியம்தான். காளியண்ணன் பற்றிய தொகுப்பும் பாடத்திட்டத்தில் சேர்த்தால், இளம் தலைமுறையினரும் அவரை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.