Skip to main content

இப்போது பலர் செய்வதை தொண்ணூறுகளிலேயே செய்தது நக்கீரன் - நக்கீரன் பற்றி செயல்பாட்டாளர்களின் கருத்துகள்

Published on 20/04/2018 | Edited on 20/04/2018
nakkheeran 31

ஊழல், லஞ்சம் போன்ற விஷயங்களை முதன் முதலில் நக்கீரன் வழியே தான் நாம் தெரிந்துகொள்கிறோம்.  இதுபோன்ற சேவைகள் பாராட்டத்தக்கது. பலருக்கு நக்கீரன் ஒரு முன்மாதிரியாகவும், தூண்டுகோலாகவும் இருக்கிறது. நக்கீரன் இதுபோன்ற விஷயங்களால் ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கியுள்ளது. பல பத்திரிகைகள் தற்போது இந்த வழியை பின்தொடர்கின்றனர். தொண்ணூறுகளிலும், இரண்டாயிரத்திலும் நக்கீரன்தான் இதில் முதன்மையாக செய்தது. தற்போது பலர் நக்கீரனை பின்தொடர்கிறார்கள்.

-"அறப்போர் இயக்கம்" ஜெயராம்

புலனாய்வு பத்திரிகைகளில் முதன்மையானது நக்கீரன். குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடந்த அத்துமீறல்களை எல்லாம் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அவற்றையெல்லாம் நக்கீரன் வெளிக்கொண்டுவந்ததால் அவர்கள் எதிர்கொண்டது ஏராளம். தமிழக வரலாற்றில் ஒரு அரசினால் அதிகம் அடக்குமுறைக்கு ஆளானது நக்கீரன் தான். மற்ற பத்திரிகைகளின் பங்கும் தமிழகத்தில் உள்ளது அதை மறுக்கவில்லை, இருந்தாலும் ஒரு அரசாங்கம் ஒரு பத்திரிகையை அதிக அடக்குமுறை செய்தது நக்கீரனை தான். இரண்டாவது, ஆதாரங்களை சேகரிப்பது. குறிப்பாக ஜெயலலிதா என்பவர் தன்னை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர் பழிவாங்கபடுவார்கள் என்ற நிலை இருந்தது, இன்னொரு பக்கம் அரசாங்க கெடுபிடி இருந்த போதிலும் ஒற்றை பத்திரிகையாக இருந்துகொண்டு அவர்களையே எதிர்த்தார்கள். நக்கீரன் யாரிடமும் சமரசம் செய்துகொண்டது இல்லை. அடுத்தது தனிமனித வலியையும், சமூக வலியாக மாற்றுவதில் நக்கீரனுக்கு அதிக பங்கு உண்டு. மக்கள் மத்தியில் ஒரு ஊடகம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும், அதை நக்கீரன் செய்துகொண்டே இருக்கிறது. ஒரு சின்ன விஷயம் என்று எதையும் விடாமல் எடுத்து மக்களுக்கு தெரிவிக்கிறது நக்கீரன். மக்களிடையே நம்பகத்தன்மையை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு விஷயம் நக்கீரன்ல வந்துச்சுன்னா, நக்கீரன்லயே வந்துருசுப்பா அப்படினு சொல்வாங்க. ஒரு கொலைகாரன் என்றாலும் அவரை வேறுஒரு கோணத்தில் பார்த்தது நக்கீரன் தான். பெரிய விஷயங்களில் எதுவாக இருந்தாலும் நக்கீரனின் பங்கு அதில் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு பத்திரிகைகளுக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் இருக்கிறது என்பார்கள் அதுபோலவே நக்கீரனுக்கும் இருக்கிறது. தொடர்ந்து நக்கீரனின் பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.

-"எவிடன்ஸ்" கதிர் 

தமிழக பத்திரிகை நிறுவனத்தின் ஒரு தலைவரும், அதன் பத்திரிகையாளர்களும் அரசை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்டது நக்கீரனில் மட்டும்தான். அப்போதும் கூட அவர்கள் மாநில அரசாங்கத்தை எதிர்த்து மக்களுக்கு தொன்று ஆற்றி வருவது சிறப்பு. நக்கீரன் திறம்பட செயலாற்றிக்கொண்டிருக்கிறது. வீரப்பன் விஷயத்திலும் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது. மேலும் அவர்களுக்கு பலம் அளிக்க வாழ்த்துக்கள், இன்னும் நடக்கும் சமுதாய அவலங்களை வெளியில் கொண்டு வரவேண்டும்.

-பியூஸ் மனுஷ் 

 

புலனாய்வு வார இதழ்களில் முதன்மை பெற்றது நக்கீரன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது தமிழகத்தில் நிர்மலா தேவியை வெளியுலகுக்கு கொண்டுவந்ததில் இருந்து பல பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்த பங்கு நக்கீரனுக்கு இருக்கிறது. தற்போது காலசூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் உயர்ந்துகொண்டு, டிஜிட்டல் முறையில் இணையத்திலும் "nakkheeran.in" என்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை நிறுவனமாகவும் உள்ளது. நக்கீரனுக்கு ஏற்பட்ட அடக்குமுறை என்பது வேறு எந்த பத்திரிகைக்கும் நடந்திருக்காது, இருந்தாலும் அதையும் மீறி பிரச்சனைகளை அவர்கள் வெளிகொண்டுவருவது சிறப்புதான்.  

-"பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்

 

நக்கீரனின் முப்பது ஆண்டு பயணத்தில், புலனாய்வின் மூலம் பல புள்ளிகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள். சமீபத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி வரைக்கும் என்றாலும் கூட நான் நக்கீரனின் வெற்றியாக, கொண்டாட்டமாக பார்ப்பது நக்கீரன் என்ற ஒரு பத்திரிகைதான் ஒரு செல்வந்தரால் தொடங்கப்படாமல், சாதாரண மனிதரால் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் அதுவும் பத்திரிகை சூழலில் எளிய மனிதர்கள் வெல்வது கடினம், அதை கோபால் அண்ணன் முறியடித்தார் என்பது சிறப்பான விஷயம். இரண்டாவது பிராமணர் அல்லாதார் பத்திரிகை நடத்தி இங்கு பிழைப்பது என்பது அரிதிலும் அரிது. அந்த அரிதிலும் அரிதான மனிதராகத்தான் கோபால் அண்ணனை நான் பார்க்கிறேன். நக்கீரன் மேலும் ஐம்பது, நூறு என்று தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடக்க வேண்டும் என நம்புகிறேன்.

-கரு.பழனியப்பன்

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; கூடுதல் ஆணையர் விளக்கம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ஏ பிளஸ் குற்றவாளியாக கருக்கா வினோத் இருந்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகள் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

தொடர்ந்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

Next Story

'வீட்டு கடனை கட்டவில்லை' - நிதிநிறுவன ஊழியர் செய்த செயலால் அதிர்ச்சி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

'Didn't Pay the Purchased Loan'-Shocked by the Action of the Financial Institution Employee

 

தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் 'வீட்டுக் கடனை கட்டவில்லை' என பெரிய எழுத்துக்களில் பெயிண்டில் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடைமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாக கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறையாக வாங்கிய கடனை பிரபு செலுத்தி வந்துள்ளார்.

 

கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாக பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையை கட்டியதால் வீட்டு பத்திரம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தவில்லை எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பிரபு காவல் துறையினருக்கு புகார் கொடுத்து இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திரபிரபு மது போதையில் பிரபுவின் வீட்டிற்குச் சென்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டு கடன் கட்டவில்லை' என சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.