Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி - கலைஞருடன் சிறையில் இருந்த மூத்த தொண்டருக்கு திமுக மா.செ. நிதியுதவி!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

hhhhhhhh

 

1953ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் சிதம்பரத்தில் நடந்த மாநாட்டில் டால்மியாபுரம் என்கிற பெயரை எடுத்துவிட்டு மீண்டும் கல்லக்குடி என்கிற பூர்வீக பெயரையே வைக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. அந்த பெயரை மாற்றக் கோரி நடந்த போராட்டத்தில் கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை அடுத்துள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமையா. தற்போது அவருக்கு 96 வயது. 

 

வயோதிகத்தால் உடல் நலிந்து ஒவ்வொரு நொடியும் கலைஞரின் பெயரை கூறியபடியே படுத்திருக்கிறார். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கிறார். அவரது பிள்ளைகள் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பெற்றோரை கவனித்து வருகின்றனர் என்றும், இன்று பெருத்த சோதனையில் வறுமைக் கோட்டிற்கு கீழே அவரது குடும்பம் உள்ளது, திமுக தலைவர் இதனை கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும் கீழையூர் ராமையாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவித்ததாக நக்கீரன் 2021 அக்.30-நவ.02 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

hhhhhhhh

 

கீழையூர் ராமையா குறித்து நக்கீரன் இதழில் செய்தி வெளிவந்த சில மணி நேரத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம்.முருகன்,  கீழையூரில் உள்ள இராமையா அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்துவிட்டு ருபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். 

 

நிகழ்வின் போது மாவட்டக் கழக துணைச் செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அப்துல்மாலிக், பிஎம் அன்பழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிஎம் ஸ்ரீதர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் VSN செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தென்னரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.