Skip to main content

"உலகம் முழுவதும் கரோனா மரணங்கள் நடந்துவருகிறது; ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் கரோனா கொலைகள் நடக்கிறது" - நக்கீரன் ஆசிரியர் பேச்சு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

hgj

 

அனைவருக்கும் வணக்கம். முதன் முதலில் கரோனா வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனே தமிழக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் மாஸ்க் முதலிய பாதுகாப்பு உபகரணங்களையாவது கொடுக்கலாமே என்று கேட்டது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 70 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்குத்தான் கரோனா வரும், அதனால் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறினார். அப்படி என்றால் மாஸ்க் மட்டுமாவது கொடுங்கள் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கிறார்கள். இல்லை அதெல்லாம் தேவையில்லை என்று முதல்வர் மீண்டும் கூறினார். கொஞ்ச நாள் கழித்து கரோனா குறித்து ஒரு கேள்வி வந்தபோது முதல்வர் கரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஒரு உயிர் கூட போகாது. கொஞ்ச நாட்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். தனித்திருக்க வேண்டும், விழித்திருக்க வேணைடும், விலகி இருக்க வேண்டும் என்றார். 

 

மாஸ்க் போட வேண்டாம் என்று கூறிய அதே முதல்வர் மாஸ்க் போட்டுக்கொண்டு தனித்திருக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். கொஞ்சநாள் கழித்து, மூன்று நாட்களில் கரோனாவை தமிழ்நாட்டை விட்டுத் துடைத்து எறிந்துவிடுவோம் என்று கூறினார். ஊரடங்கு அறிவித்த பிறகு முதல்வர் சொன்ன வார்த்தைகள் இவை. பிறகு இந்த கரோனா அப்படியே பரவ ஆரம்பிக்கின்றது. 500, 600 என்று ஆரம்பித்து தற்போது 3,000, 4,000 என்று அதிகரித்து வருகிறது. ஆனால் அது 5,000ஐ தாண்டாது. 4,852, 4,522, 4,999 என்று தான் இருக்கும். அதைத் தாண்டவே தாண்டாது. இது அரசாங்கம் சொல்கிற கணக்கு. உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது. அடுத்து முதல்வர் சொல்கிறார், தமிழகத்தில் சமூகப் பரவல் என்பதே இல்லை என்று, அதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். ஆனால் முதல்வரின் நிகழ்ச்சிக்குக் கூடவே சென்று புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர் கரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். 

 

தற்போது நான்கு, ஐந்து மந்திரிகளுக்கு கரோனா வந்துள்ளது. இரண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா விவகாரத்தில் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று தொடர்ந்து முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி வருகிறார்கள். ஆனால் பாதிப்புக்குள்ளான அமைச்சரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ அரசு மருத்துவமனைக்குச் செல்லவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அப்படி என்றால் எந்த மாதிரியான தரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வருகின்றது என்ற கேள்வி எழுகிறது. இதைப் பற்றி ஒருநாள் முழுமையாகப் பேச வேண்டும். ஏனென்றால் அமைச்சர்களே அரசு மருத்துவமனையின் தரத்தை நமக்குச் சொல்லித்தருகிறார்கள். மக்களைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் அலட்சியத்தின் உச்சமாக அரசாங்கம் இருக்கிறது. 

 

இந்த அரசாங்கத்தின் அலட்சியத்தால் தற்போது ஒரு உயிர் பறிபோய் உள்ளது. உலகம் முழுவதும் கரோனா மரணங்கள் நடந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் கரோனா கொலைகள் நடக்கிறது. அதை ஜீரணிக்கவே முடியவில்லை. சுந்தர வடிவேல் என்கிற தம்பியை இழந்துள்ளோம். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சிங்கப்பூரில் இருந்து வந்த அவர் கடந்த 26ஆம் தேதி தமிழகம் வந்துள்ளார். அவர் சிங்கப்பூரில் இருந்து கிளம்பும்போதே சென்னையில் நட்சத்திர விடுதியில் குவாரண்டைன் இருப்பதற்குச் சேர்த்தே டிக்கெட் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கிளம்பிய அவர் தன்னுடைய மனைவி சந்திராவுக்கு போன் செய்து தான் டிக்கெட் போட்டுவிட்டேன், சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் குவாரண்டைனில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகு வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்னைக்கு விமானம் ஏறியுள்ளார். 

 

சென்னைக்கு வந்த அவர் தேனாம்பேட்டையில் உள்ள ஹாயாட் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போன் இல்லை. அங்கு வந்த பிறகு தன்னுடைய மனைவியிடம் அவர் பேசவில்லை. அவர் அங்குவந்த அடுத்த நாள் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியதாகவும், அதனால் ஹோட்டலில் இருந்த மருத்துவர் அவருக்கு மருந்துகளைக் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். அவர் தனக்குக் கரோனா டெஸ்ட் செய்து தொற்று இல்லை என்ற பிறகே அந்தத் தம்பி விமானம் ஏறியுள்ளார். மருத்துவர் பார்த்துச் சென்ற பிறகு அந்த அறைக்கதவுக்கு வெளியே அந்த ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு உணவு வைத்துச் சென்றுள்ளனர். ஆறு வேளை உணவு அவரின் அறைக்கு வெளியே இருந்துள்ளது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றார்களா அல்லது எடுத்துச் சென்றும் அவர்கள் அதை அலட்சியம் செய்தார்களா என்று தெரியவில்லை. அந்தத் தம்பியின் மனைவி எப்படியோ அந்த ஹோட்டலின் போன் நம்பரை வாங்கி தன் கணவரைப் பற்றி விசாரித்துள்ளார்.

 

ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் உங்கள் கணவர் ஹோட்டலில் இருந்து ஓடிவிட்டார் என்று பொறுப்பில்லாமல் பதில் கூறியுள்ளனர். மீண்டும் அவர் முயற்சி செய்து கேட்டாலும் அவர்கள் அதே பதிலேயே கூறியுள்ளனர். அடுத்த சில நாட்கள் கழித்து ஊங்கள் கணவர் அறையில் இறந்து கிடக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். அவர் இறந்ததாகச் சொல்லப்பட்ட அறையில் சென்று பார்த்தால் அந்த அறையில் தங்கநகைகள் வாங்கிய இரண்டு டேக் மட்டும் கிடக்கிறது. நகைகள் இல்லை, வெளிநாட்டில் இருந்து வெறும் டேக்கை மட்டுமா அவர் எடுத்துவருவார். அடுத்து அந்த உடலை உடற்கூறாய்வு செய்ய லஞ்சம், கரோனா இல்லை என்று தெரிந்த பிறகு அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்ல லஞ்சம் என இந்த விவகாரத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடியுள்ளது. நமக்குள்ள கேள்வி எல்லாம் இரண்டு நாட்களாக அவர் சாப்பிடாமல் இருக்கும்போது, அதை எப்படி ஹோட்டல் நிர்வாகம் கவனக்குறைவாக எடுத்துக் கொண்டது என்பதுதான்? 

 

http://onelink.to/nknapp

 

அடுத்து வெளிநாட்டில் இருந்து வந்தவர் எதையும் எடுத்து வராமல் வெறுங்கையை வீசிக்கொண்டுதான் வந்திருப்பாரா? அறை வாடகை எடுத்ததில் மீதி தரவேண்டிய பணம் இருக்கிறது என்று ஹோட்டல் நிர்வாகம் கேட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் டிக்கெட் எடுக்கும்போதே தங்குவதற்கும் சேர்த்தே பணம் கொடுக்கப்பட்டது என்ன ஆயிற்று. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர் வந்து பார்த்ததாகக் கூறுகிறார்களே, அவருக்கு என்ன மருந்து மருத்துவர் கொடுத்தார், என்ன செய்ததற்காக கொடுத்தார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தமிழக அரசும், ஹோட்டல் நிர்வாகத்தினரும் உரிய விளக்கம் தர வேண்டும். என்ன காரணத்திற்காக என் கணவர் இறந்தார் என்று அவரின் மனைவி நம்மைப் பார்த்துக் கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிழிவது போன்று இருக்கிறது. இது அனைத்திற்கும் நியாயம் வேண்டும். 

 

 

Next Story

ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 10/04/2024

 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சடை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

Next Story

‘கூச முனுசாமி வீரப்பன்’ - நக்கீரனின் பிரத்யேக வீடியோக்களோடு வீரப்பன் சொல்லும் வீரப்பனின் கதை

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
Koose Munisamy Veerppan review

தமிழகத்தின் பத்திரிகைத் துறை வரலாற்றில் வேறெந்த பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் நடந்திராத கொடுமைகளையும், சித்திரவதைகளையும், அவஸ்தைகளையும் சந்தித்தது நக்கீரனும் அதன் ஆசிரியரும் தான். ஆனால் நக்கீரன், அனைத்து துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி சமூகத்தில் நடக்கும் அவலங்களை உடைத்து உண்மையை வெளிக்கொண்டு வர, அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் வேலை செய்து, நீதியை நிலைநாட்ட இன்று வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது. வீரப்பனை நேரில் சந்தித்து வீடியோ பேட்டி எடுத்ததை, கிட்டத்தட்ட 29 வருடங்களாகக் கட்டிக் காத்ததை, டாக்குமெண்டரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது ‘கூச முனுசாமி வீரப்பன்’.

இதுவரை வீரப்பனைப் பற்றி வந்த படைப்புகள் அனைத்துமே வீரப்பனைப் பற்றி காவல்துறை சொன்னதும், வீரப்பனைப் பற்றி மற்றவர்கள் சொன்னதுமேயாகும். முதல் முறையாக வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொன்னதை ஆவணப்படமாகவும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடும் தந்திருக்கிறது. டாக்குமெண்டரி என்றாலே சுவாரசியத்தன்மையற்று இருக்கும், விறுவிறுப்பு இல்லாமல் இருக்கும், ரசிக்கும்படியாக இருக்காது போன்ற காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த எல்லா அடிப்படைத்தன்மையையும் அடித்து உடைத்து, சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியாகவும் தந்திருக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த டாக்குமெண்டரி சீரிஸ், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாகப் பலரது பாராட்டுகளோடு பார்க்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 6 எபிசோடுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. வீரப்பனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று வீரப்பனைப் பற்றி தினசரி நாளிதழ்கள் ஏதேதோ எழுதுகிறார்கள். ஏனெனில் வீரப்பனா வந்து கேட்டு விடப்போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறார் நக்கீரன் மூத்த நிருபர் ஜீவா தங்கவேலு. கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது, ஆனால் வீரன்தான் என்கிறார் நக்கீரன் ஆசிரியர். வீரப்பன் ஒன்றும் ஹீரோ இல்லை கொலைகாரன் என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர் ஐபிஎஸ். பெயருக்கேற்றார் போல் அவர் வீரப்பன் என்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இவ்வாறாக ஒவ்வொருவரின் மாறுபட்ட பார்வையும், அதற்கான அவர்களது விளக்கமும் அப்படியே இந்த டாக்குமெண்டரியில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் வீரப்பனை ஹீரோவாக காட்ட வேண்டும் என்றோ அல்லது வீரப்பனை வில்லனாக காட்ட வேண்டும் என்றோ, எவ்விதமான ஜோடனைகளும் இல்லாமல், வீரப்பன் என்னவாக இருந்தாரோ அதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த டாக்குமெண்டரி ஒரு நேர்மையான படைப்பாகும். வீரப்பனைப் பற்றி நாம் முன்னரே மனதில் வைத்திருந்த எல்லா பிம்பங்களையும் இந்த டாக்குமெண்டரி உடைத்து எரிகிறது. வீரப்பன் நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக, தீவிரமான கடவுள் பக்தி உள்ளவராக, காட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணிப்பதற்குத் தெரிந்து வைத்திருந்தவராக, விலங்குகளின் மொழி புரிந்தவராக, துப்பாக்கி சுடுவதில் வல்லவராக இருந்திருக்கிறார்.

அதே வேளையில் தன்னை காட்டிக்கொடுக்க முனைந்தவர்களை ஈவு இரக்கமற்று கொலை செய்கிற கொலைகாரனாகவும் இருந்திருக்கிறார். கொள்கைக்காக ஓடுகிறவனைப் பணத்துக்காக ஓடுகிறவர்கள் துரத்திப் பிடிக்க முடியாது என்பது பிரபலமான ஒரு வசனம். அதற்கேற்ப தமிழக, கர்நாடக காவல்துறையினரால், இராணுவத்தினரால் காட்டுக்குள் வைத்து இறுதிவரை பிடிக்க முடியாத காட்டின் ராஜாவாக இருந்திருக்கிறார். இதுபோன்ற மாற்றுப் பார்வையை பார்வையாளர்களுக்கு இந்த ஆவணப்படம் தருகிறது.

தன்னைப் பிடிக்க வந்த, துப்பாக்கியோடு சுட வந்த காவல்துறையினரை, அதிரடிப்படையினரை எவ்வாறு சுட்டுச் சண்டையிட்டார் என்று வீரப்பனே ஒரு எபிசோடில் நடித்துக் காண்பிக்கிறார். சினிமாவின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவர் ஒளிந்து மறைந்து சுட்ட விதத்தை விவரிப்பது அமைந்துள்ளது. 

வீரப்பனின் மூத்த மகளும், வீரப்பனால் கொல்லப்பட்ட காவலரின் மகளும் டாக்குமெண்டரியில் பேசுகிறார்கள். இரு வேறு விதங்களில் தகப்பனை இழந்தவர்கள் இருவரும், வீரப்பன் மகள் நியாயத்தின் பக்கம் நின்று பக்குவத்தோடு பேசுகிறார். காவலரின் மகள் தனது அப்பாவிற்காக எழுதிய கவிதையை வாசிக்கிறார். கல் நெஞ்சக்காரர்களையும் லேசாகக் கண்ணீர் விடத்தான் வைத்துவிடும். 

வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற தமிழ்நாடு - கர்நாடகா இரு மாநில காவல்துறையும் இணைந்து பழங்குடி மக்களிடையே நடத்திய அதிகாரத் திமிர்த்தனத்தையும், ஒர்க்‌ஷாப் என்ற பெயரில் நடத்திய பாலியல் ரீதியிலான கொடூரங்களையும், தாங்க இயலாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அந்த மக்களை ஆட்படுத்தியதையும் நக்கீரன்தான் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தது. பாதிக்கப்பட்ட மக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று, நீதிகேட்டு சதாசிவம் கமிசன் முன்பு நிறுத்தியது. இன்றளவும் இந்த கொடூரங்களைத் தாங்கிய மரத்துப் போன மனதோடுதான் அவர்கள் வாழ்கிறார்கள். அப்படியே தான் இந்த டாக்குமெண்டரியில் பேசுகிறார்கள். இன்றளவும் அவர்களுக்கான குறைந்தபட்ச நிவாரணம் கூட கிடைக்காமல் இருப்பதுதான் அதிகார வர்க்கத்தின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

வீரப்பனுக்கு ஜெயலலிதா, கலைஞர், ரஜினிகாந்த், ராமதாஸ், வைகோ என்ற ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களின் மீதும் ஒரு பார்வையும், விமர்சனமும், கரிசனமும் இருந்திருக்கிறது. அதை அவர் விவரிக்கும் விதமும் நக்கலாகவும் இருக்கிறது. மேலும் இத்தொடரில் மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நக்கீரன் மூத்த நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், திரைக்கலைஞர் ரோகிணி, அரசியல் செயற்பாட்டாளர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனைப் பற்றிய அனுபவங்களையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது கருத்துகளைப் பகிர்கின்றனர்.

இந்த டாக்குமெண்டரி சீரீஸ்ஸை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் உடன் இணைந்து எழுதி, சித்தரிப்பு காட்சிகளை ஷரத் ஜோதி திறம்பட இயக்கியுள்ளார். இந்த படைப்பின் தொழில்நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்குள்ளேயே கேமராவை கொண்டு வந்து பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளார். டாக்குமெண்டரியின் புட்டேஜ் பல மணிக்கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும், அதை குறிப்பிட்ட நேர அளவிற்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பாகப் படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராம் பாண்டியன், இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் பின்னணி இசையின் பங்களிப்பு, டாக்குமெண்டரியை சினிமாவைப் போன்று ரசிக்க வைக்கிறது. நடித்த அனைவரும் வீரப்பன் வாழ்ந்த காலத்திலிருந்த பல மனிதர்களைக் கண் முன்னே நிறுத்துகிறார்கள். 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரின் உருவாக்கத்தில் இந்த டாக்குமெண்டரி உருவாகியிருக்கிறது. இந்த மூவரும் பெரும் நெருக்கடியான நிலையில்தான் இந்த படைப்பில் உழைத்திருக்க வேண்டும். ஏனெனில் எங்கேயும் வீரப்பனை ஹீரோவாகவும் காட்டவில்லை, வில்லனாகவும் காட்டவில்லை, வீரப்பன் என்னவாக இருந்தார் என்பதையும், வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் நடந்த கொடுமைகளையும், வீரப்பனால் கொல்லப்பட்டவர்களைப் பற்றியும் நேர்மையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்த நேர்மைதான் இந்த டாக்குமெண்டரியின் உண்மையான வெற்றியாகும்.