Skip to main content

நக்கீரன் கொடுத்த குரல்! நம்பிக்கை பெறும் காவல்துறையினர்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020



நக்கீரன் யூடியூப் சேனலில் ''இவர்களுக்கு யார் காவல்?'' என்ற தலைப்பில் ஊரடங்கின்போது காவல்துறையினரின் பணிச்சுமை - மனஅழுத்தம் - பாதுகாப்பின்மை குறித்து சொல்லியிருந்தோம். 
 

''ஊரடங்கு நாட்களிலும் வீட்டில் இருக்க முடியாமல் இருப்பவர்கள் காவல்துறையினர். வீட்டுக்குள் இருக்க வேண்டிய மக்கள், ஊருக்குள் உலவக் கூடாது என்பதற்காக காவலர்கள் ஊர் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 

21 நாள் ஊரடங்கின் முதல் நாளில், டூவீலர்களிலும், கார்களிலும் சுற்றியவர்களை நிறுத்தி, கைக்கூப்பி கும்பிட்டு, கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்த காவலரைத் தமிழகம் பார்த்தது.
 

அதேநாளில், அவசர பணிக்காக சென்ற டாக்டர்கள் உள்பட பலரையும் லத்தியால் அடித்த போலீஸ்தனத்தையும் தமிழகம் பார்த்தது. 
 

காவல்துறைக்கு எப்போதுமே இந்த இரட்டை அணுகுமுறை உண்டு.
 

இப்போதும், மக்களை விரட்டுகின்ற போலீசார் இருக்கிறார்கள். பசித்தவர்ளைத் தேடிச் சென்று உணவு கொடுக்கும் போலீசாரும் இருக்கிறார்கள்.
 

மனிதர்களை தோப்புக்கரணம் போட வைக்கும் போலீசாரும் உண்டு. நாய்கள், குரங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கும் போலீசாரும் உண்டு.


 

police



மதுரையில் கறிக்கடைக்காரரின் உயிர்ப்பலி, திருவண்ணாமலையில் இளைஞரை அடித்து துவைத்த போலீஸின் கொடூரம் என காக்கி விறைப்பை பார்க்கிறோம்.
 

கருணையுடன் மக்களுக்கு தண்ணீர் கொடுத்தும், தங்குவதற்கு பாதுகாப்பளித்தும் கடமையாற்றும் போலீசாரையும் பார்க்கிறோம்.


 

nakkheeran app


காக்கி விறைப்பாக இருந்தாலும், கல்லுக்குள் ஈரமாக இருந்தாலும் போலீசார் இந்த ஊரடங்கு காலத்தில், வீதியில்தான் நிற்கிறார்கள்.
 

ஏப்ரல் மாத வெயில், இரவு நேர கொசுக்கடி என எந்தச் சூழலாக இருந்தாலும் அவர்களின் இப்போதைய டியூட்டி, தெருவில்தான் நின்றாக வேண்டும். ரோட்டில் போலீஸ் இருக்கிறது என்று தெரிந்தால் மக்களிடம் சமூக ஒழுங்கு வெளிப்படுகிறது.
 

போலீஸ் நடமாட்டம் தெரிந்தவுடன், கடைகளில் இடைவெளி விட்டு நிற்கிறார்கள். ஆள் இல்லாவிட்டால் ஆட்டுமந்தைகள் போல இறைச்சிக் கடைகளிலும், காற்கறி சந்தைகளிலும் குவிகிறவர்களும் உண்டு.


 

police



இத்தனை காலம் சட்டம்-ஒழுங்கு காவலர்களாக இருந்த போலீசார் இப்போது சமூக ஒழுங்கின் காவலர்களாக ஆகியிருக்கிறார்கள்.
 

கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா?  தெருவில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆங்காங்கே தடுப்பரண் அமைத்து நிற்பவர்கள் கான்ஸ்டபிள்கள்.
 

ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் கால்கடுக்க நிற்கிறார்கள். அவர்களுக்கு சரியான மாஸ்க் காவல்துறையால் வழங்கப்படுகிறதா?
 

அட போங்கப்பா.. டாக்டர்-நர்ஸூக்கே என்-95 மாஸ்க் இல்லையாம். இதில் போலீசுக்கு மாஸ்க்கா என்று கேட்கத் தோன்றும்.
 

உண்மைதான்.. மருத்துவத்துறையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். காவல்துறையினர் உயிர் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுகிறார்கள்.
 

ஊரடங்கு நேரத்தில், பிக்னிக் போவது போல டூவீலரில் நெருக்கியடித்துச் செல்லும் மொத்த குடும்பத்தையும் நிறுத்தி விசாரிக்க வேண்டும்.
 

காஸ்ட்லி பைக்கில் டுபு,டுபுவென செல்லும் இளசுகளை ஓரங்கட்டி செக்கிங் செய்ய வேண்டும்.
 

மெடிக்கல் ஷாப்புக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, வேறுவகையான மருந்துகளைத் தேடும் குடிமகன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 

அரசு சின்னம் போட்ட வாகனங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும். அவற்றை யாரேனும் தவறாகப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
 

டெம்போக்களில் மீடியா ஸ்டிக்கரும், லாரிகளில் அட்வகேட் ஸ்டிக்கரும் ஒட்டிககொண்டு போகிற கூத்துகளைத் தடுக்க வேண்டும். நாள்தோறும் முன்பின் தெரியாத, முகக்கவசம் அணிந்த-அணியாத மனிதர்களை எதிர்கொள்ள வேண்டும்.
 

இவர்களில் யாருக்கு கரோனா  தொற்று உள்ளது என்று டாக்டர்களாலேயே உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் போலீசாரால் எப்படி கண்டறிய முடியும்?
 

பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீசாரில் எத்தனை பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? நோய்த்தொற்று ஏற்படாதபடி என்னென்ன பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன?
 

கால் கடுக்க ரோட்டில் நின்று, உச்சி வெயிலை தலையில் வாங்கி, போவோர் வருவோரை விசாரித்து, கரனோ யுத்தத்தில் முன்கள வீரர்களாக செயல்படும் பலரும் கான்ஸ்டபிள்கள்.
 

அவர்களுக்கு அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர்களும், இன்ஸ்பெக்டர்களும் களத்தில் நிற்கிறார்கள்.
 

அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் இவர்களுக்கான பணிகளை ஒதுக்கி, சரியாக வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்கின்ற வேலைகளை செய்கிறார்கள்.
 

அதேநேரத்தில், சாலையில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்-உணவு உள்ளிட்டவை கிடைக்கின்றனவா என கண்காணிக்கவேண்டியதும் உயரதிகாரிகள் கடமைதானே!
 

இதில்  பெண் காவலர்கள், பெண் இன்ஸ்பெக்டர்கள், பெண் எஸ்.ஐ.கள் நிலை மிகவும் பரிதாபம். ரோட்டில் நிற்கும்போதும் பிரச்சனை. வீட்டுக்கு சென்றாலும் பிரச்சனை. அம்மா என்று ஆசையுடன் வரும் குழந்தையைத் தொட்டுத் தூக்க முடியாது.
 

“எதற்காக இந்த வேலை? எல்லாருக்கும் நோயை பரப்பி விடுறதுக்கா?“ எனக் கேட்கும் பெரியவர்களின் கேள்விக்கு பதில் இருக்காது.  

 

ஊரடங்குக்கு முன்புவரை வலியவந்து பேசி, சல்யூட் வைத்த அக்கம்பக்கத்தார்கூட, இப்போது நாலடி தள்ளி நடந்து, மரியாதை காட்டுவது போல  ஒதுங்கிச் செல்வார்கள்.

ஆண் காவலர்களுக்கும் இதே நிலைதான். வீட்டில் தனியே உட்கார்ந்து சாப்பிட வேண்டிய நிலையை சந்திக்கும் காவலர்களும் இருக்கிறார்கள்.
 

குடும்பத்தினர் நலன் கருதி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ள காவலர்களும் இருக்கிறார்கள். பணிச்சுமை-மனஅழுத்தம்-பாதுகாப்பின்மை இவைதான் காவலர்களை ஆக்கிரமித்துள்ளன.
 

மக்களைப் பாதுகாக்கும் காவல் பணியில் உள்ள இவர்களின் உயிருக்கும் இவர்களை நம்பி இருக்கும் உயிர்களுக்கும் யார் காவல்?
 

காவல்துறையின் உயரதிகாரிகளும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் மட்டுமே இந்தக் கேள்விக்கு தங்கள் செயல்பாடுகளால் பதில் சொல்ல முடியும்.
 

சொல்வார்களா?''

 

இவ்வாறு கேள்வி எழுப்பி நாம் காணொளி வெளியிட்ட பிறகு, கடந்த 10.04.2020 அன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐ.பி.எஸ். அவர்களை நேரில் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 18,000 முக கவசங்களை வழங்கினார். இதேபோல் காவலர்களுக்கு சானிடைசர், கையுறை போன்றவைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 

 

மேலும் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி, பேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு காவலர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தங்களுக்காக குரல் கொடுத்ததற்காக நக்கீரனை தொடர்பு கொண்ட காவலர்கள் சிலர் நன்றி தெரிவித்தனர். 
 




 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.