Skip to main content

காவிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் - நாஞ்சில் சம்பத் அதிரடி!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

ரக

 

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார்.

 

அவர் பேசியதாவது, "திராவிட இயக்கத்திற்கு என ஒரு பெருமை இருக்கிறது. இந்தத் திராவிட இயக்கத்தைப் பற்றி நாம் பேசாத பேச்சுகள் இல்லை. வானளவுக்குப் பேசியுள்ளோம். அண்ணா நாடாளுமன்றத்தை திகைக்க வைத்துள்ளார். நான் ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று பெருமையாகக் கூறியுள்ளார். அண்ணா நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுகளைக் கேட்ட, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பாபு ஜெகஜீவன் ராம் எழுந்து நானும் திராவிடன்தான் என்று கூறியதை யாரும் மறக்க மாட்டோம். அவரையே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று பேசவைத்த நாக்கு அண்ணாவின் நாக்கு! காவிக் கும்பல்களுக்கு ஒரு முடிவெடுக்க வேண்டுமானால் எட்டுத்திசைகளிலும் நம் முழக்கத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான தொடக்கத்தை தம்பி உதயநிதி இங்கே தொடங்கி வைத்துள்ளார். அன்றைக்கு திராவிட இயக்கத்தாருடைய பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால், இந்த இடத்திற்கு நான் வந்திருக்கவே மாட்டேன். 1977-ம் ஆண்டு நெல்லையில், கலைஞர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேசிய பேச்சுகளைக் கேட்காமல் இருந்திருந்தால் நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன். 

 

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வார்த்தைகள் அதிகம் ஒலித்துக்கொண்டு இருக்கும். ஆனால், தற்போது ஒரு வார்த்தை தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அது, அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதுதான். அவரை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்தத் திராவிட இயக்கம் செய்து வருகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்ட அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க, தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகின்றது. இன்றைக்கு ஸ்டாலின் மீது வேண்டுமென்றே சனாதான கும்பல் கல் எறிகிறார்கள். திட்டமிட்டு அதனைச் செயல்படுத்துகிறார்கள். நம் கொள்கை வழிநின்று ஏதாவது செய்திகளைக் கூறினால் நம்மை மிரட்டுகிறார்கள், தொலைப்பேசியில் தொல்லை தருகிறார்கள். இது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மோசமான கலாச்சாரம் தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கின்ற காலக்கட்டம் இது. ஒரு கலாச்சார பாசிசம் என் கண்ணுக்கு எதிரே தெரிகிறது. 

 

அண்ணா, கலைஞர் இல்லாத குறையை இன்றைக்கு ஸ்டாலின் போக்கிக்கொண்டு இருக்கிறார். நூற்றாண்டு கண்ட இந்தத் திராவிட இயக்கத்தை தற்போது ஸ்டாலின் தூக்கி சுமந்து வருகிறார். நம்முடைய தமிழக மக்கள்தான், இன்னும் அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லையே தவிர, மராட்டிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தேவ் தாக்கரே கூட இவரைத்தான் முதல்வராக நினைத்துக் கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமன் சோரன் பொறுப்பேற்றால் கூட அவர் ஸ்டாலினை தான் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறார். எனவே தென்னகத்தின் சார்பில் வாழத்துவதற்கு நம் தலைவரைத்தான் அழைக்கிறார்கள். அவரை விட்டால் அழைப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி யாரை அழைக்கிறார், நம்முடைய ஸ்டாலினைத்தான் அழைக்கிறார். தென்னாட்டு அரசியலில் அதிசயத்தை ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேவையில்லாத ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை நம்மீது வைக்கிறார்கள். எனவே அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நாம் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபட வேண்டும்" இவ்வாறு பேசினார்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.