Skip to main content

"என்னிடம் அதிகாரம் வருவதற்குள் இறந்துவிடுங்கள்.." - யாரை சொல்கிறார் சீமான்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019


மதுரை ஒத்தக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சீமான் பேசினார். அப்போது, '' யாரை தீவிரவாதி, பயங்கிரவாதி என்று அனைவரும் சொல்கிறார்களோ அவரை வைத்தே, அவரின் கொள்கையை வைத்தே தமிழ் தேசிய இனத்தை கட்டமைப்போம். அவரை வைத்தே இந்த இனத்தை எழுச்சி பெற வைப்பேன். என் பிள்ளைகள் மீது வழக்கு போடலாம், வன்முறைகளை கட்டவிழ்த்து விடலாம், விடிய விடிய சிறை வைக்கலாம். அவர்களை எல்லாம் ஒரு நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். தயவு செய்து கேட்கிறேன் என்னிடம் அதிகாரம் வருவதற்குள் நீங்கள் எல்லாம் இறந்து விடுங்கள். இல்லையென்றால் உங்களை கொன்று அந்த கொலை பழியை நான் ஏற்க வேண்டிவரும்.

இது என் அன்பான வேண்டுகோள், செத்துபோயிடுங்க. தனக்கு பிடித்த நடிகர்களை படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று கூறி மண் சோறு சாப்பிடும் ரசிகர்கள் இருக்கும் இந்த நாட்டில், இவர்கள் கூடவா நாம் பிறந்தோம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதை நினைத்தால் தூக்கம் வராது. கவலை வரும், வேதனை வரும், துயரம் வரும், கண்ணீர் வரும் ஆனாலும் தலைவர் புகைப்படத்தை பார்க்கும்போது புதுதெம்பு வரும். போராடலாம் என்ற எண்ணம் வரும். நாங்கள் வரலாறு பேசுகிறோம், மொழி பெருமை பேசுகிறோம். உலகில் அவனவன் தாய் மொழியில் பேசுகிறான். நாங்கள் மொழிகளுக்கெல்லாம் தாயான எங்கள் தமிழ் மொழியில் பேசுகிறேன். 
 

d




ஜெயலலிதா இறந்து போயிடுமோனு கொஞ்ச பேரு இறந்து போனான், ஜெயலலிதா இறந்து போனத்துக்கு கொஞ்சம் பேரு இறந்து போனான், எம்.ஜி. ஆர் இறந்து போனத்துக்கு கொஞ்சம் பேரு இறந்து போனான். இந்திரா காந்தி இறந்து போனதற்கு 17 பேர் இறந்து போனான். இறந்தவன் அத்தனை பேரும் தமிழர்கள். ஒரு புத்தகத்தில் இந்த உண்மைகள் எல்லாம், தமிழன் ஏன் அடிமையானான் என்ற தலைப்பில் இருக்கிறது. தமிழன் மனத்தால் பலகீனமானவனாக அப்போது இருந்திருக்கிறான். அவர்களை மாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்த மாற்றத்தை செய்து வருகிறேன் என் தம்பி, தங்கைகளோடு. தனக்கு பிடித்த சினிமா நடிகர்களின் படங்கள் ஓடவில்லை என்று கூறி சில ரசிகர்கள் இறந்து போறார்கள். அவர்களை எப்படி திருத்துவது. இதை பார்க்கும் மற்றவர்கள் இது என்ன மடையர்கள் கூட்டம் என்று நினைக்க மாட்டார்களா?

இவர்களை அனைவரையும் தலைவரின் படத்தை காட்டி மாற்றுவேன். நான் இறக்கும் வரைக்கும் போராடுவேன். இல்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு கடத்துவேன்.  திரைத்துறையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தமிழகத்தில் மட்டும்தான். கேரளாவைப் பாருங்கள். அந்த மாநிலத்தில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களைத் தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேரள மக்களின் புரிதல் தமிழர்களுக்கு இல்லை. ராணுவ வீரர் ஓய்வு பெற்றால் ஏதாவதொரு நிறுவனத்துக்கு காவலாளி வேலைக்குச் செல்கிறார். ஆனால், நடிகர்கள் மட்டும் ஓய்வு பெற்றால் நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்நடிகர்கள் தாங்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி, மக்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறது. தமிழினத்துக்குத் துரோகம் செய்த தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் லட்சியமாகும்'' என்றார்.

 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.