Skip to main content

மீண்டும் களமிறங்கும் என்.கே.கே.பி. ராஜா! -அ.தி.மு.க. கலக்கம்!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020
erode district

 

 

கொங்கு பெல்ட்தான் கடந்த 2016-ல் தி.மு.கவின் காலை வாரிவிட்டது. அதிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் அ.தி.மு.க. வசமானது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் இரண்டாயிரம், ஈரோடு கிழக்கில் 7 ஆயிரம், ஈரோடு மேற்கில் 5 ஆயிரம், பெருந்துறை தொகுதியில் 13 ஆயிரம் என்ற வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியடைந்தது.

 

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தில் உள்ள அந்தியூர், பவானிசாகர், பவானி, கோபிசெட்டிபாளையம் இந்த நான்கு தொகுதிகளில் பவானியைத் தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும் வெறும் ஆயிரக்கணக்கான வாக்குகளில் தி.மு.க. தோல்வியுற்றது. ஈரோடு மாவட்டத்தில் சொற்ப வாக்குகளில் தி.மு.க. தோற்றுப் போகாமல் எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, கொங்கு பெல்ட்டின் மற்ற பகுதிகளிலும் கணிசமாக வென்றிருந்தால் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கும்.

 

இப்போது மீண்டும் அந்த தவறு ஏற்படக்கூடாது என்பதில் திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் தொடக்கமாக கட்சி பணிகளில் ஒதுங்கியிருந்த மாஜி மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவை மீண்டும் செயல்பட கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் அமைச்சரான என்.கே.கே. பெரியசாமியின் துணைவியார் (என்.கே.கே.பி. ராஜாவின் தாயார்) மூன்று வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார். சென்றவாரம் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜா வீட்டுக்குச் சென்று அவரது தந்தை பெரியசாமி மற்றும் ராஜாவிடம் துக்கம் விசாரித்ததோடு, ராஜாவிடம் சென்னைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் 11-ந் தேதி சென்னை சென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து விட்டு உற்சாகமாகத் திரும்பியிருக்கிறார் ராஜா.

 

கட்சி நிர்வாகத்தில் அதிரடியான செயல்பாடு கொண்ட ராஜாவுக்கு வடக்கு மாவட்ட கட்சி பொறுப்பு விரைவில் கொடுக்கப்பட இருக்கிறது. அதில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிக்கு உறுதி கொடுத்துள்ளாராம் என்.கே. கே.பி.ராஜா.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய என்.கே.கே.பி.ராஜா ""கட்சித் தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க எனது செயல்பாடு இருக்கும். ஈரோடு மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து செயல்படுவேன். தி.மு.க.வின் வெற்றிதான் ஒரே லட்சியம்'' என்றார்.

 

2006 தேர்தலில் ஒட்டு மொத்த ஈரோடு மாவட்ட தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றி பெற வைத்தவர் என்.கே.கே.பி. ராஜா. கலைஞர் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். அதிரடியான போக்குகளை நக்கீரன் அம்பலப்படுத்த, அவரது பதவி பறிபோனது. இப்போது முற்றிலும் மாறுபட்ட இரண்டாவது இன்னிங்ஸுக்காக ரெடியாகியுள்ளார்.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.