அ.தி.மு.க. நிர்வாகி லாரி ஏற்றிக் கொலை? - திகிலைக் கிளப்பும் பின்னணி மர்மங்கள்

புதுப்பிக்கப்பட்டது
97

அவ்வப்போது நடக்கிற அரசியல் படுகொலைகள் சமூகத்தின் அடிமட்டக் கட்டமைப்புகளையே தகர்த்துவிடுகிற அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணமே நிலம், பகை, அதிகாரம் என்கிற அச்சமும் பீதியும் கிளம்பியிருக்கிறதாகப் பேசப்படுகிறது.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்தின் குறுக்குச்சாலை அருகேயுள்ள சந்திரகிரி சாலையில் கனிமக் கற்களை ஏற்றிவந்த டாரஸ் லாரி ஒன்று எதிரே வந்த பைக் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. மோதிய வேகத்தில் தூக்கிவீசப்பட்ட பைக்கிலிருந்த நபர் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஒட்டப்பிடாரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய பிறகே, விபத்தில் உயிரிழந்தது கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவியான வள்ளியம்மாளின் கணவர் முத்து பாலகிருஷ்ணன் என்பது தெரிய வந்திருக்கிறது. அன்றைய தினம் காலையில் குறுக்குச் சாலை வந்த முத்து பாலகிருஷ்ணன், வேலையை முடித்துவிட்டு தனது ஊரான கொல்லம்பரும்புவிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த போதுதான் எதிரே வந்த கனிமக் கற்களைக் கொண்ட டிப்பர் லாரி மீது மோதியதில் பலியாகியிருக்கிறார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டிருக்கிறார்கள். அதன் பின்பே பின்னணியில் மறைந்திருந்த வில்லங்க விவகாரங்கள் வெடித்து பதற்றத்தைக் கிளப்பியிருக்கின்றன.

‘இது விபத்து கிடையாது. முத்து பாலகிருஷ்ணன் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை விபத்து என்ற கணக்கில் முடிக்கப்பார்க்கிறார்கள். இதற்கு காரணமான நபர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்..’ என வலியுறுத்தியதோடு உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் உறவினர்கள். விபத்து குறித்து வழக்குப் பதிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், டிப்பர் லாரி டிரைவர் சவுந்திரராஜன் என்பவரைக் கைது செய்து விசாரணையைக் கிளப்பியிருக்கின்றனர்.

92

மேலும், ‘இதன் பின்னணியில், ரியல் எஸ்டேட் பகைமைகளும் இருக்கின்றன. இந்த தொழிலில் கொல்லம்பரும்பு பகுதியின் அரசியல் கட்சிகளின் புள்ளிகளும் இருக்கிறார்கள்..’ என்று வலியுறுத்திய உறவினர்கள் தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட சிலரையும் விசாரித்துக் கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை பலமாக  வைத்திருக்கின்றனர்.

பின்னணி நிலவரம் திகைக்க வைப்பதால் அதுகுறித்து நாம் அந்தப் பகுதியிலுள்ள பல்வேறு தரப்பினரிடம் பேசியதில் கிடைத்தத் தகவல்கள் அதிரவைக்கின்றன.

ஒட்டப்பிடாரம் தாலுகாவில் வருகிற குறுக்குச்சாலையை அடுத்துள்ள கொல்லம்பரும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். தற்போது அ.தி.மு.க.வின் அங்குள்ள கிளைக் கழகச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவியான வள்ளியம்மாள் கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆன்டு வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்துத் தலைவியாகப் பதவியிலிருந்தார். மானாவாரிப் பகுதியான கொல்லம்பரும்பு பகுதி, கரடுமுரடான ஏரியா. ஏக்கர் கணக்கில் பாறைகள் அடங்கியப் பகுதி என்பதும் அவைகள் கற்களைக் கொண்டவை என்றும் அறியப்பட்டதால் மாவட்டத்தின் சில பல முக்கியத் தொழில் புள்ளிகளின் பார்வை அந்தப் பக்கம் பதிந்திருக்கிறது. பெரும்பாலும் அந்தப் பகுதியின் தனியார்களுக்கே அவைகள் சொந்தமாகவும் இருந்திருக்கிறது. இதனால் அந்த இடத்தில் நிலங்களை வாங்கி குவாரிகளை அமைத்து கற்களை வெட்டி எடுத்து வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவது நடைமுறையாக இருந்திருக்கிறது. ஏற்கனவே அந்தப் பகுதிகள் குவாரிகளைக் கொண்டது என்பதால் அந்தப் பகுதியில் நில பரிவர்த்தனைகள் விறுவிறுப்பாகியிருக்கின்றன. இதனால் அங்கே ரியல் எஸ்டேட் தொழிலும் விரிவடைந்திருக்கிறது.

ஏற்கனவே தனது மனைவி பஞ்சாயத்துத் தலைவி என்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈசியாக நுழைந்த முத்து பாலகிருஷ்ணன் அந்தப் பகுதி நிலங்களை வாங்கி விற்கிற ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார். குறிப்பாக, இவரது மனைவியே பஞ்சாயத்துத் தலைவி அதனால் ரியல் எஸ்டேட் தொழிலில் முத்து பாலகிருஷ்ணனுக்குத் தடையின்றி கை கொடுத்திருக்கிறது. அதன்மூலம் அவர் சரியான வளமை கண்டிருக்கிறார். இதனால் கொல்லம்பரும்பு கிராமத்திலேயே அரசியல் பின்னணியைக் கொண்ட சிலர் இவருக்கு போட்டியாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் வள்ளியம்மாள் பஞ்சாயத்து தலைவி என்பது முத்து பாலகிருஷ்ணனுக்கு கை கொடுக்க அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னணியில் வந்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட எதிர் தரப்பினருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே இவர்களுக்குள் தொழில் ரீதியாக பகைமைகள் உருவாகியிருக்கின்றன.

 

96
முத்து பாலகிருஷ்ணன்

 

காலப்போக்கில் நிலைமைகள் மாறவே நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கொல்லம்பரும்பு கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் பதவி தி.மு.க. வசம் சென்றிருக்கிறது. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தொழில் போட்டி காரணமாக முத்து பாலகிருஷ்ணனுக்கு அங்குள்ள சிலருடன் தகராறு இருந்து வந்திருக்கிறது என்று பேசப்படுகிறது. நிலைமைகள் இப்படி இருக்க முத்து பாலகிருஷ்ணனின் ரியல் எஸ்டேட் தொழிலோ பழக்கம் காரணாக தொய்வின்றி நடந்திருக்கிறது. அதுவே அவர் மீதான எதிர்தரப்பினரின் தொழில் பகைமைக்கு அடிப்படையாகியிருக்கிறது.

அங்கே குவாரிகள் அதிகமிருப்பதால் தனது கிராமத்தின் தனக்கு வேண்டப்பட்ட சவுந்திரராஜன் என்பவரை அங்குள்ள குவாரி கம்பெனி ஒன்றில் டிப்பர் லாரி டிரைவராக வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார் முத்து பாலகிருஷ்ணன். குவாரியின் டிப்பர் லாரிகளில் ஏற்றப்பட்ட கனிமக் கற்களை அன்றாடம் கம்பெனி குறிப்பிட்ட பார்ட்டிகளுக்கு சப்ளை செய்து வந்திருக்கிறார் டிரைவர் சவுந்திரராஜன். இந்தத் தொழிலோடு சவுந்தர்ராஜ் தரப்பினர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அந்தப் பகுதியிலுள்ள நிலங்களை வாங்கி விற்கிற புரோக்கர்களாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்களாம். இந்த ரூட்டில் டிரைவர் சவுந்தர்ராஜ் தரப்பினர் அந்தப் பகுதியிலுள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே முத்து பாலகிருஷ்ணன் அண்மையில் அந்தப்பகுதியிலுள்ள மிகப் பெரிய அளவிலான மதிப்புகளைக் கொண்ட 650 ஏக்கர் நிலத்தை முக்கியப் பிரமுகருக்கு முடித்துக் கொடுத்திருக்கிறாராம். இதன் மூலம் அவருக்கு கணிசமான அளவு தொகை கமிஷனாகவும் கிடைத்திருக்கிறது. இதனால் சிலர் தொழில் போட்டி காரணமாக அவருடன் தகராறு செய்ததோடு கடும் ஆத்திரத்தையும் கிளப்பியிருக்கிறதாம்.

இதனிடையே டிரைவர் சவுந்தர்ராஜ் தரப்பினர் அந்தப் பகுதியிலுள்ள ஒன்னரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது விவகாரமாகி முத்து பாலகிருஷ்ணனின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதில் சந்தேகப்பட்ட முத்து பாலகிருஷ்ணன் அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்தபோது, அது வேறு ஒரு நபருக்கு சொந்தமானது என்பது தெரியவர அவரிடமிருந்து அந்த நிலத்தை முறையாகக் கிரையம் வங்கிய முத்து பாலகிருஷ்ணன் அதை தனியார் காற்றாடி கம்பெனிக்கு ஒன்றிற்கு விற்றிருக்கிறாராம். இந்த விவரம் தெரியவந்த சவுந்தர்ராஜ், தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனதற்கு காரணம் முத்து பாலகிருஷ்ணன் தான் என்று தெரிந்து அவர் மீது கொலை வெறியில் இருந்திருக்கிறார். இது அவரது தொழில் எதிரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. ஆனாலும் மன சமாதானம் அடையாத சவுந்தர்ராஜ் ஒன்றரை ஏக்கரை கைமாற்றியதால் தனக்கான ஆதாயம் இல்லை. அதனை ஈடுகட்ட தனக்கு அந்த விவகாரத்தில் ரூ.6 லட்சம் வேண்டும் என்று அந்த காற்றாடி கம்பெனியினரிடம் மிரட்டி நெருக்கடி கொடுத்திருக்கிறாராம். இது முத்து பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, அவரும் சவுந்தர்ராஜனிடம் பேரம் பேசியும் முடியவில்லையாம். இதனால் ஆத்திரமான சவுந்தர்ராஜ் தரப்பினர் முத்து பாலகிருஷ்ணனுக்கு கடும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

மிகப் பெரிய அளவிலான நிலங்களை முடித்துக் கொடுத்தது, ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தலையிட்டது போன்றவைகள் முத்து பாலகிருஷ்ணனுக்கு எதிரான போட்டியாளர்களை ஒன்றிணைத்திருக்கிறது. இதன் காரணமாக அண்மையில் தான், முத்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருக்கிறதாம். இதனை சகஜமாக எடுத்துக் கொண்ட அவர் தன்னுடைய அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும் பகையாளர்களின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.

93

இதனை அறியாத முத்து பாலகிருஷ்ணன் ஜூன் 24 அன்று வழக்கம்போல் காலையில் குறுக்குச்சாலை சென்றவர் அங்குள்ள வேலைகளை முடித்துவிட்டு தனது ஊர் திரும்புவதற்காக சந்திரகிரி சாலையில் வரும்போது எதிரே டிரைவர் சவுந்தர்ராஜ் ஓட்டி வந்த கனிம டிப்பர் லாரி அவரது பைக் மீது மோத தூக்கி வீசப்பட்டதில் முத்து பாலகிருஷ்ணனின் உயிர் சம்பவ இடத்திலேயே பறந்திருக்கிறது.

கொலைச் சம்பவத்திற்கு முக்கிய காரணமே மிகப் பெரிய அளவிலான நிலத்தை முடித்துக் கொடுத்ததுதான். அதனால் ஏற்பட்ட வருமான இழப்பு, தொழில் போட்டி. அதன் பின்னணியில் உள்ளவர்கள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டிரைவர் சவுந்தர்ராஜ் குறிப்பிட்ட ஒன்றரை ஏக்கர் நிலத்தையே கணக்குகாட்டி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்.

94

எனவே இது விபத்து கிடையாது. அவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணமான நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்த முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள், அவர்களைக் கைது செய்யாதவரை உடலை வாங்கப்போவதில்லை என்று மறுத்து போராடியுமிருக்கிறார்கள். சூழல்கள் இப்படியிருக்க, விசாரணையை மேற்கொண்ட போலீசார், சந்தேக வளையத்திற்குட்பட்ட சிலரைக் கொண்டுவந்து அவர்களிடம் தங்களின் விசாரணையை கடுமையாக்கியிருக்கிறார்கள்.

நாம் இதுகுறித்து தொடர்புடைய காவல்துறை சரகத்தில் விசாரித்த போது அவர்களோ, கைது செய்யப்பட்ட டிரைவர் சவுந்தர்ராஜனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தவிர முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் கொடுத்த புகாரில் குறிப்பிட்ட அனைவர் மீதும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அவர்களையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.

மனித உயிரையே காவு வாங்கியிருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி அச்சத்தையும் பீதியையும் கிளப்பியிருக்கிறது.

accident police admk Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe