Skip to main content

என் உயிருக்கு ஆபத்து உள்ளது...எங்கே போனீர்கள்...முகிலனின் 140 நாட்கள் அதிர்ச்சி சம்பவம்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்கிறார்கள்.

திருப்பதியில் ஜூலை 6-ம் தேதி காலை மன்னார்குடியிலிருந்து வந்த ரயில் எஞ்சின் முன்பு, "அமைக்காதே அணுக்கழிவு மையத்தை கூடன்குளத்தில் அமைக்காதே', "கர்நாடகத்திற்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதி', "கைது செய் ஸ்டெர்லைட் ஆலை அதிபரை கைது செய்' என பலநாள் மழிக்கப்படாத தாடியுடன் ஒருவர் தமிழில் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் காணாமல் போன -கடத்தப்பட்ட முகிலன் என்பதை அவரது பள்ளிகால நண்பர் சண்முகம் என்பவர் பார்த்துவிட்டு அதை வீடியோ வில் பதிவு செய்து முகிலனின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். ரயில் முன்பு கோஷம் போட்டுக் கொண்டிருந்த முகிலனை திருப்பதி ரயில்வே போலீசார் கைது செய்தனர். முகிலன் திருப்பதியில் ரயில்வே போலீசாரிடம் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியானதும், "அவரை தேடிக் கண்டுபிடித்து விட்டோம்' என ஏற்கனவே இரண்டுமுறை சென்னை உயர்நீதி மன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்திருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை சென்னைக்கு கொண்டு வந்தனர்.

 

mikilan



தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு என்பது போலீஸ் அதிகாரி களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை'' என கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை முகிலன் வெளியிட்டுவிட்டு, "என் உயிருக்கு ஆபத்து உள்ளது'' என்றார். அன்றிரவு ரயில் பயணத்தின் போது காணாமல் போனார். "எங்கே போனீர்கள்' என திரும்பி வந்திருந்த முகிலனிடம் கேட்டோம். ""நான் கடத்தப்பட்டேன். என்னை நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திக் கொண்டு போய் சித்ரவதை செய்தார்கள். ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்தார்கள். நான்கு பேரில் ஒருவர் மட்டுமே என்னிடம் வந்து பேசுவார். அவர் தவறான விபரங்களைத்தான் என்னிடம் கூறுவார். தமிழில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றை என்னிடம் காட்டினார். அதில் நான் காணாமல் போன துயரத்தினால் எனது மனைவியும் மகனும் இறந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.

 

mukilan



திருப்பதியில் ரயில்வே போலீசார்தான் என் மனைவியும் மகனும் நலமுடன் இருக்கிறார்கள் என்கிற உண்மையை கூறினார்கள். அவர்களது கஸ்டடியில் என்னை வைத்து ஏகப்பட்ட ஊசிகளை உடலில் செலுத்தினார்கள். பனிரெண்டு நாட் களுக்கு முன்பு என்னை நாய் கடித்தது. எனக்கு நெஞ்சுவலி வந்தது. எதற்கும் நான் சிகிச்சை பெறவில்லை. கோவையில் சுற்றுச்சூழல் போராளி ரமேஷின் மனைவியை கொன்றார்கள். குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் 2000 பேர் கொல்லப் பட்டதை வெளிப்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பழைய வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினார்கள். இதுதான் போலீஸ். இப்பொழுது என் மீது ஒரு பாலியல் வழக்கை புனைந்துள்ளனர். இதையெல்லாம் சட்டரீதியாக சந்திப்பேன்'' என வேகம் குறையாமல் பேசினார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகிலனை அவரது நீண்ட கால நண்பரும் நெடுவாசல் போராட்ட தளபதியுமான குணசீலன் என்பவர் சந்தித்துப் பேசினார். குணசீலனைத் தொடர்ந்து முகிலனின் மனைவி பூங்கொடி சந்தித்து பேசினார். அவர்கள் முகிலன் பற்றி நண்பர்களிடம் விளக்கினார்கள்.

 

mukilan



முகிலனை அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து கடுமையாக சித்ரவதை செய்துள்ளார்கள். அதனால் முகிலனின் மனநிலை சிறிதளவு பாதிப்பு அடைந்துள்ளது. ஈஞதடஞதஆக பஞதபமதஊ எனப்படும் இந்த சித்ரவதை மிகக் கொடுமை யானது. தனிமையான அறையில் அடைக்கப்படும் நபர்கள் எந்தவிதத்திலும் வெளியுலக தொடர்பு கொள்ள முடியாது. யாருடனும் பேச முடியாது. சில நேரங்களில் சூரிய வெளிச்சத்தைக் கூட பார்க்க முடியாது. அடி, உதை, சுகாதாரமற்ற, கொசுக்கள் மொய்க்கும் கழிவுகள் ஆகியவற்றுக்கிடையே வாழ வைப்பார்கள். இந்த விதமான கொடுமையை முகிலன் ஏற்கனவே அனுபவித்துள்ளார். ஒருமுறை சிறையில் இதுபோன்ற சித்ரவதையை முகிலனுக்குக் கொடுத்தார்கள். (அதை நக்கீரனிலும் சிறைப் பேட்டியாக தெரிவித்திருந்தார்). கூடங்குளம் ஆற்றுமணல் கொள்ளை, மணல் கொள்ளை இவற்றுக்கெதிராக முகிலன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளை தனித்தனியாக சந்திக்க முடியாது. அல்லது "நான் கைதாகிறேன்', "என்னை சிறையில் வைத்து வழக்குகளை முடியுங்கள்' என முகிலன் கைதானார். அவரை தனிமைச் சிறையில் சூரிய வெளிச்சம் புகாத அறையில் மலநாற்றத்தையும் கொசுக்கடியையும் அனுபவிக்க வைத்தார்கள். அதை நீதிமன்றத்தில் புகாராக தெரிவித்தார் முகிலன். அதைத் தொடர்ந்து அவர் விடுதலை ஆனார்.


அவரை மறுபடியும் சிறையிலடைத்தால் அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்பதால் அவரை, ஸ்டெர்லைட் "மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற வீடியோவை வெளியிட்டதும் கடத்தி சென்றார் கள். அந்த வீடியோவில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியது. சைலேஷ்குமார் யாதவ் என்கிற ஐ.ஜி.யும் கபில் சிரோத்கர் என்கிற டி.ஐ.ஜி.யும்தான் அதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு என கூறியிருந்தார். (இதை துப்பாக்கிச் சூட்டின் போதே ஆதாரங்களுடன் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது). காவல்துறை அதிகாரிகளின் செயல்கள் தொடர் பான ஆதாரங்கள் முகிலனுக்கு எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளவே முகிலனை கடத்தினார்கள். அவர் கடத்தப்பட்ட செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவரவே அவரை கொன்றால் ஆபத்து என முடிவு செய்த போலீசார் முகிலனுடன் நெருக்கமாக போராட்டங்களில் செயல்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டனர். அவர், "நெடுவாசல் போராட்டத்தின் போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெடுவாசலில் உள்ள ஒரு தங்குமிடத்தில் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்' என முகிலன் மீது புகாரை தெரிவித்தார். இது முகிலனின் பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்மணி தன் புகாரில் உறுதியாக இருந்தார். ஆனால், "நெடுவாசலில் தங்கும் விடுதிகளே இல்லை. எனது வீட்டில்தான் முகிலன் தங்கினார். வீட்டு வராண்டாவில் படுத்து கிடந்த முகிலன் எப்படி பாலியல் ரீதியாக தவறாக நடந்திருக்க முடியும்' என நெல்சன் லெனின் என்பவர் முகநூலில் பதிவிட்டார். உடனே முகிலன் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. திலகம் "அந்தப் பதிவு சட்டவிரோதம்' என நீக்க வைத்தார்.


செந்தமிழன் என்கிற நக்சல் தோழரை சிறையிலேயே சித்ரவதை செய்து, மனநிலை பிறழச் செய்து வெளியே மனநோயாளியாக்கி அனுப்பி யிருக்கிறார்கள். அதே போல் முகிலனை ஸ்டெர்லைட், வி.வி.மினரல் நிறுவனத்தார் மற்றும் தமிழ்நாடெங்கும் மணல் திருடும் வி.ஐ.பி.க்கள் என அனைவரும் சேர்ந்து சித்ரவதை செய்து மன நோயாளியாக்க முயற்சி செய்துள்ளனர். இரண்டு முறை கோர்ட்டில் "முகிலன் இருக்குமிடத்தை கண்டு பிடித்து விட்டோம்' என சொன்ன சி.பி.சி.ஐ.டி. போலீ சார் அந்த வழக்கு விசா ரணைக்கு வரும் நிலையில் தான், கடந்த 6-ம் தேதி முகிலனை கைது செய்து கோர்ட் கண்டனத்தில் இருந்து தப்பியிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, "அதெல்லாம் இல்லை. முகிலனை வெளியே வரவைத்தது அவரது குருவான கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷின் மனைவியின் மரணம்தான். உளவியல் தாக்குதலால் முகிலன் அவராகத்தான் தலைமறைவாக இருந்தார். அவர் தலைமறைவாக இருக்கும் இடம் கோவை ரமேஷுக்கு நெருக்கமானவரும் கம்ப்யூட்டர் வல்லுநருமான இன்னொரு ரமேஷ், டாக்டர் புகழேந்தி ஆகியோருக்கு நன்றாக தெரியும். முகிலன் தலைமறைவாக இருந்த காலகட்டத்திலோ அவர் மீண்டும் வெளிப்பட்ட 6-ம் தேதி வரை இவர்கள் எதையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை. போராட்ட களங்களில் நெருக்க மாக பழகிய பெண், முகிலன் மீது பாலியல் புகார் சொல்லப் போவதாக தெரிவித்து வந்தார். இது முகிலனை பாதித்தது. தனது பொதுவாழ்க்கைப் போராட்டங்கள் கேள்விக்குள்ளாகும் என்ற பயத்தில் முகிலன் தலைமறைவானார். அவருக்கு அவரது தோழர்கள் உதவி செய்தனர்.

கோவை ரமேஷின் மனைவி இறந்தபிறகு அந்த உதவிகள் நின்று போயின. அதனால் முகிலன் வெளியே வர வேண்டியதாயிற்று. வெளியே வந்தவுடன் தன்னை கடத்தினார்கள் எனச் சொல்கிறார். முகிலன் மீது புகார் சொல்லியுள்ள பெண்மணியின் பெற்றோர் "என் பெண்ணை போராட்டக்காரர்கள் கடத்தி விட்டனர்' என புகார் சொன்னபோது, "அப்படி இல்லை' என மறுத்தவர்தான் அந்தப் பெண்மணி. அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தனது மனைவியும் மகனும் இறந்து போனதாக போலீசார் பொய்த் தகவல் சொன்னார்கள் என சொல்லும் முகிலன், ரமேஷின் மனைவி இறந்ததை பற்றி மிகச் சரியாக பேசுகிறார். மகனும் மனைவியும் உயிரோடிருக்கிறார் கள் என தெரிந்து கொள்ள முடியாத முகிலனுக்கு ரமேஷின் மனைவி இறந்தது மட்டும் எப்படி தெரிந்தது. நாய் கடித்து 12 நாளாகிவிட்டது எனக் கூறும் முகிலன், நாய் கடிக்கும் போது வெளியேதான் சுற்றித் திரிந்திருக்கிறார். இதையெல் லாம்தான் நாங்கள் கோர்ட்டில் தெரிவித்தோம்'' என்கிறார்கள்.

முகிலனின் போராட்ட செயல்பாடுகளும் அவர் மீது பெண்மணி கூறியுள்ள புகாரும் விசாரணையில் உள்ளன. முகிலனின் மனைவி பூங்கொடி தன் கணவன் மீது நம்பிக்கை தெரிவிக்கிறார். பெண்மணி கடுமையாக புகார் கூறுகிறார். நீதியின் தீர்ப்பு விரைவில் தெரியும். போராளிகள் மீது பாலியல் புகார் கூறுவதுடன் அவர்களை சித்ரவதை செய்வதும் வழக்கமான ஒன்றுதான் எனக் கூறும் சமூக ஆர்வலர் பியூஷ் மனூஸ், "மக்களின் அன்பே அவர்களுக்கு பாதுகாப்பு' என்கிறார். அதிகாரத்தின் கரங்களோ, உண்மையான போராளிகளின் தனிப்பட்ட சிக்கல்களை புகாராக்கி, மொத்த போராட்ட உணர்வையும் சிதைக்கும் நாடகத்தை அரங்கேற்றுகிறது.
 

 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.