Skip to main content

நீங்கள் ஃபிட்டானவரா மிஸ்டர் மோடி???

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

தூத்துக்குடியே கொலைக்களமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றத்தில் தவிக்கிறது. உலக பத்திரிக்கைகள் கூட இதை அரசாங்கப் படுகொலைகள் என்று கண்டித்து எழுதிக்கொண்டிருக்கின்றன. மோடியும் ஓ.பன்னீர்செல்வமும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

களத்தில் இருக்கப்போவதில்லை என்று நமக்குத் தெரியும். ஆலோசனைக்கூட்டம்? ம்ஹும். அறிக்கைகள். ம்ஹும். பத்திரிக்கையாளர் சந்திப்புகள். ம்ஹும். வேறு ?

MODI


 

 

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக வின் உயர்மட்டக் குழு, அதிமுக நிர்வாகி ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

உலகின் எந்த மூலையில் ஒரு உயிர் போனால் கூட தன் ட்விட்டர் மூலம் கண்ணீர் வடிக்கும் மோடி, தூத்துக்குடி படுகொலைகளைப் பற்றி ஒரு கண்டனம் வேண்டாம், ஒரு வருத்தம் தெரிவித்திருக்கிறாரா என்றால் இல்லை.

ஆனால் விராட் கோலியிடம் ஃபிட்னெஸ் சேலஞ்ச் விளையாடிக் கொண்டிருக்கிறார் திரு.நரேந்திர மோடி. அது என்ன ஃபிட்னெஸ் சேலஞ்ச்? ஒன்றுமில்லை. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் அவ்வப்போது எதையாவது ஒன்றை ஹேஷ்டேக் ஆக்கி சேலஞ்ச் செய்வது வழக்கம். கருப்பு வெள்ளை புகைப்பட சேலஞ்ச், நெயில்பாலிஷ் சேலஞ்ச், பழைய புகைப்பட சேலஞ்ச் என்று. அதில் இப்போது சுழன்று கொண்டிருப்பது இந்த ஃபிட்னெஸ் சேலஞ்ச். அதாவது நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை எடுத்து உங்கள் ட்விட்டரில் போடவேண்டும். போட்டுவிட்டு வேறு யாரையாவது போடுமாறு சேலஞ்ச் செய்யவேண்டும். அவர்களும் வீடியோ போட்டு வேறு யாரையாவது சேலஞ்ச் செய்யலாம். இப்படியே இது நீளும். நாம் உறுதியோடு இருந்தால் இந்தியா உறுதியோடு இருக்கும் என்கிற ஹேஷ்டேக்கோடு இது பரவுகிறது. மோடியும் கடந்த சில நாட்களாக இந்த ஃபிட்னெஸ் சேலஞ்ச் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.  

இந்நிலையில் நேற்று ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை போட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சேலஞ்ச் செய்திருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் நேற்றிரவு போடப்பட்ட இந்த சேலஞ்சிற்கு இன்னும் அனுஷ்காவோ தோனியோ எந்த பதிலையும் போடவில்லை. பார்க்கவில்லையா இல்லை வேலைப்பளுவா தெரியவில்லை. ஆனால் முதல் ஆளாக முந்திக்கொண்டு இதை ஏற்றுக்கொண்டு பதில் போட்டிருப்பது ஒருநாள் கூட லீவ் போடாமல் தொடர்ந்து வேலை செய்பவர் என்று புகழப்படும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

காலை எழுந்ததும் முதல் வேலையாக விராட் கோலிக்கு பதில் சொல்லியிருக்கும் மோடி ‘சேலஞ்ச் ஏற்றுக்கொள்ளப்பட்டது கோலி. விரைவில் என் ஃபிட்னெஸ் சேலஞ்ச் வீடியோவை பதிவேற்றுகிறேன். நாம் உறுதியாய் இருந்தால் இந்தியா உறுதியாய் இருக்கும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.


 

modi

 

 

உங்கள் மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் மிஸ்டர் மோடி. அதுவும் எந்த தவறும் செய்யாமல். தன் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றைக் கேட்டு போராடியதால். பிறக்கும்போதே கேன்சரோடு பிறக்கும் குழந்தைகள் இனியாவது ஆரோக்கியமாய் பிறக்க வேண்டும் என்று. இந்த கேடு என்னோடு போகட்டும், என் சந்நிதி நன்றாக வாழட்டும் என்று. தன் மண்ணில் உட்கார்ந்துகொண்டு, தன்னை சாகடிக்கும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி இனியும் அதை செய்யக்கூடாது என்று.

ஒரு மனிதன் சுதந்திரமாய் வாழ்வதற்கான அத்தனை உரிமையும் அவனுக்கு இருக்கிறது என்று சொல்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்த உரிமைக்காக அவர்கள் கேள்வி எழுப்பினால், சுட்டுக்கொல்கிறது காவல்துறை. விரட்டி அடிக்கிறது காவல்துறை. சுற்றிநின்று அடித்து நொறுக்குகிறது காவல்துறை. இரவு வீடு புகுந்து சிறுவர்களையும் மிதிக்கிறார்கள். அடித்து இழுத்துச் செல்கிறார்கள். பெண்கள் மண்டையை கம்பிகளால் உடைக்கிறார்கள்.   இரண்டாம் நாளும் சுட்டுக்கொன்றிருக்கிறது. மூன்றாம் நாளும் சுட்டுக்கொல்கிறது. நாயைக் கூட இப்போது இப்படி ரோட்டில் சுடமுடியாது மிஸ்டர் மோடி. ஆனால் என் மக்கள் சுடப்படுகிறார்கள். இணைய சேவை முடக்கப்படுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன. தங்கள் தொலைதொடர்புக்காக மட்டும்தான் செல்பேசி சேவையைக் கூட இன்னும் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள். 

இது கலவரம் இல்லை மிஸ்டர் மோடி. அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தும் படுகொலை. ஒவ்வொரு தோட்டாவாய் சுட்டு சுட்டு கைகள் வலிக்கிறதோ என்னவோ, மத்தியப் படைகள் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இன்னும் கொலைகள் தொடர வாய்ப்பிருக்கிறது. இது எல்லாம் யாருக்காக? வேதாந்தா என்றொரு நிறுவனம். ஒரு கார்ப்பரேட்… ஓ மன்னிக்கவும். உங்கள் தோஸ்த் அல்லவா அவர்? உங்களிடம் போய் விளக்கிக் கொண்டிருக்கிறேன். ஆம். அவர் நிறுவனத்திற்காகத் தான். இந்த அரச பயங்கரவாதம் ஒரு பக்கா ‘குஜராத் மாடல்’ என்று சொல்லியிருக்கிறார் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. எல்லா புகழும் உங்களுக்கே.

 

 

இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் சென்னை வரும்போது எந்த ப்ரோட்டோகாலிலும் இல்லாமல், சட்டையில் தேசியக்கொடியையும் சட்டைப் பிளவில் பூணூலையும் காட்டிக்கொண்டு உங்களை வரவேற்பாரே திரு எஸ்.வி.சேகர். அவர் மீது இங்கு ஒரு வழக்கு இருக்கிறது. இன்னும் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று நீதிமன்றமே கேட்கிறது. ஆனாலும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர் கைது செய்யப்படவில்லை மிஸ்டர்  மோடி. காவல்துறையின் சுண்டு விரல் கூட அவர்மேல் படவில்லை.

ஆனால் வெறும் நல்ல காற்றைக் கேட்டதற்காக, அதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து கேட்டதற்காக, காவல்துறையின் குண்டுகள் எங்கள் மக்களின் உடல்களை துளைத்துக் கொண்டிருக்கிறது. மூளைகளை சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இதயத்தை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.நீங்களோ விராட் கோலியுடன் ஃபிட்னெஸ் சேலஞ்ச் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். எங்கள் உயிர்களுக்கான கண்ணீரும் கோபமும் கண்டனமும் உங்கள் ஸ்கெட்யூலில் ஏன் எப்போதும் இல்லாமல் போகிறது?

இப்போது சொல்லுங்கள் மிஸ்டர் மோடி …. நீங்கள் ஃபிட்டானவர்தானா ? உங்கள் இந்தியா ஃபிட்டானதுதானா ?

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.