Skip to main content

தந்தை பெரியாரின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் இது...

Published on 17/09/2020 | Edited on 17/09/2020
periyar

 

ராமசாமியின் வாழ்க்கையில் இது புது அனுபவமாக இருந்தது. அவருக்கு அப்போது 25 வயது. தந்தை வெங்கட்ட நாயக்கருக்கு என்றும் இல்லாத அளவுக்கு மகன்மீது கோபம் வந்துவிட்டது. கடுமையாக கண்டித்தார். கைநீட்டி அடித்தும் விட்டார்.  இது ராமசாமிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. வீட்டைவிட்டு கிளம்பி விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார். அங்கு ஏற்கெனவே, இவரைப் போல கோபித்துக் கொண்டு வந்த இரண்டு அய்யர்கள் நண்பரானார்கள். இம்மூவரும் ஹைதராபாத்துக்குப் போனார்கள். பிச்சையெடுத்து சாப்பிடுவதென்று முடிவு செய்தார்கள்.
 

ராமசாமி தங்க நகைகள் அணிந்திருந்தாலும், அவற்றை விற்று சாப்பிட வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர், தான் அணிந்திருந்த தங்கக்காப்பு, காது கடுக்கன், கழுத்துச் சங்கிலி, மோதிரங்கள், தங்க அரைஞாண் ஆகிய அனைத்தையும் கழற்றி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார். பின்னர் நண்பர்கள் மூவரும் வீடு வீடாகப் போய் பிச்சை எடுத்துச் சாப்பிட்டார்கள். ஓய்ந்த நேரத்தில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து புராணங்களைப் பற்றி விவாதம் செய்வார்கள். இரண்டு அய்யர்களும் கூறும் கதைகளுக்கு ராமசாமி விதண்டாவாதமாக பேசுவார்.
 

சாலையில் போகிறவர்கள் இவர்களுடைய பேச்சை கேட்டு ரசிப்பார்கள். அங்கு சமஸ்தானத்தில் வேலை செய்யும் ஒரு தமிழர் இவர்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். ஆனால் இவர்கள் பிச்சை எடுக்கும் விஷயம் தெரிந்தவுடன் வருத்தமடைந்தார். தனது நண்பர்களிடம் வசூல் செய்து கொடுத்தார். ராமாயண பிரசங்கம் செய்யும் வாய்ப்பும் இவர்களுக்கு கிடைத்தது. பிரசங்கம் செய்யும்போது, ராமசாமி தனது சொந்த சரக்குகளை எடுத்து விடுவார். அந்தக் கதைகளை ரசித்து கைதட்டுவார்கள்.

அங்கு சில மாதங்கள் கழிந்தன. பிறகு மூவரும் காசிக்கு செல்ல முடிவு செய்தார்கள். ராமசாமி தனது நகைகளை பத்திரப்படுத்தி, அடைக்கலம் கொடுத்த நண்பரிடம் ஒப்படைத்தார். ஒரே ஒரு மோதிரத்தை மட்டும் வைத்துக் கொண்டார். காசிக்குப் போய்ச் சேர்ந்ததும் நண்பர்கள் இருவரும் தனியாகப் பிரிந்து போனார்கள். ராமசாமி தனி ஆளானார். அங்கு ஏராளமான தர்ம சத்திரங்கள் இருந்தன. ஆனால் பிராமணர்களுக்கு மட்டுமே அங்கு சாப்பாடு கிடைக்கும். வந்த முதல் நாளிலேயே ராமசாமியின் கையிலிருந்த காசு முழுவதும் செலவாகிவிட்டது. அடுத்தநாள் முழுவதும் பட்டினி. பசி தாங்க முடியாமல் ஒரு அன்ன சத்திரத்திற்குள் நுழைந்தார். இவர் பிராமணர் அல்ல என்பதைக் கண்டு கொண்ட காவலாளி ராமசாமியை வெளியே விரட்டினான். பசியும், கோபமும் ராமசாமியை வாட்டி எடுத்தன, அந்தச் சமயத்தில் சத்திரத்திற்குள்ளிருந்து எச்சில் இலைகளை வெளியே எறிந்தார்கள். பசி தாங்கமாட்டாமல் ராமசாமி இலைகளை நோக்கி ஓடி அவற்றில் இருந்ததை எல்லாம் வழித்துப் போட்டு பசியை தீர்த்துக் கொண்டார்.


 

periyar


 

வேலை கிடைக்குமா என்று தேடினார். கிடைக்கவில்லை. தலையில் முடியும் முகத்தில் மீசையும் இருப்பதால் தன்னை யாரும் துறவியாக நினைப்பதில்லை என்று நினைத்தார். பிச்சைக் காசில் மொட்டையடித்துக் கொண்டார். கங்கைக் கரை ஒரமாக அமைந்துள்ள மடமொன்றுக்குப் போய் சேர்ந்து ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டார். தினமும் குளித்து திருநீறு பூசி பூஜைக்கு வில்வம் பறித்துக் கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும் என்று சாமியார்கள் கூறினார்கள். அதற்கு சம்மதித்தார்.


ஆனால் அவருக்கு குளிக்கும் பழக்கம் இல்லை. எனவே, குளிக்காமலேயே விபூதி பூசி ஈரத்துண்டைக் கட்டிக் கொண்டு வில்வம் பறித்துக் கொடுத்தார்.
இதுவும் சாமியார்களுக்கு தெரிந்துவிட்டது. தகராறு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார். சாமியார்கள் மத்தியில் நடக்கும் ரகசிய விவகாரங்களை அவர் தெரிந்து கொள்ள இது உதவியது.


மடத்திலிருந்து வெளியேறிய ராமசாமி, சாப்பாட்டுக்கு புதிய வழியைக் கண்டுபிடித்தார். இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் உறவினர்கள் பிச்சைக்காரர்களுக்கு போடும் சாப்பாடுக்கு வரிசையில் நின்றார். இதிலும் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காசியில் தூய்மையான வாழ்க்கை வாழ முடியும் என்று நம்பிய ராமசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒழுக்கக் கேடுகள் மலிந்திருந்தன. உடனே ஊருக்குப் புறப்பட்டார். ஹைதராபாத்தில் இருந்து காசிக்கு வரும்போது தனது அரைஞாண் கயிற்றில் ஒரு மோதிரத்தை மட்டும் கோர்த்து வந்திருந்தார். அந்த ஒன்றரைப் பவுன் தங்க மோதிரத்தைக் கொண்டு போய் 19 ரூபாய்க்கு விற்றுவிட்டு அசன்ஸால், பூரி ஆகிய இடங்களுக்கு சென்றார். பிறகு ஆந்திரா வந்தார். அங்கிருந்த குடும்ப நண்பர் வீட்டில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்தார்.


அப்போதுதான் தனது மகனைப் பற்றிய விபரம் வெங்கட்ட நாயக்கருக்குக் கிடைத்தது. உடனே அவர் துணைக்குச் சில ஆட்களையும் அழைத்துக் கொண்டு எலூருக்கு சென்றார். தந்தை வந்தவுடன், ஹைதாபாத்திலிருந்த காஞ்சிபுரம், முதலியார் நண்பருக்கு தந்தி அனுப்பி நகைகளைக் கொண்டு வருமாறு கூறினார். அவரும் நகைகளை கொண்டுவந்து கொடுத்தார். நகைகளைப் பார்த்த நாயக்கருக்கு வியப்பு... 
 

“அடே இத்தனை நாள் எப்படிடா சாப்பிட்டாய்?”


“அதுவா, நாம் ஈரோட்டில் எத்தனை பேருக்கு பிச்சை போட்டிருக்கிறோம். அதையெல்லாம் மொத்தமாக வசூல் பண்ணி சாப்பிட்டேன்”


ராமசாமி இப்படி பதில் சொன்னதும் நாயக்கருக்கு சிரிப்பும் துக்கமும் சேர்ந்து வந்தது. நகைகளை அணியச் சொல்லி, மகனை ஈரோட்டுக்கு அழைத்து வந்தார்.

 

 

 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.