Skip to main content

370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகமாக எண்ணப்பட்ட வாக்குகள்... மக்களவைத் தேர்தல் முடிவுகளில் குளறுபடியா?

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

அண்மையில் நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளில் 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் உள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனமான குயிண்ட் கண்டுபிடித்துள்ளது.
 

vote

 

 

17வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி, புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த முழுமையான தகவல்கள் தற்போதுதான் வெளியாகி வருகின்றன. ஈவிஎம் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒரு தொகுதியில் உள்ள ஐந்து வாக்குச்சாவடியில் பதிவாகும் ஒப்புகை வாக்குச் சீட்டு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும் என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் நேரம் ஆகும் என்று தேர்தல் ஆணையம் முன்னமே தெரிவித்திருந்தது. அவர்கள் தெரிவித்ததுபோலவே அடுத்த நாள் அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் முழு தகவலை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட கூடுதல் காலம் எடுத்துக்கொண்டது.
 

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்து சில விஷயங்களை குயிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஈவிஎம் இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை , பதிவான வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சில தொகுதிகளின் தகவல்களை வெளியிட்டுள்ளது அந்த இணையதள பத்திரிகை. 
 

lok sabha

 

 

குறிப்பாக, தமிழகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12,14,086. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் 12,32,417. அதாவது, பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் 18,331 அதிகம். அதேபோல், தருமபுரி தொகுதியில் பதிவான வாக்குகள் 11,94,440. எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 12,12,311.பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் இடையே உள்ள வித்தியாசம் 17,871. இதேபோன்று தமிழகத்திலே ஐந்து தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக உள்ளது. இதேநிலை இந்தியா முழுவதும் 373 தொகுதிகளில் நிலவியுள்ளது. இந்த விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்து, பதிவான வாக்குகள்குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து நீக்கி உள்ளார்கள். 
 

அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் மதுரா தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 10,88,206 வாக்குகள் பதிவாகியிருந்த போது சுமார் 10,98,112 வாக்குகளும் எண்ணப்பட்டன. அங்கு, 9,906 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக அந்தச் செய்தி கூறுகின்றது. இந்தத் தகவல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.