Skip to main content

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியை அம்பலப்படுத்தும் என்சிஆர்பி!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அண்மையில் வெளியிட்ட தரவுகள் மூலம், பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியைத் தழுவி இருப்பதை மேலும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. 


தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அதிரடி நடவடிக்கைகளுள் பெரிய அளவில் பேசப்பட்டது, பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் அதுவரை புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

MONEY DEMONETIZATION PM NARENDRA MODI ANNOUNCED BUT FAKE MONEY CONTINUE


இத்தகைய அதிரிபுதிரியான நடவடிக்கைக்கு சில காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது, பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் கள்ளப்பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அதை முற்றாக அழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது மோடி கூறினார்.   

இரண்டாவது, தீவிரவாதிகளின் கைகளுக்கு பணம் செல்வதை தடுக்கவும் பணமதிப்பிழப்பு உதவும். மூன்றாவது முக்கிய காரணம், இனி யாரும் இந்த நாட்டில் போலியாக 500, 1000 ரூபாய் தாள்களை அச்சிட முடியாது. அத்துடன், கருப்புப்பணத்தை முற்றாக ஒழித்து விட முடியும், ஊழல் ஒழிந்து விடும் என்றும் சொல்லி இருந்தார்.


சிலர், 2000 ரூபாய் தாளில் ஜிபிஎஸ் உபகரணம் பொருத்தப்பட்டு உள்ளதால், பூமிக்கடியில் 2000 அடி ஆழத்தில் புதைத்து வைத்தாலும் கண்டுபிடித்து விட முடியும் என சரம் சரமாக பூ சுற்றினர். சில நாள்களுக்குள்ளேயே சேகர் ரெட்டியின் வீட்டியில் இருந்து 30 கோடி ரூபாய்க்கு மேல் புதிய 2000 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இத்தனைக்கும் அப்போது புதிய 2000 ரூபாய் தாள்கள் பெறுவதில் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பணமதிப்பிழப்பு என்பது ஒரு தற்கொலை முடிவுக்குச் சமமானது என்றும், ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத்தாக்குதல் என்றெல்லாம் இன்று வரை விமர்சனங்கள் அடங்கவே இல்லை. 

MONEY DEMONETIZATION PM NARENDRA MODI ANNOUNCED BUT FAKE MONEY CONTINUE

 

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரங்கராஜன், ரகுராம்ராஜன் ஆகியோர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். கட்சிக்குள்ளிருந்தே மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கலகக்குரல் எழுப்பினார். இது ஒருபுறம் இருக்க, அண்மையில் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட சில தகவல்கள் பணமதிப்பிழப்பின் தோல்வியை வேறு ஒரு கோணத்தில் அம்பலப்படுத்தும் விதமாக இருக்கிறது.


நாடு முழுவதும், கடந்த 2017ம் ஆண்டில் மட்டும்  28.10 கோடி ரூபாய் போலி ரூபாய்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறது என்சிஆர்பி. இது, அதற்கு முந்தைய 2016ம் ஆண்டைக் காட்டிலும், அதாவது பணமதிப்பிழப்பிற்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட 15.10 கோடி போலி ரூபாய்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட இரு மடங்கு தொகை அதிகம் என்கிறது. என்சிஆர்பி கடந்த அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வெளியிட்ட, 'இந்தியாவில் குற்றங்கள் - 2017' (பக்கம் 1261-1263) என்ற அறிக்கையில் கள்ளப்பணம் பறிமுதல் குறித்து சொல்லப்பட்டு உள்ளது.


கடந்த 2016ம் ஆண்டில் 2.81 லட்சம் எண்ணிக்கையிலான  கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ம் ஆண்டிலோ அந்த எண்ணிக்கை 3.55 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவெனில், தேசபக்தாள்கள் அதிகமாக இருப்பதாக காவி கும்பல் அலப்பறை செய்து வரும், குஜராத் மாநிலத்தில்தான் மிக அதிக அளவாக 9 கோடி ரூபாய் கள்ளப்பணம்  பறிமுதல் ஆகியிருக்கிறது.


டெல்லியில் 6.7 கோடி, உத்தரபிரதேசத்தில் 2.8 கோடி, மேற்கு வங்கத்தில் 1.9 கோடி ரூபாய் வரை கள்ளப்பணம் பிடிபட்டிருக்கிறது. பணமதிப்பிழப்பிற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய ரூபாய்களை அச்சடித்து வந்த கள்ள அச்சகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத கும்பலுக்கு நிதியுதவி அளிப்பது குறைந்து போனதாகவும் மத்திய  அரசு, ஊடகங்களுக்கு செய்திகளைச் சொல்லிய வண்ணம் இருக்கிறது.

MONEY DEMONETIZATION PM NARENDRA MODI ANNOUNCED BUT FAKE MONEY CONTINUE


ஆனால் அரசின் இந்த கூற்றை கருத்தில் கொள்வதில் நம்முடைய பொது தரவுகளில் இரண்டு சான்றுகள் இருக்கின்றன. முதலாவது, என்சிஆர்பி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அந்த அறிக்கை, நாடு முழுவதும் எவ்வளவு கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பேசுகிறது. இரண்டாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு. அதன் வருடாந்திர அறிக்கைகள் மூலம், வங்கி நடைமுறைகளுக்குள் பணம் நுழைந்த பிறகு, அவற்றிலிருந்து எவ்வளவு போலி ரூபாய் தாள்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்பதைக் கூறுகிறது.


அதாவது, கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்படுவது 2017க்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகிறது என்சிஆர்பி. அதேநேரம், வங்கி நடைமுறைகள் மூலம் கள்ளப்பணம் கண்டறியப்படுவது வெகுவாக குறைந்துவிட்டதாகச் சொல்கிறது ரிசர்வ் வங்கி தரவு. மத்திய வங்கியின் தரவுகள்படி, வங்கிகள் மூலம் 2017ம் நிதியாண்டில் 7.62 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளப்பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2018ம் நிதியாண்டில் இது 5.22 லட்சம் கள்ளப் பணத்தாள்களாகவும், 2019ம் நிதியாண்டில் 3.17 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளப்பணமாகவும் குறைந்து இருக்கிறது. 


ரிசர்வ் வங்கி இன்னும்கூட நுட்பமான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கி நடவடிக்கைகள் மூலம் கள்ளப்பணம் கண்டறிவது குறைந்து போனதற்கு ஒரே காரணம், பழைய 500, 1000 ரூபாய் தாள்களை மதிப்பிழப்பு செய்ததுதான் என்கிறது. 


கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை போலி 2000 ரூபாய் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன? என்று பார்த்தோமானால், 2018ம் நிதியாண்டில் 7929 எண்ணிக்கையிலான தாள்களும், நடப்பு நிதியாண்டில் 21847 எண்ணிக்கையிலான கள்ளப்பணமும் பிடிபட்டுள்ளன. ஆனால் இவை, 2017ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் கண்டறியப்பட்ட போலி 1000 ரூபாய் தாள்களின் அளவை எட்டவில்லை. 


பணமதிப்பிற்குப் பிறகும் கள்ளப்பணம் பிடிபடுவது அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி சொல்வதையும் நாம் பல வழிகளிலும் விளக்க முடியும். விமர்சகர்களோ, அதிகமாக காவல்துறை சோதனைகளாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பிறகு கள்ளப்பண நடமாட்டத்தை ஒழிப்பது என்பதை மத்திய அரசு சுய கவுரவப் பிரச்னையாக கருதுகிறது. அதனால்தான் கள்ளப்பணம் பிடிபடுவது அதிகரித்துள்ளது என்கிறார்கள். 


மேலும், போலி அல்லது கள்ளப்பண ஒழிப்பை, பணமதிப்பிழப்பு மூலம் சரிசெய்து விடமுடியாது என்கிறார்கள். உதாரணமாக 2017ம் ஆண்டில் 74498 போலி 2000 ரூபாய் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக என்சிஆர்பி கூறுகிறது. அதேபோல் வங்கிகள் மூலமாக நடப்பு நிதியாண்டில் 21847 போலி 2000 ரூபாய் தாள்கள் கண்டறியப்பட்டு உள்ளதும் சாதாரணமானது அல்ல. ரிசர்வ் வங்கி சொல்லும் இன்னொரு தரவு, ரொம்பவும் அச்சுறுத்தலானது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள். அதாவது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள போலி ரூபாய் தாள்கள் குறைந்தது ஒருமுறையாவது வணிகச்சுழற்சியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. போலி அல்லது கள்ளப்பணம் பற்றிய தகவல்களைப் பொருத்தமட்டில், மத்திய அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே முரண்பட்ட தகவல்கள் சொல்லப்பட்டு வருகின்றன. 


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு ஆண்டு ஜூலையில் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில், இந்தியா - பங்களாதேசம் எல்லை வழியாக போலி இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டு வந்தது. அவை பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்து விடக்கூடிய குறைந்த தரத்திலானாவை. கம்ப்யூட்டர் மூலம் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்று கூறியிருந்தார். மேலும், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு வரை, 2000, 500 ரூபாய் ஆகியவற்றில் உயர்தர கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.


நிர்மலா சீதாராமனின் பதிலுக்கு நேர்மாறான பதிலைச் சொல்லி இருக்கிறார், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல். அவர், பாகிஸ்தான் மூலமாக உயர்தர கள்ளப்பணம் இந்தியாவில் புழக்கத்தில் விடுவது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்கிறார். என்னென்ன காரணத்திற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி சொன்னாரோ, அதில் ஒன்றுகூட சாத்தியமாகவில்லை என்பதே நிதர்சனம்.



 

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.