Skip to main content

ஒரு நாளைக்கு 600 கிலோ பக்கோடா!!! -அமோகமாக ஓடும் மோடியின் பக்கோடா திட்டம்

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
pakoda

 

 

 

பிரதமர் மோடியை விமர்சிப்பது என்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். அதேபோல அவர் பேசியதை காலாய்ப்பதும் ஒரு வழக்கம்தான். அப்படி அவர் பேசியதில் கலாய்க்கப்பட்ட ஒரு விஷயம்தான் பக்கோடா. இவர் பக்கோடாவை பற்றி பேசியதால், இனி பக்கோடாதான் இந்தியாவின் தேசிய உணவு என்ற அளவுக்கு கலாய்க்கப்பட்டது. பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் என்று வாக்களித்தார். அதை நம்பி தேர்தலில் வாக்கு அளித்தவர்கள் பலரின் தலையில் தற்போது இடி விழுந்துள்ளது. இதுபோல நம்பி வாக்கு செலுத்துவது என்பது இந்திய மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். வேலைவாய்ப்புக்கு திட்டம் வகுக்கிறார்களே தவிர, அதனால் பயனடைந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது கேள்வி குறியே... 

 

pakoda protest

 

 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டத்தை சொல்லி இந்தியா, உலகம் முழுவதும் கலாய்க்கப்பட்டார். அது என்ன என்றால் படித்து முடித்தவர்கள் வேலை இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள், பக்கோடா கடை போட்டால் கூட நாளுக்கு ரூபாய் 200 சம்பாரிக்கலாம் என்றார். அதற்கு அமித் ஷா முதல் பாஜகவில் இருக்கும் அனைத்து தேசிய செயலாளர்கள் பலரும் அதை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல இதை விமர்சித்தனர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் ஒரு படி மேலே ஏறி பக்கோடா கடை திறந்தே கலாய்த்தார். அதுவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அப்படி கலாய்க்க பக்கோடா கடை போட்டவர், இன்று ஒரு நாளுக்கு கிட்டதட்ட 600 கிலோ வரை பக்கோடா தயாரித்து 35 கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். அவர் பேசியதை கலாய்க்கும் விதமாக இந்தியா முழுவதும் பலரும் பக்கோடா போட்டு போராட்டம் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

 


இதைப்பற்றி அந்த பக்கோடா கடையை திறந்து வெற்றிகரமாக நடத்திகொண்டிருக்கும் நாராயன்பாய் கூறியது, "நான் தற்போதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன்தான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்போதும்  காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். மோடி இந்த பக்கோடா திட்டத்தை பற்றி சொன்னபொழுது வெறும் 10 கிலோ மூலப்பொருட்களுடன் இந்த கடையை ஆரம்பித்தேன். இரண்டு மாத உழைப்பிற்கு பின்னர் இன்று ஒருநாளுக்கு 600 கிலோ வரை பக்கோடா போடுகிறேன். அது 35 கடைகளால் வாங்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிதான். இந்த கடைக்கு ஸ்ரீ ராம் என்று பெயர் வைத்துள்ளேன். (ராமாயணத்தின் படி) ராமரின் பெயர் சொன்னால் கடலில் கூட கல் மிதக்கும், ராமரின் பெயரை வைத்து அமித் ஷா, மோடி ஆட்சியை பிடிக்கிறார்கள், ஏன் எனது கடை அவர் பெயர் வைத்தால் ஓடாதா".


இந்த கடையில் காலை வேளையிலேயே 300 கிலோ பக்கோடா விற்று தீர்ந்துவிடுகிறதாம்...

 

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.