Skip to main content

தாழ்த்தப்பட்ட மக்களை சீண்டிப் பார்க்கும் மோடி அரசு!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

நான்கு ஆண்டு ஆட்சி முடிவில் தாழ்த்தப்பட்ட மக்களை சீண்டிப் பார்த்துள்ளது மோடி அரசு. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமைகளான இழிவாகப் பேசுதல், புறக்கணித்தல், பாகுபாடு செய்தல் என ஆதிக்க சாதியினர் உள்ளிட்ட பிறரால் செய்யப்படும்  பல்வேறு விதமான இழிவுகளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து 1989ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று தலித் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எழுப்பியுள்ளது.

 

dalit protest



இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மகாராஷ்டிராவில் சுபாஸ் காசிநாத் மகாஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகளான ஏ.கே.கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் பலர் பாதிக்கப்படுவதாகவும் கூறி விசாரணை செய்து அதன்பின் வழக்கு பதிவு செய்யுமாறு தீர்ப்பளித்து உள்ளனர். 

நீதித் துறையில் அரசின், ஆளும் கட்சியின் குறுக்கீடு இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்கள் மன்றத்தை நாடும் நிலையில் வன்கொடுமைக்கான இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பாகவும் இதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் தலித் மக்கள் சந்தேகத்தோடும் கொந்தளிப்போடும் கவனித்தனர். நினைத்தது போலவே இத்தீர்ப்பைக் குறித்து மத்திய ஆளும் பிஜேபி அரசு மௌனம் காத்த நிலையில் நாடு முழுவதும் தலித் அமைப்புகள், கட்சிகள் சார்பாக ஏப்ரல் 2ஆம் தேதி பந்த் அழைப்பு விடுத்தன.
 

dalit protest 4



தமிழகத்தில் DYFI, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல கட்சிகள் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் அறிக்கைகளும் செய்தன.  தற்போது காவிரி பிரச்சனை ஸ்டெர்லைட் என வேறு பக்கம் தீவிரமான நிலையில் வட இந்தியாவில் பெரும் கலவரத்தோடு பந்த் நடந்துள்ளது. பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டன. 
 

dalit protest2



உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், பீஹார் மாநிலங்களில் உக்கிரமாக ஆரம்பித்த பந்த்தில் தலித் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்கம் போல தலித் பேரணிகளின் நடுவே கல்லெறிந்தும் கலவரம் செய்தும் வன்முறையில் கொண்டு போய் நிறுத்தின சில ஆதிக்க சாதி அமைப்புகள். ராஜஸ்தானில் பார்ட்மீர் மாவட்டத்தில் கர்னி சேனா என்ற அமைப்புக்கும் தலித்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்னி சேனா,  'ராஜ்புத்' எனும் ஆதிக்க சாதி அமைப்பு என்று தெரிய வருகிறது. ஜோத்பூரில் மாலி எனும் ஆதிக்க சாதியினர் தாக்குதலில் தலித் ஒருவரின் கால் வெட்டப்பட்டது.

இது போன்ற மோதல்கள் வட மாநிலங்களில் பரவிய நிலையில் ஆழ்வர் மாவட்டத்தில் காவல் நிலையத்துக்கு  தீவைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் மட்டும் 6 பேர் பலியான நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இருவர்   ராஜஸ்தானில் ஒருவர் என 9 பேர் நேற்று இந்தத் தீர்ப்பின் விளைவாகவும் அரசின் மௌனத்தாலும் பலியாகியுள்ளனர். போராட்டம் தீவிரமானதும் மத்திய அரசு அவசரமாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 20ம் தேதி முதல் இன்று வரை ஏன் மௌனமாக இருந்தது என்று மக்கள் வினவுகின்றனர். இதுவரை 9 பேர் பலி என செய்திகள் சொன்னாலும் இதை விட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

 

dalit protest 3



முதலில் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி ஓட்டு சம்பாதித்த பிஜேபி அரசியல், தற்போது தலித் மக்களை வன்முறையாளர்களாக முத்திரை குத்தும் விதமாக செயல்படுகிறது என தலித் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஒன்றாக திரளும் விதமான அரசியல் முன்னெடுப்பினை பகுஜன் சமாஜ் கட்சி செய்வதாகவும் அதனை கலைக்கவே இம்மாதிரியான குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சந்தேகிக்கின்றனர்.

சமூக நீதியின் முன்னோடி மாநிலமான தமிழகம் இந்தப் பிரச்சனையில் போராட்டங்களை முன்னெடுக்காமைக்கு காவிரி பிரச்சனை காரணமாக சொல்லப்பட்டாலும் அனைத்து போராட்டங்களிலும் தலித் மக்கள் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கான போராட்டத்தில் யாரும் வராமல் இருப்பது வழக்கமாக உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் கூறியுள்ளனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.