Skip to main content

எம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30% கட் என்கிற மத்திய அமைச்சரவையின் முடிவு முன்னிலைப்படுத்தப்பட்ட அதே நேரத்தில், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது மேலோட்டமாக நல்ல அம்சம் போல தெரிந்தாலும், உண்மையிலேயே உரிமை பறிக்கும் செயல் என்கிறார்கள் எம்.பிக்கள்.
 

மதுரை எம்.பி.யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், "கரோனாவுக்கு எதிரான யுத்தம் மாநிலம், மாவட்டம், நகரம், கிராமம் என எல்லா மட்டங்களிலும் நடந்தேறிவரும் வேளையில் இன்றைய தேவை அதிகாரப் பரவல். அதிகாரக் குவிப்பு அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இவர்களின் தவறான பொருளாதாரப் பாதையால் ஏற்கெனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான நடவடிக்கைதான்.

 

 

congress



அரசுக்கு கரோனா ஒழிப்பிற்குச் செலவிட வேண்டுமெனில் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்? ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50,000 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு தந்த கார்ப்பரேட் வரிச் சலுகைகளைத் தேசத்தின் நலனுக்காகத் திரும்பப் பெற்றால் 1 லட்சத்து 50-ஆயிரம் கோடி கிடைக்கும். ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, எம்.பி நிதியில் கைவைப்பது கரோனா ஒழிப்பிற்கு உதவாது. உள்ளூர்மட்ட முன் முயற்சிகளை விரைவான மக்கள் சேவையைத்தான் இது பாதிக்கும்'' எனக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்.
 

http://onelink.to/nknapp


தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், "நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருப்பது சர்வாதிகார நடவடிக்கையாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு பொறுப்பில் உள்ளோரின் சம்பளங்கள், சலுகைகள் ஆகியவற்றிலிருந்து 30% குறைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் தொகுதிக்கான நிதி என்பது மக்களின் நலனுக்காக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மக்கள் நலன் மற்றும் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பளிக்கும் நிதியாக இருந்ததை ரத்து செய்துவிட்டு எம்பிக்களை, மனுக்களைப் பெற்று ஆளுவோருக்கு அனுப்பக்கூடிய தபால்காரர்களாக மாற்றியிருக்கிறார் மோடி.

7000 கோடி அல்ல, 70,000 கோடி கூட மத்திய அரசு கரோனாவிலிருந்து மக்களைக் காக்க செலவிடலாம். செலவிட வேண்டும். தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்திருப்பது மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முடக்கும் செயலாகும்'' எனக் கடுமையாகக் கொந்தளிக்கிறார்.

விளக்கு ஏற்றி கரோனாவுக்கு எதிரான ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என மோடி அறிவித்தபோதே, அதனைக் கண்டித்த திருப்பூர் எம்.பி.யான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன், "அறிவியலுக்கு அப்பாற்பட்டு மனித குலத்தைக் கொண்டு செல்லும் பணியைப் பிரதமர் மோடி செய்யக்கூடாது. ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு வீட்டில் ஒளி ஏற்றினால் மட்டும் போதாது. ஏழைகள் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டும்.வீடே இல்லாமல் உணவு சமைக்கும், அடுப்பே இல்லாமல் வீதிகளில் வாழும் கோடான கோடி ஏழை மக்கள் நம் இந்தியச் சொந்தங்கள் இன்று வறுமையில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் விளக்கு ஏற்றக் கூறுகிறார் மோடி. அன்று கைத்தட்டச் சொன்னார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது அறிவியல் ரீதியாக மக்களின் வாழ்க்கை தரத்தை, அவர்களின் பாதுகாப்பை, அவர்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் எந்தவிதமான பொருளற்ற வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் பிரதமர் மோடியின் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது'' எனக் கண்டனம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை அந்தந்த தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்கள் நிறைவேற்றுவதற்கான நிதியை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுப்பதைச் சுப்பராயனும் கண்டிக்கிறார்.
 

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவை அவரவர் தொகுதிகளில் உள்ள மக்கள் வைக்கும் பொதுநலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்படும் நிதியாகும். எந்தத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ அதற்கு மட்டுமே அந்த நிதி செலவிடப்பட வேண்டும். அதற்கான ஒப்புதல், அனுமதி உள்ளிட்டவை முறையாகப் பெறப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதனால்தான், தமிழகத்தில் எம்.பி.நிதியிலிருந்தும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்தும் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான உபகரணங்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கிடைக்கும் வகையில் செல வழிக்கப்படுகின்றன.

மத்திய அரசு இதனை நேரடியாகக் கையாளும்போது, நமது மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கான நிதியை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கிவிட்டு, நமக்கு லாலிபாப் கொடுக்கக்கூடிய ஆபத்தும் உண்டு என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

 

-ஜீவா
 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.