Skip to main content

எம்.பி.க்களின் உரிமையைப் பறித்த பாஜக... பாஜக ஆளும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி... மோடியின் திட்டத்தால் அதிருப்தியில் எதிர்க்கட்சிகள்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30% கட் என்கிற மத்திய அமைச்சரவையின் முடிவு முன்னிலைப்படுத்தப்பட்ட அதே நேரத்தில், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது மேலோட்டமாக நல்ல அம்சம் போல தெரிந்தாலும், உண்மையிலேயே உரிமை பறிக்கும் செயல் என்கிறார்கள் எம்.பிக்கள்.
 

மதுரை எம்.பி.யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், "கரோனாவுக்கு எதிரான யுத்தம் மாநிலம், மாவட்டம், நகரம், கிராமம் என எல்லா மட்டங்களிலும் நடந்தேறிவரும் வேளையில் இன்றைய தேவை அதிகாரப் பரவல். அதிகாரக் குவிப்பு அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. இவர்களின் தவறான பொருளாதாரப் பாதையால் ஏற்கெனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான நடவடிக்கைதான்.

 

 

congress



அரசுக்கு கரோனா ஒழிப்பிற்குச் செலவிட வேண்டுமெனில் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்? ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50,000 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு தந்த கார்ப்பரேட் வரிச் சலுகைகளைத் தேசத்தின் நலனுக்காகத் திரும்பப் பெற்றால் 1 லட்சத்து 50-ஆயிரம் கோடி கிடைக்கும். ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, எம்.பி நிதியில் கைவைப்பது கரோனா ஒழிப்பிற்கு உதவாது. உள்ளூர்மட்ட முன் முயற்சிகளை விரைவான மக்கள் சேவையைத்தான் இது பாதிக்கும்'' எனக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்.
 

http://onelink.to/nknapp


தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், "நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருப்பது சர்வாதிகார நடவடிக்கையாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு பொறுப்பில் உள்ளோரின் சம்பளங்கள், சலுகைகள் ஆகியவற்றிலிருந்து 30% குறைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் தொகுதிக்கான நிதி என்பது மக்களின் நலனுக்காக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மக்கள் நலன் மற்றும் தேவைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பளிக்கும் நிதியாக இருந்ததை ரத்து செய்துவிட்டு எம்பிக்களை, மனுக்களைப் பெற்று ஆளுவோருக்கு அனுப்பக்கூடிய தபால்காரர்களாக மாற்றியிருக்கிறார் மோடி.

7000 கோடி அல்ல, 70,000 கோடி கூட மத்திய அரசு கரோனாவிலிருந்து மக்களைக் காக்க செலவிடலாம். செலவிட வேண்டும். தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்திருப்பது மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் முடக்கும் செயலாகும்'' எனக் கடுமையாகக் கொந்தளிக்கிறார்.

விளக்கு ஏற்றி கரோனாவுக்கு எதிரான ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என மோடி அறிவித்தபோதே, அதனைக் கண்டித்த திருப்பூர் எம்.பி.யான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன், "அறிவியலுக்கு அப்பாற்பட்டு மனித குலத்தைக் கொண்டு செல்லும் பணியைப் பிரதமர் மோடி செய்யக்கூடாது. ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு வீட்டில் ஒளி ஏற்றினால் மட்டும் போதாது. ஏழைகள் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டும்.வீடே இல்லாமல் உணவு சமைக்கும், அடுப்பே இல்லாமல் வீதிகளில் வாழும் கோடான கோடி ஏழை மக்கள் நம் இந்தியச் சொந்தங்கள் இன்று வறுமையில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் விளக்கு ஏற்றக் கூறுகிறார் மோடி. அன்று கைத்தட்டச் சொன்னார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது அறிவியல் ரீதியாக மக்களின் வாழ்க்கை தரத்தை, அவர்களின் பாதுகாப்பை, அவர்களின் சுகாதாரத்தைக் காக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் எந்தவிதமான பொருளற்ற வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் பிரதமர் மோடியின் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது'' எனக் கண்டனம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை அந்தந்த தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்கள் நிறைவேற்றுவதற்கான நிதியை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுப்பதைச் சுப்பராயனும் கண்டிக்கிறார்.
 

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவை அவரவர் தொகுதிகளில் உள்ள மக்கள் வைக்கும் பொதுநலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒதுக்கப்படும் நிதியாகும். எந்தத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ அதற்கு மட்டுமே அந்த நிதி செலவிடப்பட வேண்டும். அதற்கான ஒப்புதல், அனுமதி உள்ளிட்டவை முறையாகப் பெறப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதனால்தான், தமிழகத்தில் எம்.பி.நிதியிலிருந்தும் எம்.எல்.ஏ. நிதியிலிருந்தும் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான உபகரணங்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கிடைக்கும் வகையில் செல வழிக்கப்படுகின்றன.

மத்திய அரசு இதனை நேரடியாகக் கையாளும்போது, நமது மாநிலத்தில் உள்ள தொகுதிகளுக்கான நிதியை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கிவிட்டு, நமக்கு லாலிபாப் கொடுக்கக்கூடிய ஆபத்தும் உண்டு என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

 

-ஜீவா
 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.