Skip to main content

எங்கு தொடங்கி எங்கு வந்திருக்கிறார்... மோடியின் தேர்தல் பயணம்!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகினார். அதற்கு முன்பாக மோடி குஜராத்தில் 13 வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார். 2001ஆம் ஆண்டில் அப்போது பாஜகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த எல்.கே.அத்வானி மோடியை குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக்கொள்ளுமாறு கூறி பொறுப்பாளராக நியமித்தார். 
 

narendra modi

 

 

நரேந்திர மோடியின் செயல்திறன் அவரை கவர்ந்தது. 2001ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி பாஜக தலைமைக்கு அதிருப்தியை உண்டாக்க, அந்த ஆண்டில் அக்டோபர் 7ஆம் தேதி  நரேந்திர மோடி முதன் முறையாக குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக பாஜகவால் தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மணிநகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதுதான் முதன் முறையாக நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது.
 

அடுத்து 22ஆம் தேதி டிசம்பர் 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மணிநகரில் போட்டியிட்ட நரேந்திர மோடி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சரானார். இதையடுத்து 2012அம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டவர் நான்காவது முறையாக முதலமைச்சராகினார். குஜராத்தின் வளர்ச்சி பிம்பம் இந்தியா முழுவதும் மோடியை அறியச் செய்தது. இதனால் பாஜகவால் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் மோடி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்து 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 
 

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். ஆனால், அவர் படுதோல்வியடைந்தார். 2019 தேர்தலில் வாரணாசியில் வெற்றியை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறார். மீண்டும் பிரதமராக பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.