Skip to main content

இதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி? இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

இந்த வாரம் கரோனா குறித்த இந்தியாவின் போராட்டத்தில் மிக முக்கியமான வாரமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள். அவர்களது மதிப்பீட்டின்படி இந்தியாவில் கேரளமும், மகாராஷ்டிராவும் முதல் கட்ட நோய் நிலைமையைத் தாண்டி இரண்டாவது கட்ட நோய் பரப்பு நிலையை விரைவில் எட்டிப்பிடிக்கும் என எச்சரிக்கிறார்கள்.

முதல்கட்ட நோய் பரப்பு நிலை என்பது வெளிநாட்டில் இருந்து வரும் தொற்று. அது உலகமெங்கும் இப்பொழுதும் குறையவில்லை. கரோனாவை உள்நாட்டு அளவில் கட்டுப்படுத்திய சீனாவில் கூட வெளிநாட்டில் இருந்து வரும் தொற்று இப்பொழுதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்தக் கட்டம்தான் சமூக தொற்று எனப்படும் உள்நாட்டு தொற்று. இதைக் கட்டுப்படுத்தத்தான் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

kerala



அதையும் தாண்டி கேரளாவிலும் மகாராஷ்டிர விலும் உள்நாட்டு தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமாக கோவிட்-19 பற்றிய பரிசோதனைகள் இந்தியாவில் போதுமானதாக இல்லை என்கிறார்கள். இந்த பரிசோதனைகளுக்கு இந்தியா முழுவதும் 7 லட்சம் டெஸ்டிங் உபகரணங்கள் தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள விநியோகஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் எந்த நாட்டை சேர்ந்த உற்பத்தியாளரும் இதனை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளிக்கலாம். இந்த கோவிட் 19 பரிசோதனை உபகரணங்கள் சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி மூலம் விநியோகிக்க ஏப்ரல் முதல் வாரம் முதல் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவில் கோவிட்19க்கான பரிசோதனைகள் மிக மிக குறைவாக நடைபெறுகிறது என உலக சுகாதார மையம் இந்திய அரசை குற்றம் சாட்டுவதுதான். மொத்தம் 5342 பேரை சோதனை செய்த கேரளம்தான் இந்தியாவிலேயே அதிகப் பேரை கோவிட் 19 சோதனைக்குள்ளாக்கிய மாநிலம். அதில் 3768 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது.

 

modi



சந்தேகப்படுபவர்களையெல்லாம் கேரளாவில் சோதனை செய்கிறார்கள். இதுவே போதாது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அங்கே 1437 பேருக்கு ரிசல்ட் இன்னமும் வரவில்லை. அதற்கு காரணம் இந்த கோவிட் 19 சோதனை பற்றிய இறுதி முடிவை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சிக் கழகம் எடுக்க வேண்டும். அதில் ஏற்படும் தாமதம் தான் என்கிறார்கள்.


இந்தச் சோதனையில் கோவிட்19 பாதித்தவர்கள் எனக் கேரளம் கண்டுபிடித்தவர்களின் 137. கேரளாவுக்கு அடுத்தப்படியாக 2731 பேரை சோதனைக்குள்ளாக்கிய கர்நாடகத்தில் 2432 பேருக்கு கொரோனா இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. 55 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகக் கர்நாடகம் கண்டு பிடித்துள்ளது.

ஐயாயிரத்திற்கும் அதிகமானப் பேரை சோதனைக்கு உட்படுத்தியதால்தான் கேரளா 137 பேரை கோவிட் 19 நோயாளிகள் எனக் கண்டுபிடித்தது. வெறும் 2731 பேரை சோதனைக்கு உட்படுத்திய கர்நாடகம் 55 பேரை கோவிட் 19 நோயாளிகள் எனக் கண்டுபிடித்தது. எனவே அதிகமான நோயாளிகளைக் கண்டுபிடிக்க அதிக அளவிலான சோதனைகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அதிக சோதனைகள் நடத்தாத மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகியவை இடம் பெறுகிறது என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.


26 மார்ச் 2020 அன்று பெற்றப்பட்ட கணக்கீட்டின்படி ஆந்திரா மிகக் குறைவாக 360 பேருக்கு மட்டும் கோவிட் 19 பரிசோதனையைச் செய்துள்ளது. அடுத்தப்படியாக தமிழகத்தில் 962 பேருக்கு மட்டும் கோவிட்19 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 77 பேருக்கு ரிசல்ட் வரவில்லை. 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஆந்திரா, தமிழ்நாட்டை விட அதிகமாக 1319 பேருக்கு பரிசோதனைகள் நடத்தியுள்ளது. அதில் 45 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளதாகக் கண்டுபிடித்துள்ளது என சுட்டிக்காட்டுகிறார்கள் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள்.

அதுமட்டுமல்ல கோவிட்19 வைரஸை சீனா எப்படி எதிர்கொண்டது என இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகளையும் மருத்துவர்களையும் கொரோனா ஒழிப்பிற்கு தயார் படுத்த வேண்டும். உள்ளாட்சித் துறை, குடிநீர் வழங்கும் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளையும் கோவிட்19 வைரஸ்க்கு எதிரான போரில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறையும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சொல்லும் அனைத்தையும் இந்தியாவில் ஒழுங்காகச் செய்த மாநில அரசு ஒன்றுக்கூட இல்லை என விரத்தியுடன் சொல்லும் மத்திய அரசு அதிகாரிகள் ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல. நிலைமை இப்படியே போனால் சமூக தொற்று எனப்படும் இரண்டாம் நிலை நோய்த் தொற்றை இந்தியாவில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்.

 

 

Next Story

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
BJP MLA says Self-respect is important and he Resigned his position in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.