Skip to main content

அமித்ஷாவை மட்டும் பாருங்கள்... எடப்பாடிக்கு நோ சொன்ன மோடி... உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

மகாத்மா காந்தியின் 150-ஆம் ஆண்டு விழாவை மாநில அரசுகள் நடத்துவதற்கான பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அமித்ஷாவின் இல்லத்தில் 50 நிமிடங்கள் நீடித்துள்ள அந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
 

admk



மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பேசுவதற்கு 10 நிமிடம் கேட்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகமோ, தனிப்பட்ட உரையாடலுக்கு நேரம் இல்லை. தமிழக அரசியலை பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பிரதமர் சொன்னதாக டெல்லியில் உள்ள தமிழக அரசின் அதிகாரிகள் மூலம் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் அமித்ஷாவை சந்திக்க மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டது. டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் சந்திப்பு குறித்து தம்மிடம் விசாரித்த மூத்த அமைச்சர்களிடம் டெல்லியில் நடந்தவற்றை மனம் திறந்து பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.

 

dmk



இது குறித்து அமைச்சர்கள் தரப்பில் விசாரித்த போது, "அமித்ஷாவை சந்தித்துப் பேச இ.பி.எஸ். ஸுக்கு 20 நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், சந்திப்பு 50 நிமிடங்களுக்கு நடந்தது. சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து வெற்றி பெற வைத்தமைக்கு எடப்பாடிக்கும் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அமித்ஷா. அதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எடப்பாடி, குடியுரிமை சட்டத் திருத்தத்தில் தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை கொடுப்பது பற்றி இணைத்திருந்தால் தமிழகத்தில் அச்சட்டத்திற்கு எதிரான எதிர்ப்புகளை பலகீனப்படுத்தியிருக்க முடியும் என சொன்னதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை குறித்து ஜெயலலிதா ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதை நினைவுபடுத்திவிட்டு அந்த கோரிக்கையின் நகலையும் அமித்ஷாவிடம் தந்துள்ளார்.

 

admk



இதனையடுத்து தமிழகத்துக்கு 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தந்ததற்காக நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதையும் அதனால் மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து ரிலீஸ் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்த, "தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களுக்கு நிலுவைத் தொகை இருக்கிறது. படிப்படியாக ரிலீஸ் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தமிழகத்துக்கு கிடைக்கும்' என்றிருக்கிறார் அமித்ஷா. தொடர்ந்து பேசிய எடப்பாடி, "ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதி அவரது நினைவிடத்தை திறக்க முடிவு செய்திருக்கிறோம். பிரதமரும் நீங்களும் திறந்துவைக்க வேண்டும்' என சொல்ல, இதற்கு எவ்வித உறுதியையும் தராத அமித்ஷா, "பிரதமரிடம் கலந்து பேசிய பிறகு சொல்கிறேன்' என சாதாரணமாக அடுத்த விசயத்துக்கு கடந்து போயிருக்கிறார்.


குறிப்பாக, தமிழக அரசியல் பற்றிய விசயங்களுக்கு தாவிய அமித்ஷா, நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசாமல், சட்டமன்றத் தேர்தலைப் பற்றி விசாரித்திருக்கிறார். அதுபற்றி நடந்த விவாதத்தில், "அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்' என எடப்பாடி சொல்ல... "சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அரசியல் சூழலே வேறு மாதிரி இருக்கும். பா.ஜ.க. இல்லாமல் எந்த வெற்றியும் உங்களுக்கு கிடைக்கப் போறதில்லை. 65 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதில் சமரசத்துக்கு இடமில்லை. அதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே கூட்டணி தொடரும்' என கூறியிருக்கிறார் அமித்ஷா. அதற்கு எவ்வித சம்மதத்தையும் கொடுக்க வில்லை; மறுத்தும் பேசவில்லை எடப்பாடி. மாறாக, "தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து பேசுகிறேன்' என்று மட்டும் சொல்லியுள்ளார்.


இதனையடுத்து, "அரசுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுப்பதை தவிர்க்கச் சொல்லி நீங்கள் அவருக்கு அட்வைஸ் கொடுக்கணும்னு நாங்கள் விரும்பு கிறோம்' என எடப்பாடி சொன்னதும், "அவர் நம்முடைய எல்லையை விட்டு வெளியே இருக்கிறார். அரசியல் கட்சியை அவர் துவங்கிய பிறகு அவரை நோக்கி கவனம் செலுத்தலாம்' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணி வலிமையாக இருப்பதையும் அதனை பலகீனப் படுத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, "பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டம், கேபினெட் விரிவாக்கம், டெல்லி தேர்தல் ஆகியவை இருக்கிறது. இவையெல்லாம் முடிந்ததும் தமிழக அரசியல்தான் எங்கள் அஜெண்டா. அதில், தி.மு.க. தப்பிக்க முடியாது' என அமித்ஷா சொல்ல, எடப்பாடிக்கு ஏக மகிழ்ச்சி'' என சந்திப்பில் நடந்தவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். "தி.மு.க.வின் மாஜி எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலர் மீதுள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி, சிறப்பு நீதிமன்றம் மூலம் செக் வைப்பது அந்த அஜெண்டா' என்கிறது டெல்லி வட்டாரம்.

மேலும், அமித்ஷாவுடனான சந்திப்பில், "அ.தி.மு.க. அரசோடு முரண்படாத ஒருவரை தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவராக நியமியுங்கள்' என எடப்பாடி கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்துவிட்டு அன்றைய இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய எடப்பாடியை, தொழிலதிபர்கள் சிலர் சந்தித்ததாக மத்திய உளவுத்துறையினர் மேலிடத்துக்கு ரிப்போர்ட் தந்துள்ளனர்.

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.