Skip to main content

மோடி மேடையில் ஏறுவாரா ராமதாஸ்? -தாமரை இலைத் தண்ணீர் போல் தே.ஜ. கூட்டணி!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுத்துப் போட்டதில் எடப்பாடி பழனிசாமியின் சாமர்த்தியம் வெளிப்பட்டாலும், கடந்த தடவை போலவே, தாமரையோடு பட்டும் படாமலும் தொடர்கிறது பாமகவின் நட்பு. 
 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த பாமக, தருமபுரியில் மட்டுமே வென்றது. அப்போது பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்தன. கூட்டணிக் கட்சிகளிடையே இருந்த ஒத்துழையாமை காரணமாக,  தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய  இரண்டு தொகுதிகளில் மட்டுமே இக்கூட்டணி வென்றது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி உடைந்தது,

 

andraiya nda koottani bjp


தற்போது  7+1 என்று சீட் ஒதுக்கீடானவுடன், தைலபுரத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுகவை மட்டும் அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார் ராமதாஸ்.  2009 நாடாளுமன்ற தேர்தலின்போது ராமதாஸுக்கு 6 சீட் கொடுத்தார் ஜெயலலிதா. 6 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பிறகு,  கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, தா.பாண்டியன், ஆர்.வரதராஜன் ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் ஜெயலலிதா.  அப்போது ராமதாசுக்கு அழைப்பில்லை. 

 

indraiya koottani admk - pmk




கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி,  அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேநாளில்தான் பாஜகவுக்கும்  5 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், விருந்துக்காக தைலாபுரம் தோட்டக்கதவு பாஜகவுக்கு மட்டும் திறக்கவில்லை. அன்று ஜெயலலிதா தேர்தலுக்குப்பின் செய்ததை, இன்று ராமதாஸ் தேர்தலுக்கு முன்பே செய்திருக்கிறார்.

 

pa ma ka uzhaikkum katchi edapadi statement




பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு ராமதாஸ் விருந்து கொடுத்தார். அதே நாளில் ராமநாதபுரத்தில் நடந்த பிஜேபி நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். என்டிஏ கூட்டணி என்று விளித்த அவர், 35 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அதற்கு முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்று முழங்கினார்.  ஆனால், கூட்டணிக் கட்சி என்ற குறைந்தபட்ச மரியாதையைக் கூட பாஜகவுக்கு தராமல்,   விருந்துக்கும் ராமதாஸ் அழைக்கவில்லை. அதேபோல், ராமதாஸைப் பொறுத்தவரையிலும்  இது வெற்றிக் கூட்டணி; மக்கள் நலன் காக்கும் கூட்டணி என்று சொல்கிறாரே தவிர, என்.டி.ஏ கூட்டணி என்று சொல்ல மறுக்கிறார். அதுபோலவே, ஊழல் கட்சி என்று அதிமுகவை விமர்சித்துவிட்டு,  இப்போது அந்தக் கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தோம் எனத் தன்னிலை விளக்கம் அளித்த அன்புமணி ராமதாஸூம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று சொன்னாரே ஒழிய, பாஜகவுடன் கூட்டணி என்று சொல்வதை நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.

 

pa ma ka uzhaikkum katchi edapadi statement


 

இதுஒருபுறம் இருக்க, பிப்ரவரி 25-ஆம் தேதி,  தருமபுரி அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு 7 நிமிடம் உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது,  அதிமுகவும், பாமகவும் உழைக்கின்ற கட்சிகள்.  அதனால்தான், கூட்டணி வைத்திருக்கிறோம் என்று சொன்ன அவர், மற்றொரு பங்காளியான பாஜகவின் பெயரை ஒரு முறை மட்டுமே கூட்டணி கட்சி என்று உச்சரித்தார்.  ஆக , அதிமுக கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளுமே பட்டும் படாமல்தான் நட்பினைத்  தொடர்கின்றன. 
 

இந்தச் சூழ்நிலையில்தான்,   மார்ச் 1-ஆம் தேதி  குமரி மாவட்டத்திற்கும், 6-ஆம் தேதி சென்னைக்கும் வருகிறார் பிரதமர் மோடி. அன்றைய தினம்,  கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையேற்ற வேண்டும் என்பது அமித்ஷாவின் அஜண்டா. பாஜகவோடு கை குலுக்குவதில் அதிமுகவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், மோடி பங்கேற்கும் மேடையில் ராமதாஸ் ஏறுவாரா என்பது தான் அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது. 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.