Skip to main content

பள்ளிக் கல்வியின் மீது மோடி அரசின் கரோனா தாக்குதல்

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

cbse

 

லகமே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றவும் படாதபாடு படுகிற நேரத்தில், மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு நாடே முடங்கியுள்ள இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் கொள்கைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாகச் செயல்படுகிறது.


முதலில் பொருளாதாரத்தில் கை வைத்தார்கள். 20 இலட்சம் கோடி(?) கரோனா நிவாரணத் திட்டம் என்ற பெயரில், இந்நாட்டின் அரசுத்துறைகள் அனைத்தும் தனியார் முதலீடுகளுக்கு திறந்துவிடப்படும் சீர்திருத்தத்தை அறிவித்தார்கள். இப்போது பள்ளிக்கல்வித் திட்டத்தில் கைவைத்துள்ளார்கள்.

இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் மத்திய பள்ளிக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., தனது பள்ளிக்கல்வித் திட்டத்தில் 9வது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் இருந்து 190 பாடங்களை நீக்கியிருக்கிறது. கரோனா முழு முடக்கத்தால் பள்ளிகள் இயங்காத நிலையில், மாணாக்கர்களின் கல்விச் சுமையைக் குறைப்பதற்காக, 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.

உண்மையில் இந்த அக்கறை மாணாக்கர்களின் மீதானது அல்ல. மாறாக, இந்துத்துவக் கொள்கைக்கு ‘முரணான’ பாடங்களை ‘சுமையாக கருதியே நீக்கியுள்ளார்கள்.

பாடங்கள் நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை உற்று கவனிக்கும் எவரும், இது பா.ஜ.க.வும், அதன் மூலமாகத் திகழும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைப் பிரதிபலிப்பும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில்  (Preamble of the Constitution of India) அடிப்படையானவை என்று கூறப்பட்டுள்ள, “இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிசக் குடியரசு’’ என்கிற வரியிலுள்ள ஜனநாயகம், மதச் சார்பின்மை ஆகியனவும், அரசமைப்பின் முதல் உறுப்பில் கூறப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா’ என்பதில் மாநிலங்களின் இருப்பு மற்றும் அவசியம், கூட்டாட்சி அமைப்பு ஆகியன பற்றிய பாடங்களைத் தெரிவுசெய்து நீக்கியுள்ளது மோடி அரசு.

இந்நாட்டு மக்களின் குடியுரிமை நிர்ணயம் தொடர்பாக மோடி அரசு மேற்கொண்ட திருத்தத்தின் விளைவாக நாடெங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்பு, குடியுரிமை தொடர்பான பாடத்தை நீக்கச் செய்துள்ளது.

ஜனநாயக உரிமைகள் மற்றும் இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு ஆகிய இந்தியக் குடியரசின் அடிப்படைகளை மாணாக்கர் களுக்கு விளக்கும் பாடங்கள், 9ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்தே நீக்கப்படுகின்றன. அதுபோலவே, 10ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இருந்து, இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு வேராகத் திகழும் பன்முகத்தன்மை, எதிராகத் திகழும் சாதி-மதம் மற்றும் பாலின சமத்துவமின்மை, இவற்றால் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியன தங்களுடைய கொள்கைக்கு முரணாக உள்ளதென்பதாலேயே இந்துத்துவ பார்வையுடன் நீக்கப்பட்டுள்ளன.

11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியன ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவாரங்களால் தொடர்ந்து எதிர்க்கப்படும் கொள்கைகள் என்பதை நாடறியும். 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாடங்கள் இன்றைய அரசின் பொருளாதாரப் பாதைக்கு முற்றிலும் முரணானவையாகும். இந்நாட்டின் வளங்களை அந்நிய முதலீட்டிற்கும், சுரண்டலுக்கும் திறந்துவிடும் கொள்கை கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான பாடங்கள் ஒரு எதிர் சிந்தனையையே ஏற்படுத்து மல்லவா?

‘திட்ட ஆணையமும் ஐந்தாண்டுத் திட்டங்களும்’ மற்றும் திட்டமிட்ட முன்னேற்றம்’ ஆகியன, 'நிதி ஆயோக்' எனும் அமைப்பு இந்நாட்டின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் அமைப்பாக வந்துவிட்ட பின்னர் மாணாக்கர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் நினைவூட்டலாமா? எனவே, மிகத்தீவிரமாக சிந்தித்தே இந்தப் ‘பாடங்களை நீக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



                http://onelink.to/nknapp

 

எந்தவொரு பாசிச அரசும் செய்யக்கூடிய அதே வழியில் - மிகச்சரியாகக் கல்வியில் இருந்து தொடங்குகிறார்கள். இதிலிருந்து இந்நாட்டு மாணாக்கர்களும், மக்களும், அறிவுஜீவிகளும் அறிந்துகொள்ள வேண்டியது, எது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையோ அதுவே இந்நாட்டின் அரசியல் அமைப்பாக நிலைநிறுத்தும் முயற்சியின் முதல்படி இதுவாகும்.

இந்த மாற்றங்களெல்லாம் சி.பி.எஸ்.இ. மாணாக்கர்களுக்குதானே என்று நினைப்போர்... மோடி அரசு, மாநிலங்கள்மீது திணிக்கப்போகும் புதியக் கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டங்களை வரையறை செய்யும் அதிகாரம் ராஷ்ட்ரிய சிக்சா ஆயோக் (தேசக் கல்வி ஆணையம்) எனும் பிரதமரின் தலைமையிலான அமைப்பிடமே இருக்கிறது. அது வரையறை செய்யும் பாடத்திட்டத்தில் இருந்து சில மாற்றங்களை மட்டுமே, அதுவும் அடிப்படை பாடக் கட்டமைப்புக்கு உட்பட்டே மாநில அரசுகள் செய்ய முடியும். எனவே, இன்று சி.பி.எஸ்.இ. மாணாக்கர்கள் தலையில் இறக்கப்படும் இடி, நாளை நாடு முழுவதுமுள்ள மாணாக்கர்களின் தலையிலும் இறங்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நீண்டநெடிய சமூக, அரசியல் வரலாறு கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியக் குடியரசின் அமைவும் இருப்பும் உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் அமைப்பாகும். அதற்குக் காரணம் இந்நாடு அமைத்துக்கொண்ட சுதந்திர ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச குடியரசு எனும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைதல் அவசியம்.


-கா.அய்யநாதன்

 

 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.