Skip to main content

சீட் கொடுக்கறதா இருந்தா கட்சியே காணாமப் போயிரும்... அதிமுகவை கலக்கும் சோனாலி... அதிர்ச்சியில் அதிமுகவினர்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

திடீரென்று அவ்வப்போது வானில் புயல்கள் உருவாகி, மழையாலும், புயலாலும் பல ஊர்கள் அடியோடு சாய்ந்து போகிற பல சம்பவங்களை நாம் கண் முன்னே பார்த்திருக்கிறோம் . "அப்படியொரு புயல் சோனாலி என்கிற பெயரில் கோவை அ.தி.மு.க.வில் வீசத் தொடங்கி இருக்கிறதா? இல்லையா?' என அ.தி.மு.க.வினர் பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் .

 

sonali



"அதென்ன சோனாலி புயல்?' கட்சிக்காரர்களிடமே கேட்டோம்.

"சார்... சோனாலி பிரதீப் ஒரு வட நாட்டுப் பெண். கல்யாணமாகி பையன் ஒண்ணு, பொண்ணு ஒண்ணு இருக்கு. இந்த சோனாலி சினிமா நடிகையையும் தோற்கடிக்கும் அழகோடு இருந்ததால வெளிநாட்டுல நடந்த "மிஸஸ் யுனிவர்சல்' போட்டியில கலந்துகிட்டு முதல் பரிசை ஜெயிச்சுட்டு வந்தாங்க. அப்படி வரும் போது கோவை ஏர்போர்ட்டுல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிகூடயும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிகூடயும் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் சோனாலி ஆட்டம் தாங்க முடியலை. சோனாலியை நெனச்சு எங்க கட்சிக்காரங்க பலரும் உருக ஆரம்பிச்சுட் டாங்க. கட்சியில இருக்கற பெரிய பெரிய ஆளுக எல்லாம் சோனாலி பின்னாலயே சுத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு பேச்சு.

 

sonali admk



சோனாலியும் கோவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் நிகழ்ச்சியில எல்லாம் கலந்துகிட்டு முன்னால நின்னாங்க. அமைச்சர் சென்னையில இருந்து கோவைக்கு வரும் போதெல்லாம் இந்த சோனாலி பொண்ணும் கரெக்ட்டா வந்திருது. "கட்சியில நான் சேர்ந்துட்டேன். மேயர் சீட் எனக்குத்தான்னு அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாரு. அதுனால தான் நான் மேயர் சீட் கேட்டு விண்ணப்பம் போட்டிருக்கேன்'னு அந்தப் பொண்ணு சொல்ல ஆரம்பிச்சுருச்சு. அந்த சோனாலி பொண்ணுக்கு சீட் கொடுக்கறதா இருந்தா கட்சியே காணாமப் போயிரும்...'' என எச்சரிக்கைவிடுக்கிறார்கள் பட்டிமன்றத்தின் ஒருசாரார் கோபமாய் .


பட்டிமன்றத்தின் இன்னொரு சாராரோ, "சார்... மொதல்ல அந்த சோனாலி தன்னம்பிக்கை பேச்சாளி. அதன் மூலமாகத்தான் பல அ.தி.மு.க. நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டாங்க. கவுண்டம்பாளையத்துலதான் வீடு. இப்பதான் கட்சிக்கு வந்திருக்காங்க. எப்படி மேயர் சீட் கொடுப்பாங்க? பொதுக்குழுவிலேயே 5 வருடம் தொடர்ச்சியா கட்சியில் இருந்தவங்களுக்குத்தான் சீட்டுன்னு சொல்லிட்டாங்க. அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஆட்கள் இந்தப் பொண்ண வச்சு கேம் ஆடறாங்க. இப்ப வெளியான போட்டோ எல்லாமே அந்த சோனாலி பொண்ணோட பேஸ்புக்ல இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பொண்ணே இந்த போட்டோக்களை வெளியிட்டு கட்சியில இருக்கற எல்லார் கூடயும் ரொம்ப பழக்கம் இருப்பதாக ஒரு மாயை உருவாக்க ஆரம்பிச்சுருச்சு.


அமைச்சர் வேலுமணிக்கு வலதுகரமா இருக்கக்கூடிய இன்ஜினியர் வடவள்ளி சந்திரசேகர் மனைவி ஷர்மிளாவுக்குதான் மேயர் சீட்டுங்கறது கட்சிக்காரங்களோட புள்ளைகள கேட்டா கூட சொல்லுவாங்க. அப்படியிருக்கும்போது... சோனாலி பற்றி கிளப்பிவிடுவதில் துளிகூட உண்மை இல்லை'' என்கிறார்கள் சிரிப்பாய். "சோனாலி புயல் கோவை அ.தி.மு.க.வை சாய்க்காமல் இருந்தால் சரி...' என்கிறார்கள் கட்சியின் உண்மை விசுவாசிகள்.

"எனக்கு அ.தி.மு.க.வில் அத்தனை பெரிய ஆட்கள் கூடயும் நல்ல தொடர்பு இருக்கிறது... நான் சொன்னால் தமிழ்நாடு கவர்மென்டில் என்ன வேணாலும் நீங்கள் சாதித்துக் கொள்ளலாம்... என சொல்லும் சோனாலி.. முன்னாள் பா.ஜ.க. ஆள். பா.ஜ.க. மெல்ல தங்கள் ஆட்களை அ.தி.மு.க.விற்குள் மறைமுகமாக நுழைக்கிறது. அதை எங்கள் ஆட்கள் இரு கரம் நீட்டி மறைமுகமாக வரவேற்கிறார்கள்'' என கொதிக்கிறார்கள் கோவை ர.ர.க்கள்.


 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.