Skip to main content

எம்.எல்.ஏ. சீட்! எதிர்க்கும் இளைஞர்கள்! - திமுக சீனியர்கள் அதிர்ச்சி!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

ddd

 

அறிவாலயத்தில் 17ம் தேதி தொடங்கிய விருப்ப மனு வாங்கும் நிகழ்வின் முதல் 4 நாட்களிலேயே 4,200-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கும் மேற்பட்டோர் அந்தந்த நாட்களிலேயே பூர்த்திசெய்து ஒப்படைத்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் சீட் கேட்கும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விருப்பமனு தருவதற்கு பிப்ரவரி 28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

 

பலரும் தங்களுக்காக பணம் கட்டுவதுடன் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி பெயரிலும் பணம் கட்டுகின்றனர். இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் சீட் கேட்கும் ஆர்வமும் எண்ணிக்கையும் இந்தமுறை அதிகரித்திருக்கிறது. தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், எட்டாவது முறையாக மீண்டும் காட்பாடியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அவரது வயதைக் குறிக்கும் வகையில் 83 பேர் அவருக்காக மனு போட தயாராகியுள்ளனர்.

 

அதே நேரத்தில், 83 வயதாகும் அவர் இந்தமுறை போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என மாவட்ட தி.மு.க.வினர் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தனர். அத்துடன் 25 இளைஞர்கள் காட்பாடி சீட் கேட்டு விண்ணப்பித்திருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்த துரைமுருகன் தரப்பு, இளைஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளது.
 

dmk

 

அதேபோல, நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சபாநாயகரும் கட்சியின் மூத்த தலைவருமான ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், தி.மு.க.வின் இளம் தொழிலதிபரான அஜய்படையப்ப சேதுபதியும் குறிவைத்திருப்பதை ஐ-பேக் மட்டுமின்றி, மாநில உளவுத்துறையும் கவனித்திருந்தது. இந்த நிலையில், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், ஆயிரம் விளக்கில் உதயநிதியும் போட்டியிட வேண்டும் என பணம் கட்டியுள்ள அஜய்சேதுபதி, அம்பாசமுத்திரத்திற்காக மனு கொடுத்திருக்கிறார். இது, ஆவுடையப்பனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கவலையைக் கொடுத்துள்ளது.

 

நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலில் போட்டியிட்டு 98 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் இன்பதுரையிடம் தோல்வியடைந்த தி.மு.க.வின் அப்பாவு, இன்பதுரைக்கு எதிராக போட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட அப்பாவு திட்டமிட்டிருந்தாலும், கடந்த 6 மாதமாக ராதாபுரம் தொகுதியை வலம் வந்து, மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வீனஸ் வீர அரசும் காய்களை நகர்த்தி, விருப்ப மனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

 

கோவையின் சூலூர் தொகுதிவாசியான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. புதியவர்களும் இளைஞர்களும் சூலூரைக் குறிவைப்பதால், இடம் மாறி சிங்காநல்லூரைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், சிங்காநல்லூரின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான இளைஞர் கார்த்திக்கு மக்களிடம் நல்ல பெயர். இவரிடமிருந்து தொகுதியைக் கைப்பற்ற பழனிச்சாமியால் முடியாது என்கின்றனர் அறிவாலயத் தரப்பினர்.

 

அதேபோல, பொள்ளாச்சியைப் பிடிக்க மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தொகுதியில் இரண்டுமுறை வேட்பாளராகி தோற்றுப்போன தமிழ்மணி, நகரப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், வடக்கு ஒ.செ. மருதவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் ஆகியோரிடையே பந்தயம் விறுவிறுப்பாகியிருக்கிறது. தமிழ்மணி இரண்டுமுறையும், அவரது தந்தை ராஜு மூன்றுமுறையும் என இத்தொகுதியில் ஒரே குடும்பத்துக்கு 5 முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் தமிழ்மணிக்கு வாய்ப்பு எனில் கட்சியில் அதிருப்தி அதிகமாகும் என்கிறார்கள்.

 

தென்றல் செல்வராஜுக்கு ஆதரவு இருக்கும் அளவிற்கு, எதிர்ப்பும் இருக்கிறது. டாக்டர் வரதராஜனுக்கு, சாதி, வசதி வாய்ப்புகள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும், தென்றல் செல்வராஜின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு அதிகம். சீனியர்களைப் புறந்தள்ளி உதயநிதி மூலம் தொகுதியைக் கைப்பற்றும் பகீரத முயற்சியில் இருக்கிறார் சபரிகார்த்திகேயன். ஆனால், அவரது தாத்தா நெகமம் கந்தசாமி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திமுகவுக்கு கொடுத்த நெருக்கடிகள் இவருக்கு எதிரான சலசலப்பை உண்டாக்குகின்றன.

 

வடக்கு ஒன்றியச் செயலாளர் மருதவேல், அறிவாலயத்தில் கோலோச்சும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சிலரின் தயவால் தொகுதியில் வாய்ப்பு பெற முயற்சித்துள்ளார். ஆனால், கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளைக் கொட்டச் செய்ததில் அவரது பெயர் மக்களிடம் எதிர்மறையாக உள்ளது. இளைஞரான மன்றாம்பாளையம் மகேந்திரன் சீட் கேட்பது சீனியர்களை அதிர வைக்கிறது.

 

இப்படி தமிழகம் முழுவதும் சீனியர்களை எதிர்க்கும் இளைஞர்கள், சீட் கேட்டு விருப்ப மனுக்கள் மூலமாக அறிவாலயத்தின் கதவுகளைத் தட்டி வருகிறார்கள்.

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.