Skip to main content

இந்தத் தலைமுறைக்கு ஸ்டாலின் யார்? - அவர் முன் இருக்கும் 7 சவால்கள்! 

Published on 03/03/2018 | Edited on 03/03/2018

திமுகவினர் தங்கள் தளபதியின் அறுபத்தி ஐந்தாவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி முடித்துள்ளனர். தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களுள் ஒருவராக ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் அன்பைப்  பெற்ற கட்சித் தலைமையும் இல்லை, மதிக்கத்தக்க வகையில் ஆட்சியுமில்லை என்று அ.தி.மு.க இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக மக்கள் நினைப்பவர்களில் முதலில் இருக்க வேண்டியவர் ஸ்டாலின். இருக்கிறாரா? சமூக நீதி போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றை பார்த்திராத இன்றைய தலைமுறையின் பார்வையில் ஸ்டாலின் யார்? இந்தத் தலைமுறையின் ஆதரவைப் பெறும் பயணத்தில் ஸ்டாலினுக்கு உள்ள சவால்கள் என்ன?
 

Stalin 2.0


 

  • 1967ல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தன் ஆளுமையைக் கொண்டிருந்த காங்கிரசை, தமிழகத்தில் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய போது, திமுக தமிழகம் தேடிய மாற்றமாக இருந்தது. காங்கிரசின் பண்ணையார்கள், பணக்காரர்களை நடுங்க வைத்த பாட்டாளிகளாக இருந்தனர் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும். ஆனால், இந்தத் தலைமுறை பார்க்கும் திமுகவின் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளுமோ கல்லூரிகளுக்கு சொந்தக்காரர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள். சாதாரண மக்களுக்கான கட்சியாக, பெரும் பின்புலன் இல்லாத இளைஞர்களும் செயல்படக்கூடிய கட்சியாக திமுக இருக்கிறதா என்பதையும், மக்களுக்கு நெருக்கமாக திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்து, இளைஞர்களிடம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

     
  • 2006-11 கடைசியாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டம். 2ஜி ஊழல் வழக்கு, இலங்கையில் இறுதி யுத்தம் உச்சத்தில் இருந்த பொழுது எதிர்பார்த்த வேகத்தில், தீவிரத்தில் செயல்படவில்லை என்ற பெயர், மாவட்டங்களில் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு, தொழில் அராஜக புகார்கள், திருமங்கலம் ஃபார்முலா என இவைதான் திமுகவின் கடைசி ஆட்சி புதிய வாக்காளர்களிடம் விட்டுச் சென்ற தடங்கள். மெச்சத்தக்க ஆட்சியைத் தராத அதிமுகவையே மீண்டும் மீண்டும் அரியணையில் ஏற்ற இவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதிமுக அரசு இவற்றையெல்லாம் தாண்டும் அளவுக்கு ஆட்சி செய்து வந்தாலும் இந்தத் தடயங்களை எல்லாம்  மாற்றி புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒரு சவாலே. 
     m.k.stalin and mk

     
  • இன்றைய நிலையில் திமுகவில் புதிதாய் சேரும் ஒரு சாதாரண இளைஞர் எந்த அளவுக்கு கட்சிக்குள் வளர முடியும் என்பது ஒரு கேள்வியே. அந்த அளவு கெட்டி தட்டிப் போய் இருக்கின்றன திமுகவின் அதிகாரச் சுவர்கள். தலைமை அளவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் ஒரு பக்கமென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அது இருப்பதை கட்சியின் தொண்டர்களே மறுக்க மாட்டார்கள். ஜனநாயக முறைப்படி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும்  கட்சி என்ற பேர் இருந்தாலும்  பெரும்பாலான மாவட்டங்களில் பன்னெடுங்காலமாக மாவட்ட செயலாளர்கள் மாற்றமே இல்லாமல் இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு அடுத்து இப்பொழுதே வாரிசுகள் வரிசையாக இருக்கின்றனர். ஸ்டாலின், பதினான்கு வயதில் கட்சிப் பணியைத் தொடங்கி, 23 வயதில் சிறை சென்றவர். அவர் மேல் இருக்கும் அதே பார்வை உதயநிதி மேல் இருக்காது. பிறந்தநாளன்று  தன் பேரனுடன் வந்து பெரியார் சமாதிக்கு மரியாதை செலுத்தியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், தலைமையிலிருந்து அடிமட்டம் வரை வாரிசு அரசியல் என்ற உணர்வைப் போக்குவது பெரும் சவால். சமீபத்தில் திமுக தலைமை தன் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், இரண்டு பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளை தாங்களே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது. மாற்றம் நடக்கிறதா பார்ப்போம்.

 

  • சுற்றுப்புறச்சூழல், ஆறுகள் அழிவு, மலைகள் ஆக்ரமிப்பு என இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. ஆற்று மணலிலிருந்து இப்பொழுது எம்-சாண்ட் வரை எதிலுமே திமுக காரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்கள், இயற்கை விவசாயம், ஏரி,  குளங்கள் மீட்பு, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு  என பலவகைகளில் சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயல்கின்றனர். அதைப் பற்றி பேசுகின்றனர். அந்த வகையில் ஏரிகளை ஆக்கிரமிக்காமல், ஆறுகளை சுரண்டாமல் காக்கும், காடுகளை அழிக்காமல் வளர்க்கும் கட்சியாக திமுக மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பது ஒரு சவால் தான்.

     
mk stalin and uday


 

  • இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என எதிர்ப்புகளை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள். மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமாகக் கருதப்படும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், முன்னேறுவோம் என்றெண்ணி பெருகிப் போன  பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இன்று வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள். தமிழகத்துக்கு வருவதாக இருந்த புதிய நிறுவனங்களோ நெல்லூருக்கும் விஜயவாடாவுக்கும் சென்றுவிட்டன. சுற்றுச்சூழலிலும் கீழே சென்று, தொழில்துறையிலும் கீழே செல்லும் தமிழ்நாட்டை மீட்க முறையான விவரமான  திட்டங்கள் வேண்டும்.

 

  • ஒரு பக்கம் சீமான், திருமுருகன் காந்தி என போராட்ட களத்திலும் மறுபக்கம் ரஜினி, கமல், விஜய் என நட்சத்திர வெளிச்சத்திலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதையெல்லாம் தாண்டி அரசியல் சிந்தனை உள்ள இளைஞர்களை ஈர்க்க இன்னும் வீரியமான செயல்பாடுகள் தேவை. ஜல்லிக்கட்டு, நீட் என இளைஞர்கள் களத்துக்கு வந்துவிட்ட காலகட்டம் இது.சமீபமாக சீறினாலும், இடையில் பல தருணங்களிலும், 'பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும்' என்று பேசாமல் இருந்தது ஏமாற்றமே. முந்தைய தலைமுறை போல எந்தத் தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசுவது, பன்னீர்செல்வத்துடன் ஒரே மேசையில் உணவருந்துவது என்று அரசியல் நாகரீகத்தில் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தாலும், அது வெறுமனே அதிகாரத்தில் இருபவர்களுக்கிடையேயான நல்லிணக்கமாக சுருங்கி விடாமல் மக்கள் பிரச்சனைகளில்  எந்த அளவுக்கு பயன்படும் என்பதும் முக்கியம். 'நமக்கு நாமே' பயணத்தில் இளமைத் தோற்றம், சட்டசபையில் ஆவேசம் என எல்லாவற்றையும் மீம்ஸ் போடும் இந்தத் தலைமுறையின் பெரும்பான்மையை ஈர்ப்பது ஒரு பெரிய சவாலே.    

     stalin in namakku name                               
     
  • அதற்கு முன்பே பல காலமாக நடந்து வந்தாலும், ஊடக கவனத்தாலும் அழகிரியின் ஆற்றலாலும், இன்றும் அறியப்படுவது திருமங்கலம் ஃபார்முலா. இன்று அது தினகரன் ஃபார்முலா என்று பெரும் பரிணாம வளர்ச்சியே நடந்துவிட்டது. ஆர்.கே.நகரில், திமுக, ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடைத் தேர்தலில் இரண்டாம் இடத்தையும் பிடிக்க முடியாத நிலையில், இந்த உறுதி சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்பதும் ஒரு நடைமுறை சவாலே.

 

பல சவால்களை பல விதங்களில் எதிர்கொண்டுதான் திமுக எனும் பேரியக்கத்தின்  செயல் தலைவராகியிருக்கிறார் தளபதி ஸ்டாலின். அவற்றை விட சற்று கடினமான  இந்த சவால்களை வென்று திமுகவை கரை சேர்ப்பாரா? பார்ப்போம்.         

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.