Skip to main content

கொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
mk stalin


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய பிரிகேட் மைதானத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி மோடி அரசைத் தூக்கி எறிவோம் என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்.
 

22க்கு மேற்பட்ட கட்சிகள் தனக்கு எதிராக அணி அமைத்திருப்பதாகவும், அது மக்களுக்கு எதிரான அணி என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதாவது தனக்கு எதிராக அணி அமைத்தால் அது மக்களுக்கு எதிரானது என்றால் அர்த்தம்? மோடி என்றால் மக்கள்… மக்கள் என்றால் மோடி என்று சொல்ல வருகிறாரா?
 

2014 ஆம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் அல்லது ஆண்ட்டி இண்டியன் என்று குற்றம்சாட்டப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதாவது, மோடி என்றால் தேசம்… தேசம் என்றால் மோடி என்பதைப்போல.
 

இப்படித்தான், 1977 ஆம் ஆண்டுக்கு முன் இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒரு முழக்கத்தை உருவாக்கினார்கள். ஆனால், அதே இந்திரா தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது.
 

அதே நிலைதான் இப்போதும் இந்தியாவில் நிலவுகிறது. பதவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவில் தங்கிய நாட்களைவிட வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த நாட்களே அதிகம். அவரை சுற்றுலா பிரதமர் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 

மக்களுடைய வாழ்வாதாரத்தையும், இந்தியாவின் அடிப்படைத் தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் தகர்த்து, மக்களை பிரித்தாளும் முயற்சியிலேயே பாஜக காலத்தை ஓட்டிவருகிறது. கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரரைப் போல மோடி, இந்திய மக்களின் பணத்தை எடுத்து பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து, அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பவிடும் வேலையையும் செய்துவருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு, அம்பானிகளும், அதானிகளும் விரும்புகிற வேலையை அவர்கள் விரும்பியபடி நிறைவேற்றித்தரும் நம்பிக்கையான வேலைக்காரராக மோடி செயல்படுகிறார் என்று பகிரங்கமாகவே அவர்மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
 

அவருக்கு எதிராக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் எதற்குமே அவர் பதிலளிப்பதில்லை. இது ஒருவிதமான கல்லுளிமங்கன் நிலை என்றும் கேலிசெய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 19 நாட்களே இருந்திருக்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் உறுப்பினர்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு பதிலளிக்கவில்லை. ஒரு விவாதம் நடந்தால், இறுதியாக காட்டுக்கூச்சலாக ஏற்ற இறக்கத்தோடு நீளமாக பேசுவதையே தனது பாணியாக வைத்திருக்கிறார் மோடி. குறுக்கே யாரும் புக முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டே பேசுகிறார்.
 

இப்படிப்பட்ட பிரதமரை இனியும் விட்டுவிடக்கூடாது என்றே, மக்கள் நலன்சார்ந்த சிந்தனையோடு, இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவர்கள் நடத்திய கொல்கத்தா கூட்டத்தில் எல்லாத் தலைவர்களுமே தங்களுக்குள் வேற்றுமையை மறந்து, மோடியை தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

பங்கேற்ற தலைவர்களில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுதான் மிகவும் வெளிப்படையான, மோடியை முழுவதுமாகத் தோலுரித்த பேச்சாகும். இந்திய அரசை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் மோடி என்று கூறிய ஸ்டாலின், நூறு கூட்டங்களில் மோடி பேசிய ஆயிரம்பொய்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தவர். ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி, பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று கேலி பேசியவர் மோடி. கருப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாக பணமதிப்பிழப்புச் செய்து, நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களை இழுத்துமூடக் காரணமானவர் மோடி என்று ஸ்டாலின் ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
 

இப்படிப் பேசியது மட்டுமின்றி, நாடுமுழுவதும் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி மோடியையும் பாஜகவையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் ஸ்டாலின். அவருடைய பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றது. எல்லாக் கட்சிகளும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி தலைமையிலான பாஜக அரசை தூக்கியெறிய வேண்டும் என்று ஸ்டாலின் எழுப்பிய குரல் எல்லாப் பக்கத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

 

 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.