Skip to main content

அதிகார திமிரை காட்டுகிறார்கள் -தமிமுன் அன்சாரி கண்டனம்

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

 

ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜக சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 

mjk


 

அதன்படி இன்று காலை சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், முக்குலத்தோர் புலிப் படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, SDPI,  தமுமுக, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் பேரரசு கட்சி ( இயக்குனர் கெளதமன்) விடுதலை தமிழ் புலிகள் (குடந்தை அரசன்), தமிழ் தேசிய பேரியக்கம் ( பெ.மணியரசன்), தமிழர் தேசிய முன்னணி (பழ. நெடுமாறன்),  திராவிட இயக்க தமிழர் பேரவை (சுப.வீரபாண்டியன்),  தமிழ் புலிகள் கட்சி (நாகை திருவள்ளுவன்),  தமிழர் விடியல் கட்சி (இளமாறன்), சமூக நீதி இயக்கம் ( பேராயர் எஸ்ரா.சற்குணம்), தமிழக மக்கள் கட்சி, சமூக நீதி மக்கள் கட்சி, மற்றும் அகில இந்திய ஜாமியத்துல் உலமா, இந்திய தவ்ஹீத் ஜமாத், வெல்ஃபேர் பார்ட்டி, இந்திய தேசிய லீக் (பஷீர் ஹாஜியார்)   இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்), அகில இந்திய தேசிய லீக், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,முஸ்லிம் தொண்டு இயக்கம், இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம், ஐக்கிய சமாதான பேரவை, இஸ்லாமிய இலக்கிய கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.


  mjk


 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர், அவர்களை கைது செய்து சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடைத்தனர். 
 

இந்த நிலையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். 
 

காஷ்மீர் மக்கள் விருப்பம் இல்லாமல் ஜம்மு காஷ்மீர் குறித்து எந்த முடிவும் எடுக்காது என இந்திய அரசு கூறியிருந்தது. இப்போது ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய அரசு எடுத்துள்ள முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?. 
 

இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. ஐ.நா அவையில் இந்தியா சார்பில் அன்றைய பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை, நரேந்திர மோடி, அமித்ஷா கூட்டணி சவக்குழிக்குள் வைத்து விட்டது. இப்போது இவ்விஷயத்தில் உலக நாடுகள் தலையிடும் நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையை உலக பிரச்சனையாக மாற்றியது நமது நாட்டின் ராஜதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவாகும்.

 

mjk

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிமுன் அன்சாரி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடைக்கப்பட்டபோது போலீசாரிடம் கையெழுத்திடுகிறார்.
 

 

நாடாளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ தெரிவிக்காமல் திடீரென்று ஜனாதிபதியைக் கொண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியது சரியா?
 

இது கொல்லைப்புறமாக வந்து குரல் வளையை நெறிப்பது போன்றதாகும். Rss-ன் நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றவே, இவ்வளவு அவசரம் காட்டப்பட்டிருக்கிறது. எண்ணிக்கை பெரும்பான்மை என்ற பலத்தில் அதிகார திமிரை காட்டுகிறார்கள்.
 

ஐம்மு காஷ்மீர் இனி கார்ப்பரேடட்டுகளின் கைகளுக்கு மாறும் என்று கூறுகிறார்களே அப்படி நடக்குமா?
 

இனி அதானி, அம்பானி, வேதாந்தா, டாட்டா போன்ற கார்ப்பரேட்டுகளின் சந்தையாக காஷ்மீரின்  அழகிய நிலங்கள் பறி போகப்போகின்றன. அந்த மக்கள் தங்கள் மண்ணிலேயே அகதிகளாகும் நிலை உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
 

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்து மீறல் இனி குறையுமா?
 

காஷ்மீரிகள் இந்தியாவை விட பாகிஸ்தானை அதிகமாக வெறுக்கிறார்கள் என்பதே நிஜமாகும்.பாகிஸ்தான் அத்துமீறலை ஒடுக்குவது நம் ராணுவத்தின் பணியாகும். அதை நாமும் ஆதரிக்கிறோம்.

 அதற்காக, காஷ்மீருக்காக 370 வது சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை நீக்கி, காஷ்மீரை துண்டாடுவதை ஏற்க முடியாது. அவர்கள் தங்களை மதத்தால் பிரிப்பதை எதிர்க்கிறார்கள். அங்கு முஸ்லிம்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் அனைவரும் தங்களை காஷ்மீரிகள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.
 

இதை புரியாமல், எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை காட்டி, உண்மைகளையும், நீதிகளையும் திசை மாற்றக் கூடாது.

 

mjk


 

ஐம்மு காஷ்மீரில் இனி தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இனி இந்தியாவிலேயே தேர்தல் நடக்குமா ? என சிலர் அச்சம் எழுப்பியிருக்கிறனர். அது உண்மைதான். இனி மாநில சட்டமன்றங்களின் அதிகாரம் மாநகராட்சி அந்தஸ்தாக குறைக்கப்படும். பல மாநில அரசுகள் பந்தாடப்படும். அரசியல் சுய நலன்களுக்காக பல மாநிலங்கள் உடைக்கப்படலாம்.

 

mjk



 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு தற்காலிக ஏற்பாடுதான் என்று நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கிறாரே?
 

அதிமுகவை உருவாக்கிய MGR அவர்கள், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லாவின் உற்ற நண்பராவார். அவர் காஷ்மீர் மக்களை நேசித்தார். அன்னை தெரஸா பல்கலைக்கழகத்தை கொடைக்கானலில் தொடங்கியப் போது ஷேக் அப்துல்லாவை அழைத்து கெளரவித்து அன்பு காட்டினார். அவரது எண்ணத்திற்கு எதிராக இன்று அதிமுக செயல்பட்டிருக்கிறது. அதிமுகவின் இம் முடிவு கண்டிக்கத்தக்கது. அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. தங்களின் சரணாகதி அரசியலை அப்பட்டமாக மீண்டும் வெளிப்படுத்தி விட்டார்கள்.

 

Next Story

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister MK Stalin propaganda In Chennai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று (17.04.2024) மாலை 4 மணிக்கு தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.