Skip to main content

மிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்? கொந்தளிக்கும் உடன் பிறப்புகள்...

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானாரா? முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா? என அண்மையில் திடீர் திடீரென சர்ச்சைகள் எழுந்து, பல்வேறு சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் தமிழகத்தில் ஸ்டாலினைப் பற்றியும், முரசொலி நிலத்தைப் பற்றியும் சமூக ஊடகங்களில் சர்ச்சையை சிலர் ஏற்படுத்தினர். அ.தி.மு.க மந்திரிகள் வரை இதனை பேசும் அளவுக்கு இந்த விஷயங்கள் மாற்றப்பட்டன. இதனால் தமிழகத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது. 
 

மேலும் இந்த விவகாரத்தை, திமுகவுக்கு எதிராக இருக்கக்கூடிய அதிமுகவின் ஐ.டி. விங், பாஜக ஐ.டி. விங், பாஜகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள், பாஜகவுக்கு ஆதரவாக உள்ள அமைப்புகளின் ஐ.டி. விங், நாம் தமிழர் உள்ளிட்ட திராவிட இயக்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 
 

தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு மக்கள் பிரச்சனைகள் உள்ள நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக ஐ.டி. விங் மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது என்று திமுகவினரே குமுறுகின்றனர். 

 

dmk it wing



''தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அப்படிப்பட்ட திமுகவில் உள்ள ஐ.டி. விங், ஆளும் கட்சியின் ஊழல்கள், மக்கள் விரோத செயல்களை அடித்து விளையாடலாம். ஆனால் அதனை செய்யாமல் தடுப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதிலும் கூட ரொம்பவே தடுமாறுகிறது. 
 

ஸ்டாலின் மிசாவில் இருந்தார் என்பது நாடறிந்த உண்மை. திமுகவுக்கு எதிராக இருக்கக்கூடிய துக்ளக் குருமூர்த்தியே இதை உறுதிப்படுத்தி விட்டார். ஆனால் திமுக தரப்பில் அதனை அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு ஒரு முன்னாள் அமைச்சராலேயே முடியவில்லை. இதனால்தான் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. ஐடி விங் அதிகாரப்பூர்வமாக இதற்கு பதிலடி கொடுக்கவில்லை.  ஓர் இளம் டீம் ஆர்வத்துடன் செயலாற்றி,  ஐடி விங் பொறுப்பில் உள்ளவரின் ஒத்துழைப்புடன் இதற்கு பதில் தருவதற்குள் 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது. 
 

திமுக மீது விமர்சனம், ஸ்டாலின் மீது விமர்சனம் என்பதை தாண்டி ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதல், ஸ்டாலின் குடும்பம் மீதான தாக்குதல், பர்சனல் விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் திமுக திணறடிக்கப்படுகிறது. நாலாந்தர மேடைப் பேச்சாளர்கள் பேசும் அளவுக்கு வம்பு இழுக்கப்படுகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய திமுக ஐ.டி. விங், பெரிய அளவில் எதுவும் தனது பங்கை செய்யவில்லை. 
 

தனிப்பட்ட முறையில் திமுகவை ஆதரக்கக்கூடியவர்கள், திமுக ஐ.டி. விங் குரூப்பில் இல்லாத திமுக உறுப்பினர்கள்தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு சமூக ஊடகத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர். பதிலடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எதிர்த் தரப்பு மீதும் பல்வேறு கேள்விகளை வைக்கிறார்கள்.
 

திமுக  ஐ.டி. விங் குரூப்புக்கு தலைமைப் பொறுப்பாக இருக்கக்கூடியவர் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவர் இந்த அணியை உருவாக்கும்போதே தான் தன்னிச்சையாக செயல்படக்கூடிய சுதந்திரம் வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டார். மேலும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு உறவினர் என்பதாலும் அவர் சொல்வதை ஐ.டி. விங் நிர்வாகிகள் எல்லோரும் கேட்டுக்கொள்கிறார்கள். 
 

தேர்தல் விவரங்கள், வாக்குச்சாவடி விவரங்கள் போன்ற புள்ளிவிவரங்களை சொல்லி, கட்சியின் அடிப்படை கட்டமைப்பு விசயத்தில்தான் கவனம் செலுத்துகிறார்கள். சமூக ஊடகங்ளில் திமுகவுக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.டி. குரூப்பில் ஒரு கட்டமைப்பு இல்லை. திமுக மீது அபாண்டமாக குற்றச்சாட்டு சொல்பவர்களிடம் போதிய விவரமும் இல்லை, ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் தக்க பதிலடி கொடுத்தால் என்ன?


 

தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் அவை மிகப்பெரிய அளவில் பேசப்படுவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. பல்வேறு அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது. 
 

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றார் என்பதற்காக, இப்போது துணை முதலமைச்சர் என்ற பெயரில் ஓ.பி.எஸ். சென்றிருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகள் வருதோ இல்லையோ விருதுகளை வாங்கி குவிக்கிறார். 
 

நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுக, எப்படி மூன்று மாதத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டிருந்தனர். இதனையெல்லாம் திமுக ஐ.டி. விங் ஸ்டிங் ஆபரேசன் செய்யாமல் விட்டுவிட்டது. கண்ணுக்கு தெரிந்த பல்வேறு முறைகேடுகள், ஊழல்களை இந்த ஐ.டி. விங் பொதுமக்களுக்கு எடுத்து சொல்லாமல்விட்டுவிட்டது. யாருக்காக இந்த குழு செயல்படுகிறது, எதற்காக செயல்படுகிறது என்றே தெரியவில்லை.
 

பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2009ல் இருந்தே சமூக ஊடகங்களில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய திமுகவினர் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஆதாரப்பூர்வமான செய்திகளை, பதிவுகளை, திமுகவின் சாதனைகளை சமூக ஊடகங்களில் போடுவார்கள். அவர்களை ஐ.டி விங் பயன்படுத்திக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் யார்? யார்? என்ற விவரங்கள் கூட திமுக ஐ.டி. விங்கிற்கு தெரியாது. 


 

ஐ.டி. விங்கில் இருக்கும் ஒரு சிலர் மட்டும் தங்களோட சொந்த முயற்சியில் பல ஆவணங்களை தோண்டி எடுத்து திமுக மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கிறார்கள். தவிர, ஐ.டி. விங்கோட அதிகாரப்பூர்வ செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளது. சபரீசன் உறவினராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருப்பதால், நாம் ஏதாவது சொன்னால் நமக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்ற தயக்கமும், பயமும் திமுக முன்னணி நிர்வாகிகளுக்கே இருக்கிறது. 
 

ஃபாரீன்ல படிச்சோம், ப்ளைட்டில் போனோம் என்ற நினைப்பிலேயே ஐ. டி.  விங் தலைமை இருப்பதால் அந்த விங் எப்போதும் பிளைட் மோடுலேயே இருக்கிறது. 
 

''நான் மிசாவில் இருந்தேன் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது'' என கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் வேதனையோடு பேசினார் மு.க.ஸ்டாலின். இந்த அளவுக்கு வேதனைப்பட்டு பேசுவார் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. கட்சித் தலைவரை, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சியினர் தாக்கும் நிலையிலும், இன்னும் பிளைட் மோடு போட்டுவிட்டு காராபூந்தி, காராச்சேவு, மிக்சர் என சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது இந்த ஐ.டி. விங். 
 

நாங்கள் ஐ.டி. விங் குரூப்புக்குள் புகுந்து ஏதேனும் பதவியை பிடித்துவிடுவோம் என்ற பயம் வேண்டாம். தகுந்த ஆதாரங்களை, தக்க பதிலடிகளை, ஆவணங்களை தர தயாராக இருக்கிறோம். அதனை அவர்கள் பயன்படுத்தி கட்சிக்கு பலம் சேர்த்தால் போதும், நாங்கள் எங்கள் பதிலடிகளை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் இது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் காலம் என்பதால்தான் ஐ.டி. விங்கோட ஒத்துழைப்பு வேண்டும் என்கிறோம்" என நம்மிடம் வருத்தப்பட்டனர் திமுகவின் உண்மையான சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார். 

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.