Skip to main content

"சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

jhk

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜாவை அவதூறாகப் பேசியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலரும் அன்வர் ராஜாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி மின்னல் ரவி என்கிற மின்னல் வசந்த் அவர்களிடம் இதுதொடர்பாக கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


அதிமுகவில் முன்னாள் நிர்வாகியாக இருந்திருக்கிறீர்கள், தற்போது அதிமுகவில் நடப்பவற்றைப் பார்த்துவருகிறீர்கள். நேற்றைய அதிமுக கூட்டத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள், நேற்று என்னதான் நடைபெற்றது? 

 

கட்சியில் வலுவான தலைமை இல்லை, அதனால்தான் இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது. சென்னையில் 16 தொகுதிகளையும் இழந்திருக்கிறோம். அங்கு அதிமுக சார்பாக இருக்கிற 8 மாவட்டச் செயலாளர்களையும் இந்நேரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடுத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் ஒரு பயம் இருக்கும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கட்சிக்காக உழைப்பவர்களை வைத்து கட்சி நடத்தாமல், கட்சியில் தன் ஆதரவாளர் என்ற அடிப்படையில் கட்சி நடத்தினால் தோல்விதான் நமக்கு வரும். என்னை எல்லாம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். சகிகலாவிடம் ஃபோனில் பேசினேன். அவர்களைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது யார், நீங்கள்தானே?  சசிகலா மாதிரி கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள், இவர்கள் ஹாயாக இருக்கிறார்கள். 


பொதுக்குழுவில் பிரச்சனை என்கிறார்கள், அங்கே யார் யாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு வந்த தகவல் என்ன? 

 

வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் சசிகலாவை சேர்க்கலாமா இல்லையா என்பது பற்றி பேச அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா எழுந்து பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது பழைய பகையை ஞாபகம் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் சண்முகம் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். கட்சியில் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களைத் தவிர நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தால் அனைவரும் பார்க்க தயாராக இருக்கிறார்கள். 

 

வெளியே வந்தால் சசிகலாவைப் பார்க்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வந்துவிட்டார்களே, மழை நிவாரண உதவிகளை எல்லாம் வழங்கிவருகிறார்களே, ஆனால் பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லையே? 

 

தற்போது மழை, கரோனா பாதிப்புகள் காரணமாக அவர்களால் பெரிய அளவில் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. இப்போதுதான் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். கட்சியில் அவர்கள் இணைந்தால் இந்த ஆதரவு பெரிய அளவில் இருக்கும். இது விரைவில் நடக்கும். கட்சி அவர்கள் தலைமையை விரைவில் அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரு பிறந்தநாளில் ஜெயலலிதா கூட சொன்னார்கள். "எங்கள் குடும்பத்தில் இதுவரை 60 வயதை தாண்டி யாரும் வாழ்ந்ததில்லை. ஆனால் நான் இன்றைக்கு அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன் என்றால் அதற்குக் காரணம் சசிகலாதான். இனி நான் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியும் கட்சிக்கும், மக்களும் கடுமையாக உழைப்பேன்" என்ற உறுதிமொழியைக் கொடுத்தார். அப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் இருந்தார்.

 

இனி இந்தக் கட்சியைத் தோல்வி பாதையிலிருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடியும். அந்த நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. சசிகலா நினைத்திருந்தால் சிறைச்சாலையிலிருந்து 10 நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் சசிகலா அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் இது ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதனால்தான் இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவுசெய்தது. எனவே யாரையும் கெடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.

 

அதிமுகவில் இன்னும் எடப்பாடி பழனிசாமி கைகள்தானே ஓங்கியுள்ளது. அப்படியான நிலைமை இருக்கும்போது, சசிகலா வருவார் என்று எப்படி கூறுகிறீர்கள், சசிகலா இணைப்பு பற்றிய கேள்விக்கு சூரியனைப் பார்த்து.. என்று கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவர், இதற்கு எப்படி சம்மதிப்பார்? 

 

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான் ஆதரவு தருகிறார்கள். தொண்டர்கள் அனைவரும் சசிகலா பக்கம்தான் இருப்பார்கள். சூரியனைப் பார்த்து என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆமாம், அவர்கள் சூரியனை பார்த்துதானே கத்தினார்கள், இரட்டை இலையைப் பார்த்து கத்தவில்லையே! தலைவருக்குப் பிடிக்காத சூரியனைத்தானே எதிர்த்தார்கள். இவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. சூரியனைப் பார்த்துத்தான் அவர்கள் குரைத்துள்ளார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி பேசியது சரிதான். அவர் தான் வாழும் காலம்வரை சூரியனை எதிர்ப்பார். 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.