Skip to main content

"சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

jhk

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜாவை அவதூறாகப் பேசியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலரும் அன்வர் ராஜாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி மின்னல் ரவி என்கிற மின்னல் வசந்த் அவர்களிடம் இதுதொடர்பாக கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


அதிமுகவில் முன்னாள் நிர்வாகியாக இருந்திருக்கிறீர்கள், தற்போது அதிமுகவில் நடப்பவற்றைப் பார்த்துவருகிறீர்கள். நேற்றைய அதிமுக கூட்டத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள், நேற்று என்னதான் நடைபெற்றது? 

 

கட்சியில் வலுவான தலைமை இல்லை, அதனால்தான் இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது. சென்னையில் 16 தொகுதிகளையும் இழந்திருக்கிறோம். அங்கு அதிமுக சார்பாக இருக்கிற 8 மாவட்டச் செயலாளர்களையும் இந்நேரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடுத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் ஒரு பயம் இருக்கும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கட்சிக்காக உழைப்பவர்களை வைத்து கட்சி நடத்தாமல், கட்சியில் தன் ஆதரவாளர் என்ற அடிப்படையில் கட்சி நடத்தினால் தோல்விதான் நமக்கு வரும். என்னை எல்லாம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். சகிகலாவிடம் ஃபோனில் பேசினேன். அவர்களைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது யார், நீங்கள்தானே?  சசிகலா மாதிரி கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள், இவர்கள் ஹாயாக இருக்கிறார்கள். 


பொதுக்குழுவில் பிரச்சனை என்கிறார்கள், அங்கே யார் யாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு வந்த தகவல் என்ன? 

 

வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் சசிகலாவை சேர்க்கலாமா இல்லையா என்பது பற்றி பேச அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா எழுந்து பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது பழைய பகையை ஞாபகம் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் சண்முகம் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். கட்சியில் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களைத் தவிர நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தால் அனைவரும் பார்க்க தயாராக இருக்கிறார்கள். 

 

வெளியே வந்தால் சசிகலாவைப் பார்க்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வந்துவிட்டார்களே, மழை நிவாரண உதவிகளை எல்லாம் வழங்கிவருகிறார்களே, ஆனால் பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லையே? 

 

தற்போது மழை, கரோனா பாதிப்புகள் காரணமாக அவர்களால் பெரிய அளவில் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. இப்போதுதான் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். கட்சியில் அவர்கள் இணைந்தால் இந்த ஆதரவு பெரிய அளவில் இருக்கும். இது விரைவில் நடக்கும். கட்சி அவர்கள் தலைமையை விரைவில் அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரு பிறந்தநாளில் ஜெயலலிதா கூட சொன்னார்கள். "எங்கள் குடும்பத்தில் இதுவரை 60 வயதை தாண்டி யாரும் வாழ்ந்ததில்லை. ஆனால் நான் இன்றைக்கு அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன் என்றால் அதற்குக் காரணம் சசிகலாதான். இனி நான் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியும் கட்சிக்கும், மக்களும் கடுமையாக உழைப்பேன்" என்ற உறுதிமொழியைக் கொடுத்தார். அப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் இருந்தார்.

 

இனி இந்தக் கட்சியைத் தோல்வி பாதையிலிருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடியும். அந்த நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. சசிகலா நினைத்திருந்தால் சிறைச்சாலையிலிருந்து 10 நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் சசிகலா அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் இது ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதனால்தான் இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவுசெய்தது. எனவே யாரையும் கெடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.

 

அதிமுகவில் இன்னும் எடப்பாடி பழனிசாமி கைகள்தானே ஓங்கியுள்ளது. அப்படியான நிலைமை இருக்கும்போது, சசிகலா வருவார் என்று எப்படி கூறுகிறீர்கள், சசிகலா இணைப்பு பற்றிய கேள்விக்கு சூரியனைப் பார்த்து.. என்று கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவர், இதற்கு எப்படி சம்மதிப்பார்? 

 

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான் ஆதரவு தருகிறார்கள். தொண்டர்கள் அனைவரும் சசிகலா பக்கம்தான் இருப்பார்கள். சூரியனைப் பார்த்து என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆமாம், அவர்கள் சூரியனை பார்த்துதானே கத்தினார்கள், இரட்டை இலையைப் பார்த்து கத்தவில்லையே! தலைவருக்குப் பிடிக்காத சூரியனைத்தானே எதிர்த்தார்கள். இவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. சூரியனைப் பார்த்துத்தான் அவர்கள் குரைத்துள்ளார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி பேசியது சரிதான். அவர் தான் வாழும் காலம்வரை சூரியனை எதிர்ப்பார். 

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.