Skip to main content

"சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

jhk

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜாவை அவதூறாகப் பேசியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலரும் அன்வர் ராஜாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி மின்னல் ரவி என்கிற மின்னல் வசந்த் அவர்களிடம் இதுதொடர்பாக கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


அதிமுகவில் முன்னாள் நிர்வாகியாக இருந்திருக்கிறீர்கள், தற்போது அதிமுகவில் நடப்பவற்றைப் பார்த்துவருகிறீர்கள். நேற்றைய அதிமுக கூட்டத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள், நேற்று என்னதான் நடைபெற்றது? 

 

கட்சியில் வலுவான தலைமை இல்லை, அதனால்தான் இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது. சென்னையில் 16 தொகுதிகளையும் இழந்திருக்கிறோம். அங்கு அதிமுக சார்பாக இருக்கிற 8 மாவட்டச் செயலாளர்களையும் இந்நேரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடுத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் ஒரு பயம் இருக்கும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கட்சிக்காக உழைப்பவர்களை வைத்து கட்சி நடத்தாமல், கட்சியில் தன் ஆதரவாளர் என்ற அடிப்படையில் கட்சி நடத்தினால் தோல்விதான் நமக்கு வரும். என்னை எல்லாம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். சகிகலாவிடம் ஃபோனில் பேசினேன். அவர்களைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது யார், நீங்கள்தானே?  சசிகலா மாதிரி கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள், இவர்கள் ஹாயாக இருக்கிறார்கள். 


பொதுக்குழுவில் பிரச்சனை என்கிறார்கள், அங்கே யார் யாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு வந்த தகவல் என்ன? 

 

வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் சசிகலாவை சேர்க்கலாமா இல்லையா என்பது பற்றி பேச அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா எழுந்து பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது பழைய பகையை ஞாபகம் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் சண்முகம் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். கட்சியில் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களைத் தவிர நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தால் அனைவரும் பார்க்க தயாராக இருக்கிறார்கள். 

 

வெளியே வந்தால் சசிகலாவைப் பார்க்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வந்துவிட்டார்களே, மழை நிவாரண உதவிகளை எல்லாம் வழங்கிவருகிறார்களே, ஆனால் பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லையே? 

 

தற்போது மழை, கரோனா பாதிப்புகள் காரணமாக அவர்களால் பெரிய அளவில் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. இப்போதுதான் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். கட்சியில் அவர்கள் இணைந்தால் இந்த ஆதரவு பெரிய அளவில் இருக்கும். இது விரைவில் நடக்கும். கட்சி அவர்கள் தலைமையை விரைவில் அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரு பிறந்தநாளில் ஜெயலலிதா கூட சொன்னார்கள். "எங்கள் குடும்பத்தில் இதுவரை 60 வயதை தாண்டி யாரும் வாழ்ந்ததில்லை. ஆனால் நான் இன்றைக்கு அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன் என்றால் அதற்குக் காரணம் சசிகலாதான். இனி நான் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியும் கட்சிக்கும், மக்களும் கடுமையாக உழைப்பேன்" என்ற உறுதிமொழியைக் கொடுத்தார். அப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் இருந்தார்.

 

இனி இந்தக் கட்சியைத் தோல்வி பாதையிலிருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடியும். அந்த நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. சசிகலா நினைத்திருந்தால் சிறைச்சாலையிலிருந்து 10 நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் சசிகலா அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் இது ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதனால்தான் இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவுசெய்தது. எனவே யாரையும் கெடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.

 

அதிமுகவில் இன்னும் எடப்பாடி பழனிசாமி கைகள்தானே ஓங்கியுள்ளது. அப்படியான நிலைமை இருக்கும்போது, சசிகலா வருவார் என்று எப்படி கூறுகிறீர்கள், சசிகலா இணைப்பு பற்றிய கேள்விக்கு சூரியனைப் பார்த்து.. என்று கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவர், இதற்கு எப்படி சம்மதிப்பார்? 

 

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான் ஆதரவு தருகிறார்கள். தொண்டர்கள் அனைவரும் சசிகலா பக்கம்தான் இருப்பார்கள். சூரியனைப் பார்த்து என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆமாம், அவர்கள் சூரியனை பார்த்துதானே கத்தினார்கள், இரட்டை இலையைப் பார்த்து கத்தவில்லையே! தலைவருக்குப் பிடிக்காத சூரியனைத்தானே எதிர்த்தார்கள். இவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. சூரியனைப் பார்த்துத்தான் அவர்கள் குரைத்துள்ளார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி பேசியது சரிதான். அவர் தான் வாழும் காலம்வரை சூரியனை எதிர்ப்பார். 

 

 

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.