Skip to main content

அரை நிர்வாணமான வில்லங்க வீடியோவில் மந்திரி! - வேலை தருவதாக பாலியல் மோசடி!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

ddd

 

அரை நிர்வாணமான ஆண்! ஓர் இளம் பெண்ணுடன் விடுதிப் படுக்கையில் இணைந்து திறந்த மேனியைக் காட்டும் 'சம்பவ' வீடியோ’சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கவலைகள் அனைத்தும் தற்காலிகமாக மறக்கடிக்கப்பட்டன. சம்பவத்துக்கு உரிமையாளரான ரமேஷ் ஜார்கிஹோளி. வயது அதிகமில்லை. ஜஸ்ட் அறுபதுதான். இவர் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்பது கூடுதல் சிறப்பு.

 

காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலும் எம்.எல்.ஏ.வாகவும் வலம்வந்தவர். காங்கிரஸில்  அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக பா.ஜ.க.வில் இணைந்த தேசபக்தர். ‘‘காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி’’ ஆட்சியைக் கவிழ்த்ததில் மிக முக்கியப் பங்காற்றிய புண்ணியவான். அதற்குப் பரிசாக இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கோகாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவருக்கு மிகவும் பொறுப்புமிக்க நீர்ப்பாசனத்துறையை வழங்கினார்.

 

இந்த மாமனிதனின் பொறுப்பில் உள்ள நீர்ப்பாசனத்துறையின் கீழ்தான் கர்நாடகத்தில் உள்ள அணைக்கட்டுகள் அனைத்தும் சேரும். தமிழகத்துக்கு காவிரிநீர் திறப்பு, ஆந்திர - கர்நாடக நதி எல்லைகள் மேற்பார்வை, குண்டாறு - காவிரி இணைப்பு போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனைகள் நிறைந்த துறை.

 

அணைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படம் எடுப்பதற்காக உதவி கேட்டு வடகர்நாடக பகுதியைச் சேர்ந்த இளம்பெண் இவரிடம் வர, அணைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு வந்த பெண்ணை அரசு வேலை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அரவணைத்து, கலவியியல் ஆராய்ச்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

 

'ஆராய்ச்சி'ப் பணிகள் மட்டும் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தபோதுதான், அந்தப் பெண்ணிடம் தானும் அவளும் சம்பந்தப்பட்ட செக்ஸ் வீடியோ இருப்பதை தெரிந்துகொண்ட ஜார்கிஹோளி, அந்த வீடியோவைத் தரும்படியும் இல்லையேல் கொலைசெய்து அணைக்கட்டுகளில் உள்ள மீன்களுக்கு இரையாகப் போட்டுவிடுவதாகவும் மிரட்டியதுடன் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் தன் தம்பி பாலச்சந்திர ஜார்கிஹோளி மூலம் கொலைமிரட்டல் விடுக்க, பயந்துபோன அந்தப் பெண் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உதவிநாடி, தினேஷ் கல்லஹள்ளி என்ற சமூக ஆர்வலர் மூலம் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திடம் உள்ளது உள்ளபடி அனைத்து ஆடியோ, வீடியோ, வாட்ஸ் ஆப் ஆதாரங்களுடன் புகார் அளித்துவிட்டார்.

 

மிகமிக நெருக்கமாக இருக்கும் வீடியோவில் அமைச்சரின் முகம் மிகத் தெளிவாகவே தெரிகிறது. அரைகுறை உடையுடன் படுக்கையில் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள். படுக்கையில் இருந்த வேளையில் அந்தப் பெண்ணிடம், முதல்வர் எடியூரப்பா பெரும் ஊழல்வாதி என்றும் அடுத்த கர்நாடக முதல் மந்திரியாக பிரகலாத் ஜோஷிதான் நியமிக்கப்படுவார் என்றும் ரமேஷ் ஜார்கி ஹோளி கூறியுள்ளார். தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா நல்ல தலைவர் என்றும் அந்தப் பெண்ணிடம் உரையாடிக்கொண்டே உறவாடியுள்ளார். இந்நிலையில், புகாரை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

 

ஆபாச வீடியோ கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பா.ஜ.க.அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரசார் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்.

 

மாநில பா.ஜ.க. தலைவர் நளின்குமார் கட்டில், முதல்மந்திரி எடியூரப்பா ஆகியோருடன் ஆலோசித்த பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங், அமைச்சரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். கட்சியை விட்டும் தூக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் ராஜினாமா செய்தார் ரமேஷ் ஜார்கிஹோளி. தான் ராஜினாமா செய்வதற்கு முன்பு முதலமைச்சர் எடியூரப்பாவிடம், தனது துறையை அவரே வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அடுத்தமுறை மந்திரிசபை விரிவாக்கம் செய்யும்போது தம்பி பாலச்சந்திர ஜார்கிஹோளிக்கு மந்திரி பதவி வழங்கி நீர்ப்பாசனத் துறையை தம்பிக்கே ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டிக்கேட்டுக்கொண்டதுதான் இதில் ஹைலைட்.

 

- சுந்தர் சிவலிங்கம்

 

 

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.