இந்தியாவில் கடைசிக்கட்டமாக மே 19 அன்று நடக்கும் வாக்குப்பதிவில் குறைகள் ஏதேனும் இருந்தால் அன்றைய தினம் மாலையே தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குத் தெரியவரும். உட னே மறுவாக்குப் பதிவு நடத்தி அந்த முடிவுகளையும் சேர்த்து மே 23 அன்று ஒட்டுமொத்த முடிவாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் எத்தனை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரம் ஆகியவை சரியாக பயன்படுத்தப்பட்டன என ஒரு ரிப்போர்ட் ஏப்ரல் 19-ஆம்தேதி காலையில் தமிழக தேர்தல் ஆணையரான சத்யபிரதா சாஹுவுக்கு வந்துவிடும். ஆனால், தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என தேனி மக்களவை தொகுதிக்கான 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் ரகசியமாக கோவையிலிருந்து கொண்டுவரப் பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பிய பிறகு தமிழக தேர்தல் கமிஷனர் வாய் திறந்தார்.
ஏன் இந்த தாமதம் என கேட்டதற்கு, "நாங்கள் டெல்லிக்கு தகவலை தந்துவிட்டோம். டெல்லியின் அனுமதிக்காக காத்திருந்தோம்' என்கிறார் தமிழக தேர்தல் கமிஷனர். இது தவறு, 46 வாக்குச்சாவடிகளில் குளறுபடி என்றால் 46-க்கும் மறு தேர்தல் என டெல்லி தேர்தல் கமிஷன் சொல்லும். வெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த டெல்லி தேர்தல் கமிஷன் உத்தரவிடாது'' என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.
"சத்யபிரதா சாஹு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதிபோல செயல்படுகிறார். அரசியல்வாதிகளை எப்படி சமாளிப்பது என்பதும் அவருக்குத் தெரியும். குடிநீர் வாரிய அதிகாரியாக அவர் ஆடிய ஆட்டம் எல்லாருக்கும் தெரியும். 50 ஆயிரம் இல்லாமல் ஒரு சின்ன பேப்பர் கூட நகராது. துறை அமைச்சரை குளிர்வித்து விடுவார். அவர் ஒருபக்கம் அமைச்சர் வேலுமணியின் கையாளாக இருந்து கொண்டே தி.மு.க. தலைவரான ஸ்டாலினின் மகனான உதயநிதியை ஒரு ஸ்டார் ஓட்டலில் ஒரு டி.வி.யின் சினிமா ரிப்போர்ட்டர் மூலம் அடிக்கடி சந்தித்துப் பேசினார்'' என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். "தி.மு.க. தரப்பிலிருந்து சத்ய பிரதா சாஹுவை நேரடியாக குற்றம் சாட்டுவதில்லை. அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி, கடுமையான போட்டிக்கிடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓட்டு மெஷின் மூலம் ஒரு ஆபரேஷனை சாஹு நடத்த திட்டமிட்டார். இதேபோலத் தான் 2016-ல் ஜெ. ஆட்சியில் நடத்தப்பட்டது. அதனால்தான் 1.1% வித்தியாசத்தில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றது'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். தற்போது சாஹு கடைப்பிடிக்கும் இந்த மறு வாக்குப்பதிவு ரகசியம் இணை ஆணையரான பாலாஜிக்குக்கூட தெரியாதாம்.
- சக்தி, ஜீவாதங்கவேல்.