Skip to main content

1849 ஆம் ஆண்டு பயன்படுத்திய தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் கண்டுபிடிப்பு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தமிழ் எண்கள் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டும் வகைளில் அடுத்தடுத்து தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


தஞ்சாவூர்  மாவட்டம் செங்கிப்பட்டியில், திருச்சி -  தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின் அருகே தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட இரண்டு மைல்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

வித்தியாசமான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் கிடப்பதாக கந்தர்வகோட்டை ஒன்றியம் குரும்பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் , ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் து.மணிசேகரன் ஆகியோரடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். 

 

thanjavur sengipatti



 

அதில் திருச்சி, தஞ்சாவூர் இடையே 1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சாலை மேம்பாட்டு பணியின் போது நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் என அடையாளம் கண்டுள்ளனர்.
 

இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
 

தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் எங்கள் குழுவினரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூழியான்விடுதி, ஆதனக்கோட்டை, அன்னவாசல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரி, தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளைநாயக்கன் பட்டி, செங்கிப்பட்டி கீரனூர் விலக்குச்சாலை ஆகிய இடங்களில் அடையாளம் கண்டுள்ளோம், தற்போது செங்கிப்பட்டியில் மேலும் இரண்டு மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 
 

மைல் கல் நடப்பட்ட காலம்  
 

ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியாக, தஞ்சாவூருக்கு செல்லும் ஏழாம் எண் சாலை, 1849 ஆம் போடப்பட்டது என்றும், இது கப்பிச்சாலையாகவும், பாலத்துடனும், நல்ல நிலையில் இருந்ததாக “லீவிஸ் மூர் ” என்ற ஆங்கிலேயர் 1878 ஆம் ஆண்டு ஜூன் 28 தேதியிட்ட “மேனுவல் ஆப் தி திருச்சினாப்போளி டிஸ்டிரிக்ட்” என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்தச்சான்றின் மூலம் மைல்கல் நடப்பட்ட ஆண்டை உறுதிசெய்ய முடிகிறது.
 

தமிழ் எண் மைல் கல் கல்வெட்டு 

 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு மைல்கற்களும் வெவ்வேறு இடங்களில் நடப்பட்டவை என்பதை பொறிக்கப்பட்டுள்ள தூரத்தை அடிப்படையாகக்கொண்டு உறுதி செய்ய முடிகிறது. 


 

முதலாவது மைல் கல் தற்போதைய செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், இரண்டாவது மைல்கல் துவாக்குடி அருகேயும் நடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
 

முதலாவது மைல்கல்லில், தஞ்சாவூர் 16  என அரபு எண்ணிலும், “ய௪” என்று தமிழ் எண்ணிலும் , தொடர்ச்சியாக திருச்சினாப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)  18 மைல் என்பதை, ய௮ என தமிழ் எண்ணுடனும் குறிக்கப்பட்டுள்ளது. 
 

இரண்டாவது மைல் கல்லில் தஞ்சாவூர் 21 என அரபு எண்ணிலும் “௨ய௧” என தமிழ் எண்ணிலும் , திருச்சிநாபளி (திருச்சிராப்பள்ளி) 13 என அரபு எண்ணிலும், ய௩ தமிழ் எண்ணிலும்  குறிக்கப்பட்டுள்ளது.
 

இந்த இரண்டு கல்வெட்டிலும் முதலாவதாக ஆங்கிலத்தில் ஊர்ப்பெயரும் , அதன் கீழே அரபு எண்ணில் தூரமும், இரண்டாவதாக தமிழ் எழுத்தில் ஊர்ப்பெயரும் அதன் கீழே தமிழ் எண்ணில் தூரமும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டில்,  எந்தக்காலம் வரை பயன்பாட்டில் இருந்தது, என்பதற்கான முக்கியத்துவமான சான்றாக உள்ளது.
 

தமிழ் எண் மைல்கல் ஆய்வு
 

எமது குழுவினரால் மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மைல்கல் கல்வெட்டில், ஆதனக்கோட்டை “ய௬” அதாவது 16 மைல் என்றும், தஞ்சை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை “௧௪ “ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வருபவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டுள்ளதை உறுதிசெய்தோம்.
 

தற்போது அடையாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், ஒருபக்கம் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள தன்மை , கல்லின் வடிவம் ஆகியவற்றை ஒப்புநோக்கும்போது இம் மைல்கற்கள் ஒரே காலத்திலானவை என்றும், தஞ்சையில் தமிழ் மற்றும் அரபு எண்களும், புதுக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண்களும், இருப்பது அறியமுடிகிறது. 

 

thanjavur sengipatti


 

இதன் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்றிருந்ததும், தஞ்சை, திருச்சி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் அரபு எண்கள் முன்னிலைப் பெற்றிருந்திருப்பதையும், அறிந்துகொள்ள முடிகிறது.
 

தமிழ் எண்களின் பயன்பாடும் வீழ்ச்சியும்
 

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோமன் மற்றும் அரபிய எண்கள் வெளிநாட்டவருக்கான எண்ணாகவும்,  மக்கள் பயன்பாட்டில் தமிழ் எண்கள் மட்டுமே இருந்துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான தொல்லியல் சான்றாக, தமிழ் எண் மைல்கல்  கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான் மக்கள் பயன்பாட்டிலிருந்து வழக்கொழிந்து போயிருக்கிறது  என்பதை  உணர முடிகிறது, என்றார். 
 

 

 

 


 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.