Skip to main content

ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்ததை நினைத்து எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார்! - அதிமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்தரராஜன்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

hj


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் முதல்வராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில், அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது இருந்த அதிமுகவையும், தற்போது இருக்கின்ற அதிமுகவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? 


எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக என்பது அண்ணாவின் கொள்கைகளை அப்படியே தாங்கி உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். அதனால், தான் அண்ணாவின் அரசியலை எம்ஜிஆர் தொடர்ந்து கொடுத்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் அண்ணா என்ன நினைத்தாரோ அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அண்ணாவின் பெயரையே தன்னுடைய கட்சிக்கு அவர் வைத்தார். அண்ணாவின் படத்தைக் கொடியில் வைத்து மரியாதை செய்தார். எம்ஜிஆர் இருந்த வரையில் அதிமுக சரியாக இருந்தது என்றாலும் ஜெயலலிதாவின் வருகைக்குப் பிறகு அதிமுக சிறிது மாற ஆரம்பித்தது. இதனால் அப்போது நான் எம்ஜிஆரிடம் சென்று சண்டையிட்டேன். உங்களுக்குத் திரைத்துறையில் எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாம் அண்ணா, பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துகிறோம். அதில், நமது கொள்கைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு ஆளை இங்கே கொண்டு வருவது மிகவும் தவறு, அது நம் கட்சியையே சீரழித்துவிடும் என்று கூறினேன். 


இதற்கு எம்ஜிஆரின் பதில் என்னவாக இருந்தது, நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாரா? 
 

இதற்குப் பதில் சொல்லக்கூடிய மன நிலையில் அவர் இல்லை. அவர் ஒரு மயக்கத்தில் இருந்தார், என்னிடம் வாதாட அவர் விரும்பவில்லை. நான் கேட்கும் கேள்விகள் எல்லாம் நிஜமானது. இந்த இயக்கம் ஆரம்பிக்கும் போது எம்ஜிஆர் என்னை அழைத்து 10 மணி நேரம் பேசினார். அவருடைய வரலாறு, திமுக செய்கின்ற தவறுகள், அண்ணாவின் எண்ணங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நேருக்கு நேராக என்னிடம் பேசினார். இதை ஜெயலலிதா வருகைக்குப் பிறகு நான் அவரிடம் எடுத்துச் சொன்னேன். என்னிடம் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு எவ்வளவோ எடுத்துக் கூறிவிட்டு, தற்போது இவர்களைக் கட்சியில் கொண்டு வருகிறீர்களே என்றேன். அவரிடம் பதில் இல்லை. பின்னாளில் உங்கள் புகழுக்குக் கூட களங்கம் வரும், நீங்கள் வருத்தப்படக் கூடும் என்றேன். ஆனால் அதனால் அப்போது எந்தப் பயனுமில்லை. 


பின்னாளில் எம்ஜிஆர் இது குறித்து உங்களிடம் வருத்தப்பட்டது உண்டா?


நிறைய வருத்தப்பட்டிருக்கார். நக்கீரன் பதிப்பகத்தில் வெளிவந்த 'வணக்கம்' புத்தகத்தில் எம்ஜிஆர் இதனால் அழுதிருக்கிறார் என்று வலம்புரி ஜான் பதிவு செய்திருக்கிறார். அதுவும் 1984ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கிய பிறகு எம்ஜிஆரை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தினார் அந்த அம்மையார். எம்ஜிஆர் எதற்காக அந்த அம்மையாரை கட்சிக்குக் கொண்டு வந்தாரோ அது 84ம் ஆண்டுக்குப் பிறகு நிறைவேறவில்லை. அதனால் பின்னாளில் அவர் வருந்தியிருக்கிறார், அழுதிருக்கிறார். இது எல்லாம் நடந்தது என்பது மட்டும் உண்மை. 

 

2021 தேர்தலுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினீர்கள். அதில் அதிமுக பாஜக கூட்டணி வைக்கக் கூடாது, அப்படி அமைந்தால் அது தற்கொலைக்குச் சமம் என்று தெரிவித்திருந்தீர்கள். தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 

நான் என்ன சொன்னேனோ அதுதான் தற்போது நடைபெற்றுள்ளது. அதனை பன்னீர்செல்வம், எடப்பாடி இருவரும் தற்போது உணர்கிறார்கள். அதைத்தான் நான் முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன். ஆகையால் அதிமுகவுக்கு பாஜகவால் அழிவு என்பதுதான் தற்போது ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி போவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பாஜக கூட்டணி என்பது மிக முக்கியக் காரணமாக அமைந்தது. தமிழக மக்களுக்கு மன்னித்து விடும் மனநிலை உண்டு. ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என்று நினைத்ததால், இந்த தோல்வி அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளது. 


 


 

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.