Skip to main content

"எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை..." - புலவர் புலமைப்பித்தனின் அறியப்படாத பக்கங்கள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

pulamaipithan

 

கவிஞரும் தமிழ்நாடு சட்டமேலவையின் முன்னாள் துணைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

 

கடந்த 28ஆம் தேதி, திடீர் உடல்நலக் கோளாறால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தன், இன்று (08.09.2021) காலை 9.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தன், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார்.

 

1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோவையில் உள்ள பள்ளப்பாளையத்தில், கருப்பண்ணனுக்கும் தெய்வானை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் புலமைப்பித்தன். இயற்பெயர், ராமசாமி. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டுவந்தார். அதன் பிறகு, 12 ஆண்டுகள் தமிழாசிரியராக கோவை, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார்.

 

1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அப்போது சில காலம், அவர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பிறகு எம்.ஜி.ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதன்முதலில், 1968ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், 'நான் யார் நான் யார்...' என்ற பாடலை எழுதியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றார். அதன்பிறகு ‘அடிமைப் பெண்’ படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே...' பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போதும் அதிமுக மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும், 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...', 'ஓடி ஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...' போன்ற பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 'சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே', புஞ்சை உண்டு நஞ்சை உண்டு...' போன்ற பல புகழ்பெற்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

 

pulamaipithan

 

திமுகவில் இருந்து அதிமுக பிரிந்தபோது, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் புலமைப்பித்தனும் ஒருவர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் புலமைப்பித்தன். மேலும், அதிமுகவின் அவைத்தலைவர், தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞர், சட்ட மேலவையின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அலங்கரித்தவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்று நடந்துவந்த புலமைப்பித்தன், இப்போதைய அதிமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துவந்தார். மதவாதக் கட்சிக்கு இணையாக அதிமுகவை மாற்றிவிட்டனர் என வேதனைக் குரல் எழுப்பினார். அதேபோல், சசிகலாவுடன் யாரும் பேசக்கூடாது எனக் கட்சித் தலைமை கட்டளை போட்டபோது, அலட்டிக்கொள்ளாமல் சசிகலாவுடன் நட்பு பாராட்டிவந்தவர். அதன் வெளிப்பாடாகத்தான் நேற்று மருத்துவமனைக்கு வந்து நேரில் நலம் விசரித்துச் சென்றார் சசிகலா.

 

பாடலாசிரியர், மூத்த அரசியல்வாதி என்பது மட்டுமல்லாமல், தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவும் அறியப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், புலமைப்பித்தன் வீட்டில் தங்கிச்சென்று இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் புலமைப்பித்தன். எந்த அளவுக்கு என்றால், "புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம்" என்று விடுதலைப் புலிகளே சொல்லும் அளவுக்கு நெருக்கத்தில் இருந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றவர் புலமைப்பித்தன்.

 

எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோவி’லில் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப் பயணம், நடிகர் விஜய்யின் 'தெறி' படத்தில் 'வாழ்கென தூய செந்தமிழ்...' பாடல்வரை தொடர்ந்தது. எதிர்க் கூடாரத்தில் இருந்தாலும், கடைசிவரை கலைஞரிடம் நட்புடன் இருந்தவர் புலமைப்பித்தன். சமீபத்தில், புலவர் புலமைப்பித்தன் எழுதிய, 'நாயகன்’ எனும் அனுபவத் தொடர், நமது நக்கீரன் இதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.