Skip to main content

'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு!

Published on 17/01/2020 | Edited on 21/01/2022

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடக கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகளை கொண்ட அவர், அரசியலிலும், சினிமாவிலும் யாரும் தொடாத உச்சத்தை தொட்டார். கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் ஆட்சியை பிடித்த என்.டி ராமாராவ் தனக்கு குருநாதர் எம்ஜிஆர் தான் என்று கூறியதே அரசியலில் இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சை புரிந்துகொள்ள போதுமானது. அத்தகைய ஆளுமையை அவர் ஒரே இரவிலோ அல்லது ஒரு படத்தின் வெற்றியிலோ அவருக்கு  கிடைத்துவிடவில்லை. அளவிட முடியாத கடினமான உழைப்பே அவர் சினிமாவில் சாதிக்க உதவியது என்றால், தமிழக மக்களின் கனிவான பார்வை அவர் அரசியலில் சாதிக்க ஏதுவாக  இருந்தது. 40-களின் ஆரம்பத்தில் திரையில் உதவி நடிகராக தலைகாட்டிய அவர், 50-களில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவர் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். 

 

mgr



நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் காட்டிய அந்த கடின உழைப்பை தன் உயிர் மூச்சு இருக்கும் வரையில் தொடர்ந்த காரணத்தால் தான், தமிழக மக்கள் அவரை மூன்று முறை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தனர். தனக்கு வாய்ப்பு தேடி அலைந்த அந்த நாட்களிலும், வாய்ப்புக்கள் வந்து குவிந்து கைநிறைய சம்பாதித்த அந்த நாட்களிலும் அவரிடம் மாறாதது, இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாத அந்த கருணை உள்ளம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தத போதும், பிறகு முதல்வராக பதவி வகித்த போதும் அவரிடம் மாறாதது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்கள், நண்பர்கள் என யாரையும் அவர் மறக்காததும், அவர்களின் இன்ப துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வது என்று அதில் உறுதியாக இருந்தார். எதுகை மோனைகளில் அவருக்கு பேச தெரியாவிட்டாலும், நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் இல்லாதவர் அவர், என்பதை பல சமயங்களில் அவரே நிரூபித்து உள்ளார். 1977ம் ஆண்டு அவர் முதல்வர் ஆன சமயம், அவர் உதவியால் படித்து பட்டம்பெற்ற துரைமுருகன் அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் அரை மணிநேரத்திற்கு மேலாக மூச்சுவிடாமல் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் எம்ஜிஆரின் கண்ணசைவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அவர், துரைமுருகனை பார்க்கிறார், ரசிக்கிறார். இதை துரைமுருகனும் கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார். 
 

mgr



கீழே விழுந்த அவரை ஒருசில வினாடி இடைவெளியில் ஒரு கை தாங்கி பிடிக்கிறது. அந்த கை வேறு யாரும் அல்ல. யாரை தாக்கி பேசி அவர் மயக்கமடைந்தாரோ அந்த வார்த்தை தாக்குதலுக்கு உள்ளான எம்ஜிஆர் தான் அவரை தாங்கி பிடித்தார். தன்னால் வளர்க்கப்பட்டு வாழ்க்கை கொடுத்த ஒருவரின் தாக்குதலை தாயை சீண்டும் குழந்தையிடம் தாய் காட்டும் கோவத்தை கூட அவர் காட்டவில்லை என்பதே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டிய நேசத்துக்கு ஒரு சிறிய உதாரணம். தன்னை வாழ்நாள் எல்லாம் எதிர்ப்பதையே கடமையாக வைத்திருந்தவர்களை கூட முதலாளி என்று கூப்பிட்டு முதல் நபராக மதித்தார். தன்னை எதிர்த்தவர்கள் மீதே இந்த அளவு நேசம் காட்டினார் என்றால், தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மீது அவர் காட்டிய நேசம் என்றும் அளப்பறியது, யாராலும் அளவிட முடியாதது. முதல்வராக அவர் பதவி வகித்த நேரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் சிவகாசிக்கு செல்கிறார். உச்சி வெயில் முகத்தில் அடித்த அந்த மதிய நேரத்தில் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய்மார்கள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்ட அவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் உணவருந்தினீர்களா? என்று கேட்டுள்ளார். அவர்கள் தங்களின் அம்மாவை பார்க்கவே நிலைமையை புரிந்துகொண்ட எம்ஜிஆர்,  உடனடியாக தொடங்கியதே சத்துணவு திட்டம்.

 

mgr



பள்ளிக் குழந்தைகளின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்பொடி வழங்குவதில் தொடங்தி காலுக்கு காலணி வழங்கும் வரை அது தொடர்ந்தது. அவரின் இந்த மக்கள் நலத்திட்டங்களே அவரை பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கடவுளாக, கடவுளக்கும் மேலாக அவரை இன்றும் பொதுமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கான விதை, அவர் போட்ட மக்கள் நலன் கொண்ட திட்டங்களே ஆகும். அதனால்தான் என்னவோ மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் தோன்றி மறைவது இயற்கை என்றாலும், மக்களுக்காக வாழ்ந்த அவரின் இறப்பை அதனால்தான் என்னவோ இன்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். உயிர் வேண்டுமானால் அவரை விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரின் புகழை கூட இதுவரை யாரும் நெருங்கவில்லை, நெருங்கப்போவதுமில்லை. ஏனென்றால் அவர் எம்ஜிஆர்!!


 

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.